Wednesday, October 15, 2014

குறுந்தொகை-132



தலைவன் கூற்று
(பேரறிவுடைய நீ ஒரு மகள் திறத்து உள்ளமுடைதல் அழகோவென இடித்துரைத்த பாங்கனை நோக்கித் தலைவியின் இயல்பும் வனப்பும் கூறி, “ இத்தகைய தன்மையுடையாளை நான் எப்படி மறப்பேன்!” என்று தலைவன் சொல்லியது.)

குறிஞ்சித் திணை - பாடலாசிரியர் சிறைக்குடியாந்தையார்

இனி பாடல்
 
கவவுக் கடுங்குரையள் காமர் வனப்பினள்
 
குவவுமென் முலையள் கொடிக்கூந் தலளே
 
யாங்குமறந் தமைகோ யானே ஞாங்கர்க்
 
கடுஞ்சுரை நல்லா னடுங்குதலைக் குழவி

தாய்காண் விருப்பி னன்ன்
 
சாஅய்நோக் கினளே மாஅ யோளே.

என்பது கழற்றெதிர்மறை.

                     - சிறைக்குடியாந்தையார்

உரை-
 தோழனே! மாமையையுடைய தலைவி தழுவுவதில் விரைவுடையவள்.விருப்பம் தரும் வனப்பை யுடையவள்.குவிதலையுடைய மெல்லிய மார்பகங்களை உடையவள்.நீட்சியையுடைய கூந்தலையுடையவள்,
பக்கத்தில் மேயச் சென்ற மிக்க சுரப்பையுடைய நல்ல பசுவினது ,நடுங்கும் தலையையுடைய கன்று அத் தாய்ப்பசுவைக் கான வேண்டும் எனும் விருப்பத்துடன் இருந்தாற் போன்ற விருப்பத்தை வெளிப்படுத்தும் மெலிந்த பர்வையையுடையவள்.அப்படிப்பட்டவளை எப்படி மறந்து இருப்பேன்!




     (கருத்து) தலைவி மறத்தற்கரிய இயல்புடையவள்.


     ‘கன்று பசுவைப் பார்த்திருத்தலைப் போன்ற விருப்புடையளாதலினாலும், மனங்கவரும் இயல்பினளாதலினாலும் அவளை மறந்து அமைதல் அரிது’ என்று தலைவன் கூறினான்.
     தலைவனுக்குப் பசுவும், தலைவிக்குக் கன்றும் உவமை

No comments: