Thursday, April 2, 2015

குறுந்தொகை-204



பாங்கன் கூற்று
(தலைவனைப் பாங்கன் இடித்துரைத்தது.)

குறிஞ்சி திணை- பாடலாசிரியர் மிளைப்பெருங் கந்தன்

இனி பாடல்-
 
காமங் காம மென்ப காமம்
   
அணங்கும் பிணியு மன்றே நினைப்பின்
   
முதைச்சுவற் கலித்த முற்றா விளம்புல்
   
மூதா தைவந் தாங்கு

விருந்தே காமம் பெருந்தோ ளோயே.


                       -மிளைப்பெருங் கந்தன்.
    பெரிய தோளையுடையதலைவ,  காமம் காமமென்று அதனைஅறியார் இகழ்ந்து கூறுவர்; அக்காம மானது, வருத்தமும் நோயும் அன்று ,பழங்கொல்லையாகிய மேட்டு நிலத்தில்தழைத்த,  முதிராத இளைய புல்லை,முதிய பசு,  நாவால் தடவி இன்புற்றாற்போல,  நினைக்குங் காலத்து,  அக்காமம் புதிய இன்பத்தை யுடையதாகும்.

 

    (கருத்து) காமம் நம்முடைய அறிவின் எல்லைக்கு உட்பட்டது.

    (இளம்புல்லைத் தடவிய அளவில் முதிய பசு இன்புற்றதற்குக் காரணம்அப் புல்லின் சுவையன்று; பசுவின் ஆர்வமே. அதன் ஆர்வத்தளவுஅவ்வின்பம் நிற்றலைப் போலக் காமமானது நமது நினைப்பினளவிற்புதுமை யின்பத்தைத் தருவதாகின்றது.) 

No comments: