Thursday, November 13, 2014

குறுந்தொகை-154



தலைவி கூற்று
(பொருளீட்டும் பொருட்டுத் தன்னைப் பிரிந்து சென்ற தலைவனை நினைந்து, “என்னைப் பிரிந்து நெடுந்தூரத்தில்தங்கும் வன்மையை அவர் எங்ஙனம் பெற்றார்?” என்று தலைவி தோழியை நோக்கிக் கூறியது.)

பாலைத் திணை- பாடலாசிரியர் மதுரை சீத்தலைச் சாத்தன்.

இனி பாடல்-
 
யாங்கறிந் தனர்கொ றோழி பாம்பின்
   
உரிநிமிர்ந் தன்ன வுருப்பவி ரமையத்
   
திரைவேட் டெழுந்த சேவ லுள்ளிப்
   
பொறிமயி ரெருத்திற் குறுநடைப் பேடை

பொரிகாற் கள்ளி விரிகா யங்கவட்டுத்
   
தயங்க விருந்து புலம்பக் கூஉம்
   
அருஞ்சுர வைப்பிற் கானம்
   
பிரிந்துசே ணுறைதல் வல்லு வோரே.

                              -மதுரை சீத்தலைச் சாத்தன்.

  உரை-

பாம்பினது உரி மேலெழுந்தாற்போன்ற கானல் விளங்குகின்ற நண்பகற் காலத்தில் இரையை விரும்பி மேலெழுந்து சென்ற ஆண்பறவையை நினைத்து, புள்ளிகளையுடைய மயிர் பொருந்திய கழுத்தையும், குறுக அடியிடும் நடையினையும் உடைய பெண் புறாவானது பொரிந்த அடியையுடைய கள்ளியினது வெடித்த காயையுடைய அழகிய கிளையில் விளங்கும்படி இருந்து தனிமை தோன்றும்படி கூவுகின்ற கடத்தற்கரிய வழியையுடைய இடமாகிய பாலை நிலத்தை கடந்து நெடுந்தூரத்தில் தங்குதலில் வன்மையுடைய தலைவர் , அவ்வன்மையை எவ்வாறு தெரிந்து கொண்டனர்,

 

(கருத்து) தலைவர் என்னைப் பிரிந்து எங்ஙனம் ஆற்றியிருக்கின்றனர்?

No comments: