Friday, March 13, 2015

குறுந்தொகை-199



தலைவன் கூற்று
(தாய் முதலியோர் தலைவியை வீட்டிற்கு அழைத்துச் செல்லஎண்ணியிருப்பதைத் தோழியால் அறிந்த தலைவன், “இனி இவளைப்பெறுவது அரிது போலும்! ஆயினும் என் காமநோய் என்றும் அழியாதது;பிறவிதோறும் தொடர்ந்து வருவது” என்று நெஞ்சை நோக்கிக் கூறியது.)

குறிஞ்சி திணை- பாடலாசிரியர் பரணர்

இனி பாடல்-

 
பெறுவ தியையா தாயினு முறுவதொன்
   
றுண்டுமன் வாழிய நெஞ்சே திண்டேர்க்
   
கைவள் ளோரி கானந் தீண்டி
   
எறிவளி கமழு நெறிபடு கூந்தல்

மையீ ரோதி மாஅ யோள்வயின்
   
இன்றை யன்ன நட்பி னிந்நோய்
   
இறுமுறை யெனவொன் றின்றி
   
மறுமை யுலகத்து மன்னுதல் பெறுமே.


                                  -பரணர்

   

நெஞ்சே. திண்ணிய தேரையுடைய, கைவண்மையையுடைய ஓரியினது, கானத்தைத் தீண்டி,  வீசுகின்றகாற்றைப் போல, மணக்கின்ற, நெறிப்பு அமைந்த கூந்தலாகிய,மையைப்போன்ற தண்ணிய மயிரையுடைய, .மாண்மையை உடையோளிடத்து,  இன்றை நிலையைப் போன்று என்றும் உள்ளநட்பையுடைய இந்தக் காமநோயானது, அழியுமுறை என்பது ஒன்று இல்லாமல். மறுமையில் வாழ்தற்குரிய உலகத்திலும்,  நிலைபேற்றை அடையும்; ஆதலின்,  தலைவியை இப்பிறவியின்கண் பெறுதல் நம்மாட்டுப் பொருந்தாதாயினும், மறுமை யுலகத்துப் பெறுவதாகியநாம் அடையும் பயன் ஒன்று உண்டு.

 

    (கருத்து) இனி இப்பிறப்பில்  தலைவியைக் காணமுடிவதில்லை

No comments: