Saturday, March 3, 2018

சினிமாவிற்கு கதை எழுதுவது எப்படி.


சினிமாவிற்கு எழுதப்படும் கதைக்கு மூன்று வடிவம் நிலைகள் இருக்கின்றன..

முதலாவது அந்தக் கதையின் சுயவடிவம்.இரண்டாவது அக்கதையைச் சினிமாவிற்காக பண்படுத்துதல் அல்லது மாற்றி அமைத்தல்.இதைத்தான் 'டிரீட்மென்ட்' என்கிறார்கள்.மூன்றாவது படங்களாகவே கதையை எழுதுவது.இதை 'சினாரியோ' என்றும் 'ஸ்கிரிப்ட்' என்றும் சொல்கிறோம்.

ஒவ்வொரு கதையிலும்..ஒரு முக்கிய சம்பவம் இருக்கிறது.அதேபோல ஒவ்வொரு கதையிலுமொரு தனித் தத்துவம் அல்லது அடிப்படையான கருத்து அடங்கி இருக்கிறது.ராமாயணத்தில் 'ஆதர்ஷ புருஷனின் லட்சணங்கள்' ஒரு அடிப்படைத் தத்துவம்.மார்க்கண்டேயன் கதை 'விதியை மதியால்' வெல்லலாம்..என்னும் அடிப்படைக் கருத்தின் மேல் கட்டப்பட்டது.கண்ணகி கதை 'ஒரு கற்புக்கரசியின் கோபம் உலகையே எரித்துவிடும்' என்ற கருத்தின் மேல் எழுந்தது.

எனவே, சினிமாவிற்குக் கதை எழுதுகிறவர் முதலில் அந்தக் கதையின் அடிப்படைக் கருத்து என்ன என்பதை முதலில் நிச்சயம் செய்துக் கொள்ள வேண்டும்.அந்தக் கருத்தை விளக்கிச் சொல்வதற்காகத்தான் கதை எழுதப் படுகிறது.ஆகையால் கதையின் ஆரம்பம், வளர்ச்சி,முடிவு எல்லாம் அதை விளக்குவதற்காகவே அமைக்கப் பட வேண்டும்.

அதே போல.. கதை தங்குத் தடையின்றி மட மட என நகர வேண்டும்.அனாவசியமாக நிற்கக் கூடாது.ஒரு சம்பவத்திற்குப் பிறகு அடுத்தது...அதற்கடுத்தது என்று, நிற்காமல் மேலே மேலே போய்க்கொண்டே இருக்க வேண்டும்.படத்தில், கதையை நேருக்கு நேர் நடப்பது போலவே பார்ப்பதால் அது வேகமாக நகராவிட்டால் சலிப்புத் தட்டிவிடும்.ருசி குறைந்துவிடும்

(சிறுகதை எழுத்தாளர்,நாடக ஆசிரியர், சினிமா கதை,வசனகர்த்தா ஆகிய பி.எஸ்.ராமையா எழுதிய சினிமா என்னும் நூலிலிருந்து...
இப்புத்தகம் இப்போது கிடைக்குமா எனத் தெரியவில்லை.யாரிடமாவது இருந்தால் வாங்கிக் கொள்கிறேன்.தெரிவிக்கவும்.
பி.எஸ்.ராமையா நாலு வேலி நிலம், போலீஸ்காரன் மகள்..ஆகிய திரைப்படங்களின் கதைக்கு சொந்தக்காரர் ஆவார்)

No comments: