Friday, October 3, 2014

குறுந்தொகை - 123



தோழி கூற்று
(தலைவன் பகலில் வந்து மறைந்து நிற்க, “தலைவர் இன்னும் பாணிப்பாராயின் நம் தமையன்மார் மீன்வேட்டையினின்றும் திரும்பி வருவாராதலின் அவர் நம்மைக் காண்டலரிது; இப்பொழுதே வருவாராயின் நன்றாகும்” என்னும் கருத்துத் தோன்றத் தோழி தலைவிக்குக் கூறியது.)

நெய்தல் திணை - பாடலாசிரியர் ஐயூர் மடவன்

இனி பாடல்-
 
இருடிணிந் தன்ன வீர்ந்தண் கொழுநிழல்
   
நிலவுக்குவித் தன்ன வெண்மண லொருசிறைக்
   
கருங்கோட்டுப் புன்னைப் பூம்பொழில் புலம்ப
   
இன்னும் வாரார் வரூஉம்

பன்மீன் வேட்டத் தென்னையர் திமிலே.

                   -ஐயூர் முடவன்

உரை-

நிலவைத் தொகுத்தாற் போன்ற தோற்றத்தையுடைய வெள்ளிய மணற்பரப்பின் ஒரு பக்கத்தில் உள்ள இருள் செறிந்தாற் போன்ற ஈரமும் குளிர்ச்சியுமுடைய கொழுவிய நிழலையுடைய கரிய கிளைகளையுடைய புன்னை மரங்கள் அடர்ந்த பூஞ்சோலை தனிமைப் பட்டிருப்ப தலைவர் இன்னும் வந்தாரில்லர்.பலவகை மீன்களை வேட்டையாடுதலையுடைய தமையன்மார் ஏறிச் சென்ற மீன் படகுகள் மீண்டு வரும்.


     (கருத்து) தலைவர் இப்பொழுதே வருதல் நலம்.

 ( பகலில் தலைவியைக் கடற்கரைப் பொழிலிற் கண்டு இன்பந் துய்த்துவரும் தலைவன் ஒரு நாள் அங்கே தலைவி அறியாதவாறு அவளும் தோழியும் பேசுவனவற்றை அறிந்து மகிழும் அவாவினால் மறைந்திருந்தான். அவன் வந்திலனென்று கருதிய தோழி பின்பு அவன் அருகில் மறைந்திருப்பதை உணர்ந்து அவன் கேட்கவேண்டுமென்னும் கருத்தோடு தலைவிக்குச் சொல்லுவாளாய் இதனைக் கூறினாள்.)

   

     “தலைவர் இதற்குள் வந்திருத்தல் வேண்டும். இனி வருவதற்குத் தாமதமானால் மீன்வேட்டைக்குச் சென்ற நம் தமையன்மார் மீண்டு வந்துவிடுவர் ஆதலால், இங்கே நிற்பது இயலாதாகும்” என்று தலைவன் அறியும்படி கூறினாள். இதற்குப் பயன் தலைவன் உடனே மறைவினின்றும் வெளிவந்து தலைவியைக் காண வேண்டும்" என்பதாம்.

No comments: