Tuesday, August 26, 2014

குறுந்தொகை - 89



தோழி கூற்று
(தலைவி தலைவன் பெயரை வள்ளைப்பாட்டில் அமைத்துப் பாடினாளாக, அதனைக் கேட்ட ஊரினர் அலர் தூற்றுதலைத் தோழி தலைவன் சிறைப்புறத்திலிருக்கும் பொழுது புலப்படுத்தி, விரைவில் திருமணம் செய்து கொள்ளல் நலமென்பதை உணர்த்தியது.)
 

மருதம் திணை - பாடியவர் பரணர்.

இனி பாடல்-

பாவடி யுரல பகுவாய் வள்ளை
   
ஏதின் மாக்க ணுவறலு நுவல்ப
   
அழிவ தெவன்கொலிப் பேதை யூர்க்கே
   
பெரும்பூட் பொறையன் பேஎமுதிர் கொல்லிக்

கருங்கட் டெய்வங் குடவரை யெழுதிய
   
நல்லியற் பாவை யன்னவிம்
   
மெல்லியற் குறுமகள் பாடினள் குறினே.

                        - பரணர்

உரை-

பெரிய அணிகலத்தையுடைய சேரனுக்குரிய , அச்சம் தருதல் மிக்க கொல்லிமலையில் உள்ள கரிய கண்களையுடைய தெய்வம் அம் மலையின் மேற்குப் பக்கத்தில் எழுதிய நல்ல இயலையுடைய பாவையை ஒத்த இந்த மெல்லிய இயல்பையுடைய தலைவி,தன் தலைவனுடைய பெயரைப் பாடி இடிப்பாளாயின், அங்ஙனம் அவள் பரந்த அடியினையுடைய உரலினது பகுவாயிடத்து தானியம் இடிக்கும் போது பாடும் வள்ளைப் பாட்டைக் குறித்து அயலார்கள் குறைகூறுதலையும் செய்வார்கள்.இத்தகைய அறிவின்மையையுடைய ஊரினர் கூறும் சொற்களின் பொருட்டு வருந்துவதால் பயன் என்ன?
.


(கருத்து) ஊரினர், தலைவி ஒரு தலைவன்பால் நட்புடையளென்பதை அறிந்துகொண்டனர்.

   

    வள்ளை உரற்பாட்டு- மகளிர் உரலில் நெல் முதலியவற்றை இடிக்கும்போது அதனால் உண்டாகும் அயர்வு தோற்றாதிருக்கும் பொருட்டுப் பாட்டுப்பாடுதல் இயல்பு; இங்ஙனம் பாடும் பாட்டு வள்ளைப் பாட்டெனப்படும்.
    இப்பாட்டு, இடிப்பவர்களுடைய அன்புக்குரியாரைத் தலைவர்களாகப் பெற்றிருத்தல் மரபு;

No comments: