Tuesday, August 31, 2010

திரைப்பட இயக்குநர்கள் - 4 கே.சுப்பிரமணியம்




திரைப்படங்கள் பேச ஆரம்பித்து 79 ஆண்டுகள் ஆகின்றன.இக்கால கட்டங்களில் பல இயக்குநர்கள்..வந்து சில படங்களைக் கொடுத்து சென்றுள்ளனர்.அவர்களில் நம்மால் மறக்கமுடியா பல இயக்குநர்களில் கே.சுப்பிரமணியமும் ஒருவர்.

1904 ஆம் ஆண்டு பிறந்தவர் சுப்பிரமணியம்.வக்கீலான இவர் திரைக்கதை,தயாரிப்பு, இயக்கம் என மூன்று நிலையில் கிட்டத்தட்ட 20 படங்களை இயக்கியுள்ளார்.

அந்த நாட்களிலேயே பல சமூக சீர்த்திருத்தங்களை தன் படங்களில் சொன்னவர்.

1934ல் எம்.கே.தியாகராஜ பாகவதரை வைத்து பவளக்கொடி என்ற படத்தை இயக்கினார்.1936ல் நவீன சாரங்கதாரா..பின் பக்த குசேலா ஆகிய படங்களை இயக்கினார்.

1937ல் பாலயோகினி என்ற படத்தை இயக்கினார்.பிராமண குடும்பத்தினரால் துரத்தப்பட்ட மகளும்,அவளது அத்தையும்..அன்று சேரி என்றழைக்கப்பட்ட குடியிருப்பில்..அம்மக்களுடன் தஞ்சம் அடைந்து வசிக்கிறார்கள்.அந்தக் காலத்தில் மிகவும் தைரியமாக எடுக்கப்பட்ட படம்.

1938ல் சேவாசதனம்..வயதானவர்கள்..குழந்தை பருவத்தைக் கூட தாண்டாத பெண்களை மணமுடிப்பதை கண்டித்த படம்.நம் சம்பிரதாயங்கள் குறுக்கே நிற்குமேயாயின்...சாதியே வேண்டாம்..என நாயகன் தான் அணிந்திருந்த பூணூலை அறுத்து எறிந்த படம்.இப்பட நாயகி எம்.எஸ்.சுப்புலட்சுமி ஆவார்

1939ல் வந்த படம் கல்கியின் தியாகபூமி.பிராமண சமூகத்தின் குறைபாட்டை சொன்ன படம்.இந்த படம் ஆங்கில அரசால் தடைசெய்யப்பட்டு பின் வெளியான படம்.

1940ல் வெளிவந்த 'பக்த சேதா' என்ற படம்..தீண்டாமையைச் சொன்ன படம்.

பழமையில் ஊறிய பிராமண சமுகம் இவரை தங்கள் ஜாதியைவிட்டு தள்ளி வைத்தனர்.

தமிழ்த் திரைப் படங்களின் தந்தை என போற்றப்படும் இவரை பிராமண பெரியார் எனலாம்.

எஸ்.வீ.ரமணன்,எஸ்.கிருஷ்ணசாமி,பத்மா சுப்ரமணியம்,அபஸ்வரம் ராம்ஜி ஆகியோர் இவருக்கு பிறந்தவர்கள்.

Monday, August 30, 2010

உலகத்தில் சிறந்தது எது...




பட்டிணத்தில் பூதம் என்று ஒரு திரைப்படம் வந்தது.ஜெயஷங்கர்,விஜயா,நாகேஷ் நடித்தது.அதில் கண்ணதாசனின் ஒரு பாடல்..

'உலகத்தில் சிறந்தது எது' என ஆரம்பிக்கும்..நாகேஷ்..வட்டி என்பார், விஜயா..காதல் என்பார்..ஜெய்..தாய்மை என்பார்..

உலகத்தில் சிறந்தது தாய்மை..என்பதே வெற்றி அடையும்.

சரி..விஷயத்திற்கு வருவோம்..

ஆஸ்திரேலியாவில் பிரசவத்திற்காக கேதே ஒக் டேவிட் என்ற பெண் சிட்னி மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார்.கருத்தரித்து 27 வாரங்களே ஆன நிலையில்.அவருக்கு இரட்டை குழந்தைகள் பிறந்தன.குறைந்த எடையில் பிறந்த ஒரு ஆண், ஒரு பெண். இரு குழந்தைகளையும் காக்க மருத்துவர்கள் பெரு முயற்சி செய்தனர்.பெண் குழந்தை உயிர் பிழைத்தது.ஆனால்..மருத்துவர்கள் கடைசி வரை போராடியும் ஆண் குழந்தையைக் காப்பாற்ற முடியவில்லை.குழந்தை இறந்துவிட்டதாக தாயிடம் தெரிவிக்கப் பட்டது.

அதைத் தாங்கிக் கொள்ள முடியாத..அந்தத் தாய்..இறந்த குழந்தையை மார்போடு கட்டி அணைத்து அழ ஆரம்பித்து விட்டார்.தொடர்ந்து இரண்டு மணி நேரம் தன் உடலுடன் குழந்தையை அணைத்துக் கொண்டு அழுதவாறே இருந்தார்.அப்போது..குழந்தை மெதுவாக மூச்சு விடுவதை அந்தத் தாய் உணர்ந்தார்.உடன் மருத்துவர்களை அழைத்து குழந்தை மூச்சு விட ஆரம்பித்ததைக் கூறினார்.

மருத்துவர்கள் குழந்தைக்கு அவசர சிகிச்சை அளித்து..இங்குபேட்டரில் வைத்து..சகஜ நிலைக்குக் கொண்டு வந்தனர்.சிறிது நேரத்தில் கண் விழித்தது குழந்தை..

அதைப் பார்த்து..ஆனந்தக்கண்ணீர் விட்ட தாயின் விரல்களை குழந்தை பிடித்துக் கொண்டது.

இறந்த குழந்தையை உயிர் பிழைக்க வைத்தது எது..

ஆம்..அந்த தாயின் அரவணைப்பு..

இப்போது சொல்லுங்கள்..உலகத்தில் சிறந்தது எது....

தாய்மைதானே...

Sunday, August 29, 2010

ஊழலுக்கும்..சுரண்டலுக்கும் வந்தனை செய்வோம்...


(photo courtesy-razzmatazz.mgns.in)

ஊழல்..பிறர் சொத்தை அபகரித்தல், திருட்டு, பொய் சொல்லுதல் இவை எல்லாம் தீயவை..

தீயவை தீய பயத்தலால் தீயவை
தீயினும் அஞ்சப் படும்..

என்று பள்ளிகளில் சொல்லிக் கொடுத்து அனுப்புகிறார்கள்..ஆனால்..நம்மை வழி நடத்திச் செல்லும் சமுதாயத்தில்..இவற்றிற்கு மாறாகவே நடந்துக் கொண்டிருக்கிறது.

ஒரு நாடு சிறப்புடன் செயல்பட வேண்டுமானால்..அந்த நாட்டை ஆளுபவர்கள்..நல்லவர்களாக, ஊழல் புரியாதவர்களாக இருக்க வேண்டும்..ஆனால் நடப்பது என்ன..

ஊழல்..ஊழல்..ஊழல்..

சமீபத்தில்..உலகிற்கு காமன்வெல்த் போட்டிகளை நன்கு நடத்தி இந்தியா நல் பெயர் எடுக்க நினத்தால்..அதிலும் கோடிக்கணக்கில் ஊழல்..

நாட்டில் ஊழல் இல்லாத துறைகளே இல்லை..ஊழல் புரியா அரசியல்வாதிகள்..அதிகாரிகள்..விரல் விட்டு எண்ணிவிடும் எண்ணிக்கையிலேயே உள்ளனர்.நீதி வழங்க வேண்டிய நீதிபதிகள் மீதும் ஊழல் புகார்.

யார் மீதேனும் ஊழல் புகார் வந்து நீதி மன்றம் போனால்..தீர்ப்பு பல நிலை கோர்ட்டுகளில் விவாதிக்கப்பட்டு, பல விதமாக வருகிறது.கோர்ட்டுக்கு கோர்ட் நீதி மாறுபடுகிறது..சில சமயங்களில் வழக்கை விசாரிக்கும் நீதிபதிகள்..அவ்வழக்கை தான் விசாரிக்க விரும்பவில்லை..என வேறு நீதிபதிகளுக்கு வழக்கை மாற்ற சொல்கின்றனர்.எல்லாம் கடந்து..நீதி வழங்கப்படும் என காமன் மேன் எதிர்பார்ப்பு இருந்தாலும்..அது கிடைக்க பல்லாண்டுகள் ஆகின்றன..சம்பந்தப்பட்ட நபர்..இதற்கிடையே அமரர் ஆகி இருப்பார்..

அல்லது..முந்தைய ஆட்சியில் போடப்பட்ட வழக்குகள் அடுத்த ஆட்சியில் விலக்கிக் கொள்ளப்படும்.

இந்நிலையில்..மன்னன் எவ்வழி மக்கள் அவ்வழி என..மக்களும் தங்களால் முடிந்த அளவிற்கு தாங்கள் சம்பந்தப்பட்டத் துறையில்..ஏமாற்றுதல், லஞ்சம் வாங்குதல், பொதுசொத்தை சுரண்டுதல் ஆகியவற்றைச் செய்து வருகின்றனர்.மக்கள் பேராசையும் இதற்கு ஒரு காரணமாய் அமைந்து விடுகின்றன..

இன்னமும் பணத்தை இரட்டிப்பு செய்கிறோம்..என்றால்..மக்கள் நம்புகின்றனர்

கோடிக்கணக்கில் உங்களுக்கு லாட்டரியில் கிடைத்துள்ளது..அதற்கு சில லட்சங்கள் முதலில் நீங்கள் செலுத்த வேண்டும்..என மின்னஞ்சல் வந்தால்..கோடிக்கு ஆசைப்பட்டு கையில் இருக்கும் லட்சத்தை இழக்க தயாராய் இருக்கிறோம்..

கோவில் சொத்து கொள்ளையடிக்கப் படுகிறது.

ஏழைகளுக்கு வழங்கப் படும்..சலுகை விலை ரேஷன் அரிசியில் ஊழல்..

மக்களை இந்த நிலைக்கு தள்ளியதில்..ஆள்பவர்களுக்கு பெரும் பங்கு உண்டு..

ஊழல் புரிபவர்..யாராய் இருந்தாலும்..எந்நிலையில் இருந்தாலும்..எக்கட்சியை சேர்ந்தவராயினும்...உடன் தண்டிக்கப்படுவார்கள் என்று இருந்தாலே ஒழிய ஊழலை ஒழிக்க முடியாது..

அது போன்ற நிலை வரவில்லையெனில்..

அனைவருமே..இடுகையின் தலைப்பையே தாரக மந்திரமாய்க் கொண்டுதான் செயல் படுவார்கள்.

காமன்மேன் ஏமாளியாய்..வாங்கும் சம்பளம் கைக்கும், வாய்க்கும் எட்டாமல் நாட்களை எண்ணிக்கொண்டிருப்பான்.

Saturday, August 28, 2010

சிரிப்போம்...சிரிக்க வைப்போம்...




வாழ்க்கை என்பது ஒரு அற்புதம்..அதை இன்பகரமாக வாழ்ந்து காட்ட வேண்டியது..அவரவர் திறமை..ஏன்..அதை அவரவர் கடமை என்று கூட சொல்வேன்..அதற்கு..இன்றியமையா தேவைகள் பல இருந்தாலும்...குறிப்பாக நகைச்சுவை உணர்ச்சி முக்கியம்..

பல முக்கியச் செய்திகள்..நகைச்சுவையோடு கலந்து கொடுத்தால் தான்..நாம் எதிர்பார்த்தபடி..எதிர்ப்பார்த்த நபர்களை சென்று அடையும்.

ஆகவேதான்..திரைப்படங்களிலும்..கலைவாணர் அவர்களின் நகைச்சுவை..சில சீரிய..கருத்துக்களுடன் இருக்கும்.நகைச்சுவையாக சொல்லும்போது..முதலில் சிரித்தாலும்..பின்னர் அதில் பொதிந்திருக்கும் செய்தியை உணர்வோம்.

சிலர்...என்னதான் சிரிப்பான செய்தியைக் கேள்விப்பட்டாலும்...சிரிக்காமல்..எதையோ பறிகொடுத்தது போல் ..முகத்தை..சீரியஸ் ஆக வைத்திருப்பார்கள்.

நம்மை சிரிக்க வைத்த காமெடியன்கள் பலர் வாழ்க்கை..சோகமயமானது.உதாரணத்திற்கு..நடிகர் சந்திரபாபுவை சொல்லலாம்..அவர்கள் தங்கள் சோகத்தை மறந்து..தண்ணீருக்குள் மீன் அழுதால்..அதன் கண்ணீரை யார் அறிவார்..என்பதற்கேற்ப..அவர் தனிப்பட்ட சோகத்தை மறைத்து நம்மை மகிழ வைத்தார்.

பணத்தை பெரியதாக நினைப்பவர்கள்...சிரிப்பை மறந்தவர்கள்..

எந்திர மயமான வாழ்வில்..காலையில் கடற்கரையில்..நின்று ..உடல் நலனுக்காக..வலுக்கட்டாயமாக..சிரிக்க வேண்டியிருக்கிறது இன்று.. சிரிப்பு..அரு மருந்து என்பதால்..

சிரிப்பு...மனிதனுக்கு மட்டுமே..இயற்கை கொடுத்த வரப்பிரசாதம்

சிரிப்போம்..வாய் விட்டு சிரிப்போம்...

வன்மத்தை விட்டு...எதிரியையும் சிரிக்க வைப்போம்..

சாதிக்க முடியாத விஷயங்களையும்..முக மலர்ச்சியுடன், எதிர் கொண்டால்..சாதிக்கமுடியும்..

Friday, August 27, 2010

விடுதலை (அரை பக்கக் கதை)




அந்த சிறிய அறைக்குள் ஐம்பது பேர் அடைக்கப் பட்டிருந்தனர்.

அறை திறக்கும் ஓசை..

இன்று அவர்களில் ஒருவனுக்கு விடுதலை..

அது நாமாக இருக்குமா..என ஒவ்வொருவரின் எதிர்பார்ப்பு.

அவர்களில் இருந்து ஒருவன் வெளியே இழுத்து வரப்பட்டான்..அறை மீண்டும் மூடப்பட்டது.வெளியே வந்தவனுக்கு விடுதலை ஆகி விட்ட மகிழ்ச்சி.

ஆனால் அதற்குள்..அவன் தலை அந்த அறையின் வெளிப்பக்க சுவற்றில் வேகமாக உரசப்பட்டது.

தலை பளீரென நெருப்புப் பிடிக்க..அவனை பக்கவாட்டில் திருப்பி அருகில் இருந்த விளக்கை ஏற்றினான் அவனை விடுவித்தவன்.விடுதலை ஆனவன் தலை கருகி இறந்தான்.

அவன் நிலையை அறிந்த தீப்பெட்டிக்குள் இருந்த மற்ற தீக்குச்சிகள்..இனி நம்மில் யாருக்கும் விடுதலை வேண்டாம்..என எண்ணின.

Thursday, August 26, 2010

தேங்காய்..மாங்காய்..பட்டாணி..சுண்டல் (27-8-10)




தமிழகம் முழுதும் 7000 மதுக்கடைகள் உள்ளன.அவற்றில் 32000 ஊழியர்கள் பணி புரிகின்றனர்.தமிழக அரசுக்கு மதுக்கடைகள் மூலம் 14000 கோடி ரூபாய் வருமானம் வருகிறது..அரசின் மொத்த வருவாயில் ஐந்தில் ஒரு பங்கு மதுக்கடைகள் மூலம் வருகிறது..யாரேனும் பொன் முட்டையிடும் வாத்தை கொல்வேன் என்றால்..அது ஒப்புக்குத்தான் என்றே தோன்றுகிறது..

2)அறுவை சிகிச்சை மூலமோ..அல்லது அது இல்லாமலோ பிளாஸ்டிக் சர்ஜெரியை சிறந்த முறையில் மக்களுக்குத் தரும் முதல் ஐந்து நாடுகளில் இந்தியாவையும் அங்கீகரித்துள்ளது பிளாஸ்டிக் சர்ஜெரிக்கான பன்னாட்டு அமைப்பு.

3)டெல்டா மாவட்டங்கள் என்கிறோம்..டெல்டா என்றால் என்ன தெரியுமா?
Delta is a triangular coastal land formed by silt deposited by a river while flowing in to a sea or an Ocean.

4)எதற்குத்தான் ஆய்வு என்ற விவஸ்தை இல்லாமல் போய் விட்டது..ஆண்கள் சராசரியாக தங்கள் ஆயுளில் ஒரு ஆண்டை , பெண்களைப் பார்த்து ரசிக்கவே செலவிடுவதாக இங்கிலாந்து நிறுவனம் ஒன்று ஆய்வறிக்கை செய்து கண்டறிந்துள்ளது.

5) யாருக்கேனும் உதவியோ, நன்கொடையோ கொடுத்தால்..அதை சொல்லிக் கொண்டே இருக்கக் கூடாது..செய்ததைக் கூட மிகைப்படுத்தி சொல்லிக் கொண்டே இருப்பது அரசியல்வாதிகளுக்கு மட்டுமே உரியது.

6)கோபம் வரும் போது நம் ரத்த அழுத்தம் அதிகரிக்கிறது.நெஞ்சு பட படக்கிறது.ரத்தக்குழாயில் அடைப்புக் கூட ஏற்படுகிறது.கோபம் வருகையில் அட்ரினலின் ஹார்மோன் சுரக்கிறது.அது உடலின் ரத்தக் குழாயைச் சுருக்கிவிடுகிறது.கோபத்தின் உச்சக்கட்டம் இருதய பாதிப்பு..தான்..ஞாபகத்தில் வையுங்கள்.



7)இந்த வாரம் நான் படித்தவற்றுள் தமிழா தமிழா வின் மகுடம் ...மாதவராஜின் இந்த இடுகைக்கே.வாழ்த்துகள் மாதவராஜ்

8)கொசுறு ஒரு பொன்மொழி...

பெண்மையும்..தாய்மையும் இல்லாமல் பெண்கள் வாழ ஆரம்பித்தால்..அழிவில் கொண்டு போய் விடும்.

Wednesday, August 25, 2010

காதலனும்..சந்தேகக் காதலியும்...கொஞ்சி விளையாடும் தமிழ் - 20

(132-புலவி நுணுக்கம்)

சந்தேகம் ...தன்னைத்தானே நம்பாதது சந்தேகம்..அதுவும்..காதலன்பால்..காதலிக்கு வந்துவிட்டால்...

தன்னைத்தவிர அவனை வேறு யாரும் ஏறெடுத்துப் பார்க்கக்கூடாது என்ற 'பொசசிவ்னஸ்' உள்ள காதலியாய் விட்டால்..அவனது நிலை திண்டாட்டம்தான்..

காதலனை பெண்களெல்லாம் கண்ணால் கண்டு ரசிக்கின்றனர்..அவன் பரந்த மார்பை கண்களாலேயே உண்கின்றனர்..இதை காதலி பார்த்துவிட்டாள்..கோபம் தலைக்கேறுகிறது..காதலனைப் பார்த்து..இனி நான் உன்னைத் தழுவ மாட்டேன்..நீ கற்பு நெறி கெட்டவன் என்கிறாள்..அவனிடம் ஊடல் கொள்கிறாள்.

பெண்ணியலார் எல்லாரும் கண்ணிற் பொதுவுண்பர்
நண்ணேன் பரத்தநின் மார்பு

பெண்ணாக இருப்பவர்கள் எல்லோரும் ..உன்னை பொதுவாக எண்ணி கண்களால் உன்னை ரசிப்பதால்..நீ கற்பில்லாதவன் ஆகிறாய்..ஆதலின் இனி உன் பரந்த மார்பை நான் தழுவ மாட்டேன்..

இப்போது காதலனுக்கு தும்மல் வருகிறது..தும்முகிறான்..அவன் தும்மல் போலியானது என எண்ணுகிறாள் அவள்..இப்படி தும்முவதால் அவரிடம் உள்ள கோபம் நீங்கி..'நீடூழி வாழ்க" என அவரை வாழ்த்தி பேச ஆரம்பிப்பேன் என எண்ணுகிறார் என எண்ணுகிறாள்.இதிலும் சந்தேகம்..

ஊடி இருந்தேமாத் தும்மினார் யார்தம்மை
நீடுவாழ் கென்பாக் கறிந்து

(ஊடல் கொண்டிருந்தபோது தும்மினார்..ஊடலை விடுத்து அவரை 'நீடூழி வாழ்க' என வாழ்த்துவேன் என நினைத்து..)

காதலியை மகிழ்விக்க என்ன செய்யலாம்..என மண்டையைக் குடைந்துக் கொண்டு..மலர்மாலையை தான் அணிந்துக் கொண்டால் அவள் மகிழ்வாள் என எண்ணியவன்..பூமாலை ஒன்றை அணிந்து. அவள் முன் வருகிறான்..அவளோ அவன் எண்ணியதற்கு மாறாக..வேறொருத்திக்குக் காட்டவே அவன் அப்படி அணிந்ததாக எண்ணி மேலும் சினம் கொள்கிறாள்

கோட்டுப்பூச் சூடினும் காயும் ஒருத்தியைக்
காட்டிய சூடினீர் என்று

கிளையில் மலர்ந்த பூக்களை மாலையாய் கட்டி நான் அணிந்துக் கொண்டிருந்தாலும், வேறொருத்திக்காகவே அணிந்திருக்கிறீர் எனக் கூறி கோபம் அடைகிறாள்

அவள் சினம் தணிக்க காதலன் 'எல்லோரையும் விட நான் உன்னிடம் காதல் மிகுதியாய்க் கொண்டுள்ளேன்' என்கிறான்..உடனே அதையும் தவறாக எடுத்துக் கொண்டு யாரைக் காட்டிலும்..யாரைக்காட்டிலும் என ஊடல் அதிகம் கொள்கிறாள்.

யாரினுங் காதலம் என்றேனா ஊடினாள்
யாரினும் யாரினும் என்று

யாரைக்காட்டிலும் உன்னிடம் நான் காதல் அதிகம் கொண்டுள்ளேன் என சாதாரணமாகச் சொன்னதைக் கூட தவறாக எடுத்துக் கொண்டு..'யாரைக் காட்டிலும்...யாரைக்காட்டிலும்..' எனக் கேட்டு மிகவும் ஊடல் கொள்கிறாள்

சரி..இவளிடம் என்ன சொன்னால் திருப்தி அடைவாள் என காதலன் யோசித்து..'இப் பிறவியில் உனை பிரியமாட்டேன்' என்கிறான்.உடனே..மறுபிறவி என்று இருந்தால்..அப்போது என்னைவிட்டுப் பிரிவாயா' என கண்ணீர் விடுகிறாள்...

இம்மைப் பிறப்பில் பிரியலம் என்றேனாக்
கண்நிறை நீர்கொண் டனள்

'இப்பிறவியில் யாம் பிரியமாட்டோம்' என்று நான் சொன்னதும்..அவ்வாறாயின் மறு பிறப்பு என்று ஒன்று உண்டோ..அப்போது நம்மிடம் பிரிவு ஏற்படும் என்கிறாயா? என கண்ணீர் விடுகிறாள்..

காதலன் பாவம் என்ன செய்வான்..எதைச் சொன்னாலும் மாட்டிக் கொள்கிறான்..

அடுத்த பதிவில் மேலும் அவன் நிலையைப் பார்ப்போம்.

விஜயகாந்த்துடன் இளங்கோவன் சந்திப்பு


இன்று தனது 58வது பிறந்த நாளைக் கொண்டாடும் தேமுதிக தலைவரும் நடிகருமான விஜய்காந்துக்கு காங்கிரஸ் மூத்த தலைவரும், திமுக கூட்டணிக்கு எதிர்ப்புத் தெரிவித்து வருபவருமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் , நேரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுகவுடன் காங்கிரஸ் கூட்டணி தொடர்வதை எதிர்த்து வருகிறார் இளங்கோவன். திமுகவை மிகக் கடுமையான விமர்சித்து வரும் அவருக்கு நீண்ட அமைதிக்குப் பின் நேற்று முன் தினம் தான் காங்கிரஸ் தலைமை மறைமுகமாக எச்சரிக்கை விடுத்தது. மேலும் திமுக-காங்கிரஸ் கூட்டணி தொடரும் என்றும் அறிவித்தது.

இந்த பரபரப்பு அடங்குவதற்குள், முதல்வர் கருணாநிதியை கடுமையாக விமர்சித்து வரும் விஜய்காந்தை இன்று நேரில் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்தார் இளங்கோவன்.

இலங்கை தமிழர் பிரச்சனை தீரும்வரை பிறந்த நாளை கொண்டாட மாட்டேன் என்று அறிவித்திருந்த விஜய்காந்த் , அரசியலுக்கு வர முடிவு செய்த பின் முதல் தனது பிறந்த நாளை வறுமை ஒழிப்பு தினமாக அறிவித்துக் கொண்டாடி வருகிறார்.

இன்று அவரது பிறந்த நாளையொட்டி தேமுதிக சார்பில் மாநிலம் முழுவதும பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

சென்னையில் கட்சி தலைமை அலுவலத்தில் தனது பிறந்தநாளை விஜயகாந்த் கொண்டாடினார். முக்கிய பிரமுகர்கள் அவரை நேரில் வந்து வாழ்த்து தெரிவித்தனர்.

அப்போது ஈ.வி.கே.எஸ். இளங்கோவனும் திடீரென பூங்கொத்துடன் தேமுதிக தலைமை அலுவலகத்திற்கு நேரில் வந்து விஜயகாந்துக்கு கொடுத்து வாழ்த்துத் தெரிவித்தார். அப்போது அவருக்கு பொன்னாடையும் போர்த்தினார்.

அப்போது விஜயகாந்த் சிரித்துக் கொண்டே, ''இன்று இதுதான் பத்திரிகைகளுக்கு முக்கியச் செய்தியாக இருக்கப் போகிறது'' என்று கூற, பதிலுக்கு இளங்கோவன் ‘’இது யார் யாருக்கெல்லாம் கோபத்தை உண்டாக்கப் போகுதோ’’என்றார்.

பின்னர் நிருபர்களிடம் பேசிய இளங்கோவன், விஜயகாந்த் நல்ல தலைவர். அவர் ஆட்சிக்கு வந்தால் மக்களுக்கு நல்லாட்சி தருவார் என்றார்.

முன்னதாக விஜயகாந்த் விருகம்பாக்கத்தில் உள்ள தனது வீட்டில் கேக் வெட்டினார்.

விஜயகாந்துக்கு திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் ராம.நாராயணன், நடிகர்கள் முரளி, எஸ்.வி.சேகர், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநிலச் செயலாளர் ராம கிருஷ்ணன், மாநில பாஜக தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்தனர்.


(நன்றி தட்ஸ்தமிழ் )

Tuesday, August 24, 2010

பாலிண்ட்ரோம்...


எந்தப் பக்கத்தில் இருந்து படித்தாலும் ஒரே மாதிரியான அர்த்தம் வரும் பதங்களை ஆங்கிலத்தில் palindromes என்பார்கள்.

இது சம்பந்தமான எனது இந்த இடுகையைப் பார்க்கவும்..

இப்போது ஆங்கிலத்தில் மேலும் சில உதாரணங்கள்

Liril
Radar
Madam
Eve
No it is opposition
Deified
Repaper

(நன்றி-கல்கண்டு)

உங்களுக்கு தெரிந்தவற்றை பின்னூட்டத்தில் தெரிவித்தால், பதிவில் சேர்த்துவிடுகிறேன்.

arunmullai said...
இதேபோல் தமிழில் ஒருகவிதையே
சொல்லலாம்.

"நான்வச மாடாநாண் நாட விரைவிட
நாண்நாடா மாசவன் நா!"

நான் வசப்பட்டுப் போகாத நாணத்தை
உடையவளாக இருக்கிறேன். அவன்
நாவோ, காதலைப்பற்றிக் கூசாமல்
பேசவல்லதாய் இருக்கிறது.

முன்பின்னாகப் படித்துப்பாருங்கள்.

)

Monday, August 23, 2010

நோய் நாடி..நோய்முதல் நாடி..




ஒருவர் நம் நலம் நாடுபவர்..நீண்ட நாள் நண்பர்..நம்மிடம் உள்ள நற் குணங்களை போற்றி வந்தவர்..அப்படிப்பட்டவர் நட்பை பெற நாம் என்ன தவம் செய்தோம் என எண்ண வைப்பவர்.

அப்படிப்பட்ட நண்பர் திடீரென நமக்கு எதிராய் மாறுகிறார்...நாம் செய்யும் தவறுகளை சுட்டிக்காட்டுகிறார்...நம்மை விட்டு விலகுகிறார்..

உடன் நமது ரியாக்க்ஷன் என்னவாய் இருக்கும்..

நண்பன் முதுகில் குத்திவிட்டான்..நம்பிக்கை துரோகம் செய்துவிட்டான்..என்று புலம்ப ஆரம்பிப்போம்..முடிந்தால் அந்த நண்பனைப் பற்றிய இமேஜைக் கெடுப்போம்..

ஆனால்.. நம் மீது என்ன குறை..நாம் என்ன தவறிழைத்தோம்..என நம் மனசாட்சிக்குத் தெரிந்தாலும்..அதற்கு சமாதானம் செய்து அடக்கிவிடுவோம்..

இது..நண்பர்களுக்கிடையே மட்டுமின்றி..சமுதாயத்திலும் இப்போக்கு அதிகமாய் காணப்படுகிறது.

நேற்றுவரை நம்மை ஆதரித்த ஊடகங்கள்..திடீரென நம்மை ஏன் எதிக்கின்றன..என்பது மனதிற்குத் தெரிந்தாலும்..அரசியல்வாதிகள்..திருந்தாமல்..சம்பந்தப்பட்ட ஊடகங்கள் மீது கோபம் கொண்டால்..

வாய்க்கா கரையில் ஒதுங்கியவன்..கோபமுற்று செய்த செயலாக சொல்லப்படும் சொலவடையே ஞாபகம் வருகிறது.

அதுபோன்ற மாற்றம் ஏற்பட..நாம் செய்த செயல் என்ன,அச் செயல் நியாயமா? என்றெல்லாம் ஆராய்ந்து..அப் பாவச் செயலை நீக்கி..மீண்டும் அந்த நண்பன் அல்லது ஊடகங்களின் இழந்த நட்பைப் பெறவேண்டும்..

அதை விடுத்து..மேலும் மேலும்..தவறிழைத்துக் கொண்டிருந்தால்....நாம் தலை நிமிர முடியாது.

இது தனிப்பட்ட நபர் யாரையும் குறித்த இடுகை அல்ல..அனைவருக்குமான இடுகை..

ஊடகங்கள், அரசியல்வாதிகள், அதிகாரிகள், மக்கள் அனைவருக்குமான இடுகை.கடைசியாக ஒரு குறள்..

நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்

(வந்துள்ள நோய் என்ன..அதற்கான காரணம் என்ன..அதைத் தீர்க்கும் வழி என்ன..இவற்றை முறையாக ஆராய்ந்து (அதைப் போக்க) சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.

Thursday, August 19, 2010

தேங்காய்..மாங்காய்..பட்டாணி..சுண்டல் (20-8-10)



ஜப்பானில் டோக்கியோவில் 6 மாடிகள் கொண்ட கட்டிடம் ஒன்று பூமிக்கு அடியில் கட்டப்பட்டு
உள்ளது.இதன் உயரம் பூமிக்கு அடியில் 600 அடிகளாகும்

2)புகழ் பெற்ற சதுரங்க விளையாட்டை இந்தியாதான் கண்டுபிடித்தது.இந்த விளையாட்டில் நான்கு முறை உலக சாம்பியன் பட்டத்தை வென்ற முதல் இந்தியன் ஒரு தமிழர் என்பதும் குறிப்பிடத் தக்கது.

3)மலைச்சாரல்கள் நிறைந்த இடம் நார்வே..இங்கு நள்ளிரவில் பார்த்தால் கூட சூரிய வெளிச்சம் இருப்பது போல மிக அழகாக இருக்குமாம்.கரை ஓரத்தில் கடல் ஆழமாக அழகாக இருப்பதால், இதைப் பார்த்து ரசிக்கவே வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் பலர் வருகின்றனராம்

4)இங்கிலாந்து நீதிபதிகள் குற்றவாளிக்கு மரணதண்டனை என்று தீர்ப்பு எழுதும்போது கறுப்புத் தொப்பியை அணிவார்கள்

5)சமீபத்தில் நடந்த ஈரோடு புத்தகக் கண்காட்சியில் 'எழுத்து என்னும் கருவறை' என்ற தலைப்பில் பேசிய வை.கோ.தன் உரையில் 168 எழுத்துல மேதைகளின் பெயர்களைச் சொன்னாராம்.இவ்வளவு பெயரையும் நினைவுப்படுத்தி சொல்வது எவ்வளவு கடினம்..கலைஞர் பெயரையும் குறிப்பிட்டாராம்..வைகோ...(என்னைப்பொறுத்து இழப்பு இரண்டு பக்கமும் என்றே தோன்றுகிறது)

6)ராஜபக்ஷே அரசை போர்க்குற்றவாளி என 40க்கும் மேற்பட்ட நாடுகள் ஆதாரத்துடன் குற்றம் சாட்டியுள்ளன.ஆனால் இந்தியா ராஜபக்ஷேக்கு எதிராக எந்த நடவடிக்கையிலும் இறங்கவில்லை.

7)சென்ற வாரத்தில் நான் படித்த இடுகைகளில் எனக்குப் பிடித்த இடுகை இது..தமிழா தமிழா வின் இந்த வார மகுடம் இதற்கே..வாழ்த்துகள் சிவராமன் (பைத்தியக்காரன்)

Wednesday, August 18, 2010

சிங்கப்பூரில் 'குட்டி' கோவி

வலையுலகில் பல புது பதிவர்களை ஊக்குவிக்கும் கோவி.கண்ணன் இன்று அழகான ஆண்குழந்தைக்கு தகப்பன் ஆனார்.

ஏற்கனவே கோவி க்கு ஒரு மகள் உண்டு.

தாயும், சேயும் நலம்.

கோவி.க்கும்..அவரது மனைவிக்கும் வாழ்த்துகள்.

Tuesday, August 17, 2010

திரைப்பட இயக்குநர்கள் - 3 எல்.வி.பிரசாத்




திரைப்படங்கள் என்றால் கண்டிப்பாக எல்.வி.பிரசாத்தின் பங்கு ஞாபகம் வருவதைத் தடுக்க முடியாது.17-1-1908ல் ஆந்திராவில் பிறந்த அக்கினேனி லட்சுமி வர பிரசாத் ராவ் தான் எல்.வி.பிரசாத் என்னும் நடிகர்,தயாரிப்பாளர், இயக்குநர் ஆவார்..இவர் சாதாரணமான விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர்.

நடிக்கும் ஆசையோடு 1930ஆம் ஆண்டு பம்பாய் சென்றவர்க்கு ,,அந்த ஆசை எளிதில் நிறைவேறவில்லை.Star of the East என்னும் மௌனப் படத்தில் ஒரு சிறு வேடம் கிடைத்தது.பின்னர் 1931ல் வெளியான ஆலம் ஆரா என்னும் முதல் பேசும் படத்தில் சிறு பாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பினைப் பெற்றார்.

பின்னர் காளிதாஸ், பக்த பிரகலாதா ஆகிய படங்களில் நடித்தவருக்கு அலிஷா என்னும் ஹிந்திப் பட இயக்குநரிடம் உதவி இயக்குநர் பணிபுரியும் சந்தர்ப்பம் கிடைத்தது.எட்டு ஆண்டு காலம் உதவி இயக்குநர் ஆகியும் , ஏதும் முன்னேற்றம் ஏற்படவில்லை.

1949ல் இயக்குநர் ஆகும் ஆசை நிறைவேறியது.'மனதேசம்' என்னும் தெலுங்கு படத்தை இயக்கிநார்.என்.டி.ராமராவ் இப்படத்தில் தான் அறிமுகமானார்.1950ல் விஜயா பிக்சர்ஸ் சார்பில் 'சாவுகாடு' படம் இயக்கினார்...

பின்னர் சம்சாரம், மனோகரா (தமிழ்,தெலுங்கு,ஹிந்தி),ராணி (ஹிந்தி) ஆகிய படங்கள் இவரை பிரபல இயக்குநராக ஆக்கின.

1956ல் பிரசாத் ஸ்டூடியோ உருவானது..பின்னர் சில காலம் நோய்வாய்ப் பட்டார்.

பின்னர் 1956ல் பிரசாத் புரடக்சன்ஸ் உருவாக்கினார்.அவர் தயாரிப்பில் மிலன்,கிலோனா,சசுரால்,ஏக் துஜே கேலியே ஆகிய மாபெரும் வெற்றி படங்கள் உருவாயின.

நடிகர்,உதவி இயக்குனர்,தயாரிப்பாளராய் இருந்ததுடன்..இவர் தமிழ்,தெலுங்கு,ஹிந்தி என மும்மொழியிலும் பல வெற்றி படங்களை இயக்கியுள்ளார்.

இவர் இயக்கத்தில் வந்த தமிழ்ப் படங்கள்..மனோகரா,மிஸ்ஸியம்மா,கல்யாணம் பண்ணிப் பார்,பூங்கோதை,கடன் வாங்கிக் கல்யாணம்,மிஸ் மேரி,மங்கையர் திலகம்,தாயில்லாப் பிள்ளை(கலைஞர்..கதை,வசனம்),இருவர் உள்ளம் (கலைஞர்..கதை,வசனம்)ஆகியவை.

மூன்று மொழிகளிலும் சேர்த்து கிட்டத்தட்ட 35 படங்களை இயக்கியுள்ளார்.

எல்.வி.பிரசாத் நடிப்பை பார்க்காதவர்களுக்கு ஒரு நினைவூட்டல்..

ராஜ பார்வை படத்தில்..கமல்,மாதவியின் காதலுக்கு உதவும் தாத்தா ஞாபகம் இருக்கிறதா...அந்த பாத்திரத்தில் நடித்தவர் இவர்தான்.

ஹைதராபாத்தில் கண் மருத்துவ மனைக்கு பல ஏக்கர்கள் இடத்தை அளித்தவர் இவர்.

இந்திய அரசின்'தாதா சாகேப் பால்கே' விருது பெற்றவர்.

இவர் 1994ல் அமரர் ஆனார்.

நசரேயன்.. (ஒரு பக்கக் கதை)

'என்னங்க..இன்னிக்கு நம்ம பையன் ஸ்கூல்ல.. அப்பாவையோ..அம்மாவையோ..அழைச்சுட்டு வரச் சொன்னாங்களாம்..நீங்க இன்னிக்கு ஆஃபிஸிற்கு லீவைப் போட்டுட்டு போயிட்டு வாங்களேன்' என்கிறார் அம்மா.

'அதெல்லாம்..முடியாது..எனக்கு ஆஃபீஸ்ல வேலை அதிகம் இருக்கு..அவன் உனக்கும் பிள்ளைதானே..நீயே போயிட்டு வா' என்று அப்பா சொல்லிவிட்டார்.

அம்மா..மகனை அழைத்துக் கொண்டு பள்ளிக்குச் சென்று முதல்வரைப் பார்த்தார்.அவர்..'இதோ பாருங்க அம்மா..இப்பவெல்லாம் எட்டாவது வகுப்பு வரை யாரையும் எந்த வகுப்பிலேயும் ஃபெயில் பண்ணக்கூடாது.அதை வைச்சு உங்க பையன் எட்டாவது வரை வந்துட்டான்..இனி ஒன்பதாம் வகுப்பிலே இருந்து..இறுதித் தேர்வில் தேறினால்தான் அடுத்த வகுப்பிற்குப் போகமுடியும்.அப்படி உங்க பையன் போகணும்னா..தமிழை தப்பில்லாம எழுதணும்.அதனால முதல் காரியமா..இன்னும் தாமதப் படுத்தாம அவனை தமிழில் தப்பு இல்லாம எழுத பழக்குங்க' என்றார்.

'சரி' என அவரிடம் தலையாட்டி விட்டு வெளியே தனது மகனுடன் வந்த அம்மா...அவனைப் பார்த்து 'இப்படியே இருந்தா..என்ன செய்யப் போறே..' என்றார்.

'கவலைப்படாதே அம்மா...தமிழ்த் தெரியாத ஊர்ல போய் என் தமிழை வளர்த்துப்பேன்' என்றான் மகன்.

அதன் படியே எப்படியோ தேறி..(போலி மதிப்பெண்ணா..அல்லது போலி சான்றிதழா!!) வெளி நாட்டில் வேலை செய்ய கிளம்பிவிட்டான் மகன்

Sunday, August 15, 2010

மருத்துவர்களின் திறமையும்..பொது மருத்துவமனைகளும்..


சூபர் பக்..கடந்த சில நாட்களாக இது பற்றி படித்துக் கொண்டிருக்கிறோம்..இது இந்தியாவில் இருந்து பரவுவதாகவும்..ஆகவே இதற்கு நியூடெல்லி-1 (NDM 1) என்று லண்டனில் குறிப்பிட்டுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன..

இந்திய மருத்துவத்துறையின் வளர்ச்சி கண்டு பொறுக்காமல்..இப்படி செய்திகள் கிளம்புவதாகவும்கூட சொல்கிறார்கள்.

உண்மைதான்..

சமீபத்தில் கூட..அமெரிக்கர் ஒருவர் இதயமாற்று சிகிச்சைக்கு இந்தியா வந்து சிகிச்சை பெற்றுள்ளார்.

சாதாரணமாக..சூபர் பக் என்பது..நாம் வீரியமுள்ள ஆன்டிபயாடிக் மருந்தை அடிக்கடி ஏதேனும் உடல் நலக்குறைவிற்கு உபயோகப் படுத்துவோமாயின்..அந்தநோயை உருவாக்கும் பாக்டீரியாக்கள் அந்த மாத்திரையின் வீரியத்திற்கு பழக்கப்பட்டு விடுவதால்...அடுத்த முறை நாம் குணமடைய அதனெனினும் வீரிய மருந்தை உட் கொள்ள வேண்டியுள்ளது.இதுவே சூபர் பக் உருவாவதன் ஆரம்பமாய் அமைகிறது.ஆகவே இனி மருந்து கடைகளில் எல்லா மருந்துகளுக்கும் டாக்டர் பிரஸ்கிரிப்ஷன் தேவை என்று கொண்டு வரலாமா என யோசித்து வருகின்றனர்.

சரி..தலைப்பிற்கு வருவோம்...

இந்திய மருத்துவம்..உலக தரத்திற்கே உள்ளது.ஆனால் அதே சமயம்..நம்மில் கூட சிலர்..தனியார் மருத்துவமனைக்கு நிகராக பொது மருத்துவ மனை இல்லை என எண்ணுகிறோம்.அது தவறு.இன்னும் சொல்லப் போனால்..பொது மருத்துவமனைகளில் தனியாரில் இல்லா..பல அதி நவீன மருத்துவக் கருவிகள் உள்ளன.

இன்று செய்தித்தாளில் வந்துள்ள சென்னை அரசு பொது மருத்துவமனையின் சாதனையைப் பாருங்கள்..

ஆந்திராவைச் சேர்ந்த +2 மாணவி ஒருவர் இரண்டாண்டுகளுக்கு முன் ஆசிட் குடித்துவிட்டார்..இதனால் இரப்பை,உணவுக்குழாய் ஆகியவை அழுகிவிட்டன.ஆந்திராவில்..தனியார் மருத்துவ மனைகளில் நான்கு முறை அறுவைசிகிச்சை செய்தும் பலனில்லை.

இந்நிலையில்..அவர் சென்னை பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.இரப்பை,குடல் அறுவை சிகிச்சை மருத்துவர் டாக்டர் சந்திர மோகன் தலைமையில்..மருத்துவ குழுவினர் கலாவிற்கு அறுவைசிகிச்சை மூலம் பெருங்குடலின் ஒரு பகுதியை எடுத்து இரப்பை,உணவுக்குழாயிற்கு பதிலாக பொருத்தினர்.அவருக்கு சுமார் ஆறு மணி நேரம் அறுவை சிகிச்சை நடந்தது.அவர் தற்போது பூரண குணம் அடைந்துள்ளார்.எந்த பிரச்னையும் இன்றி உணவு அருந்துகிறார்.

இந்திய மருத்துவர்களின் திறமையை எந்நிலையிலும், யாராலும் குறைக்க முடியாது.

Saturday, August 14, 2010

இன்று இந்திய சுதந்திரத்தின் வயது 64













இன்றைய செய்தித் தாளில் வந்துள்ள ஒரு செய்தி


Dalit woman paraded naked


Her neighbours were angry that her brother-in-law was having an affair with a girl in the family

--------------------------------------------------------------------------------

The woman's brother-in-law was assaulted and threatened with dire consequences

The victim says police first refused to accept her complaint and suggested a compromise


--------------------------------------------------------------------------------



CHANDIGARH: A Dalit woman was allegedly paraded naked on August 10 at Bhagwanpur village in Batala, over 250 km from here, by her neighbours, who were angry over her brother-in-law having an affair with a girl of their family.

Forced to flee

The victim, in her complaint to the police, said her neighbour Baldev Singh's daughter was having a relationship with her brother-in-law, Gagandep Singh. Unable to bear this, the girl's family members assaulted Gagandep on August 9 and threatened him with dire consequences. He left the village the same night.

The next day, the girl's relatives forcibly took her to their house where they tore her clothes and paraded her naked in the village.

‘Influential family'

The victim added that the police first refused to accept her complaint and were suggesting a settlement with the neighbour, as their family wielded considerable influence in the area.

The victim's husband and father-in-law work in Bathinda, while she along with her mother-in-law work as domestic helps.

‘Justice denied'

She said she would take the matter to court as she had failed to get justice from the police.

Kulwant Kaur, mother-in-law of the victim said that on August 11, she along with her daughter-in-law again went to the police station, where the Station House Officer (SHO) accepted their complaint.

“It was the second time that he even accepted the complaint and three days have passed, but nothing has happened. The guilty are roaming around freely, threatening us publicly,” she said.

“On Friday night, two constables along with an ASI came to their house and demanded Rs. 500 from us as expenses for searching for the accused,” Ms. Kaur added.

SHO Rajesh Kakkar and SSP, Batala, D.P Singh did not comment on the incident.

இந்தியமக்கள் இன்று சுதந்திர நாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடுகிறார்கள்...தலைவர்கள் மூவர்ணக் கொடி ஏற்றி..மக்களுக்கு வாழ்த்து செய்தியை தெரிவித்துள்ளார்கள்..

வாழ்க சாதியம்..((









--------------------------------------------------------------------------------

சீனாவுக்கும் பரவியது ரஜினி புகழ்!


ரஜினியின் புகழ் சீனாவிலும் வெகுவாகப் பரவி வருகிறது. சீனாவிலிருந்து வெளியாகும் பிரபலமான 'சைனாடெய்லி' பத்திரிகை தனது முதல் பக்கத்தில் ரஜினி குறித்து சிறப்புக் கட்டுரை வெளியிட்டுள்ளது.

அதில் ரஜினி நடித்துள்ள இந்தியாவின் மிகப் பிரமாண்ட படமான எந்திரன் மற்றும் பஸ் கண்டக்டராக இருந்து சர்வதேச புகழ் பெற்ற நடிகராக உள்ள அவரது சிறப்புகள் குறித்து எழுதியுள்ளது.

"ஒரு சாதார பஸ் கண்டக்டராக இருந்து, தென்னிந்திய ரசிகர்களால் கடவுளுக்கு நிகராக போற்றப்படும் எவர்கிரீன் சூப்பர் ஸ்டார் ரஜினி" என அந்தக் கட்டுரையின் துவக்கத்திலேயே குறிப்பிட்டுள்ளது சைனாடெய்லி.

மேலும் அந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

ரூ 165 கோடியில் உருவாக்கப்பட்டுள்ள எந்திரன் திரைப்படம்தான் இந்தியாவில் அதிக பொருட்செலவில் உருவான ஒரே படம். தெலுங்கில் இந்தப் படத்தின் விற்பனை புதிய சாதனையைப் படைத்துள்ளது. தெலுங்கிலேயே தயாரிக்கப்பட்ட படம் கூட இந்த விலைக்கு விற்பனையானதில்லை.

இன்கா நாகரீகத்தின் சின்னங்கள் அமைந்துள்ள மாச்சு பிக்குவில் படமாக்கப்பட்டுள்ள ஒரே இந்தியப் படம் என்ற பெருமையும் எந்திரனுக்கே உண்டு.

இந்தப் படத்தின் ஸ்டில்கள் மற்றும் ட்ரெயிலர்களைப் பார்க்கும் போதே தெரிறது, இந்தியாவின் மிக ஸ்டைலான, ஆடம்பரமான படம் இதுவே என்று குறிப்பிட்டுள்ளார் பிரபல விமர்சகரான தரண் ஆதர்ஷ்.

முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராய் இந்தப் படத்தில் நடித்திருந்தாலும், ரோபோவின் விற்பனை மற்றும் புகழுக்கு முதன்மையான காரணம் சூப்பர் ஸ்டார் ரஜினிதான்.

எழுபதுகளில் ஆரம்பித்த அவரது அபார நடிப்பு மற்றும் ஸ்டைல்கள் இன்னமும் இந்தியத் திரையுலகை ஆட்சி செலுத்துகின்றன.

150 படங்களுக்கு மேல் நடித்துள்ள ரஜினிகாந்த், ஒரு பாயும் புலியைப் போல திரையில் தோன்றும் போது அவரது ரசிகர்கள் அடையும் உற்சாகத்துக்கு அளவே இல்லை. பெரிய பெரிய கட் அவுட்டுகள், பேனர்கள் என தங்கள் உற்சாகத்தை அவர்கள் பிரமாண்டமாக வெளிப்படுத்துகிறார்கள்.

"இந்தியா மட்டுமல்ல, ஜப்பான், மலேசியா, அமெரிக்கா மற்றும் பிரிட்டனிலும் மிகப்பெரிய சூப்பர் ஸ்டார் ரஜினிதான்... இந்தப் பெருமை வேறு எந்த இந்திய நடிகருக்கும் இல்லை. அவர் மிகச் சிறந்த நடிகர்... மக்கள் இதயங்களை வென்ற மாபெரும் ஹீரோ" என்கிறார் தரண் ஆதர்ஷ்.

"ஸ்வைன் ப்ளூ, அதிகரிக்கும் தயாரிப்புச் செலவு, மோசமான ஸ்கிரிப்டுகள் என தெலுங்குப் படங்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ள இந்த நேரத்தில் ரோபோ வெளியாகிறது. இந்தப் படத்துக்குள்ள உள்ள எதிர்ப்பார்ப்பும், ரசிகர்கள் காட்டும் ஆர்வமும் தெலுங்குப் பட உலகுக்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது", என அந்தப் பத்திரிகையின் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



(நன்றி தட்ஸ்தமிழ்)

Friday, August 13, 2010

நான் இந்தியன்





குடியரசு தினம்

சுதந்திர நாள்

கிரிக்கெட்

இவை மூன்று மட்டுமே

நான் இந்தியன் எனும்

நினைவை ஞாபகப்படுத்துகிறது

மாநில மொழி

வெறியர்களுக்கு

2) வியர்வை முத்து சிந்தி

விவசாயி விளைவித்த நெல் முத்துக்கள்

பண்ணை வீட்டு பத்தாயத்தில்

3)கவர்ச்சி காட்டி நடிகை

ஆண்களின்

உள்ளாடை விளம்பரத்தில்

4) பொழுது போக

வாங்கிய தொலைக்காட்சி

தொல்லைக்காட்சியாய்

பொழுதை விழுங்கிக் கொண்டிருக்கிறது

Thursday, August 12, 2010

தேங்காய்..மாங்காய்..பட்டாணி..சுண்டல்(13-8-10)




உலக நிலப்பரப்பில் இந்தியா 2.3 சதவிகிதம் மட்டுமே..ஆனால் உலக மக்கள் தொகையில் 17.5 சதவிகிதம்

2)நம் நாட்டில் 25 கோடி இளைஞர்களின் சராசரி வயது 24.சுமார் 30 கோடி பேர் 12 முதல் 16 வயதிற்கு உட்பட்டவர்கள்.இந்தியா இளைஞர்கள் அதிகம் உள்ள நாடாக விளங்குவதால் வருங்காலத்தில் வளர்ந்த நாடுகளுக்கு நம் நாடு சவாலாய் இருக்கும்.

3)ராகுல் காந்தியிடம் தமிழக இளைஞர் காங்கிரஸ் உறுப்பினர்கள் பேசிக்கொண்டிருக்கும் போது..'இனி காமராஜ் ஆட்சி அமைப்போம் என சொல்லாதீர்கள்..காங்கிரஸ் ஆட்சி அமைப்போம்' என்று கூறுங்கள் என அறிவுரைக் கூறினாராம்..ஆமாம் உண்மைதான்..அந்த பெருந்தலைவர் பற்றி பேச இன்று யாருக்கு அருகதை இருக்கிறது

4)சமீபத்தில் ஓய்வு பெற்ற தமிழகத் தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தாவிடம் 'உங்கள் பணிக்கால அனுபவங்களை புத்தகமாக எழுதுவீர்களா?' என்று கேட்ட போது..எழுதுவதானால் உண்மையை எழுத வேண்டும்.அப்படி எழுதினால் வீண் சர்ச்சைகளும், பிரச்னைகளும் வரும்.உண்மையை எழுத முடியாத போது எதற்கு சுயசரிதை எழுத வேண்டும் என்றாராம்.

5) கடற்கரையிலிருந்து நாம் கடலைப் பார்த்தால்..சுமார் 3 மைல்கள் தூரமே பார்க்க முடியுமாம்.

6)வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்தும் Gas Cylinderக்கும் காலாவதி தேதி உண்டு.கெடு முடிந்த பின்னரும் அதை பயன்படுத்தினால்..அபாயங்கள் நேரக்கூடும்.சிலிண்டரின் மேல் பகுதியை இணைக்கும் இரும்புப் பட்டையில் A10, B11, C12, D13 இப்படி எண்கள் இருக்கும்.A எனில் ஜனவரி முதல் மார்ச்,B எனில் ஏப்ரல்-ஜூன், C எனில் ஜூலை- செப்டம்பர், D எனில் அக்டோபர்-டிசம்பர்..அடுத்த இலக்கம் வருடம் ..உதாரணமாக A10 எனில் 2010ல் முதல் காலாண்டுவரை அதை உபயோகப் படுத்தலாம் என்று அர்த்தம்..(இதில் இன்னும் போலிகள் வரவில்லை என நம்புவோம்.)

7)இன்றைய தேதியில் காஷ்மீரின் 45 சதவிகித நிலப் பரப்பு மட்டுமே இந்தியாவிடம் உள்ளது.33 சதவிகிதம் பாகிஸ்தான் வசம்..22 சதவிகிதம் சீனாவிடம்..நம் வசம் உள்ளதை கைப்பற்றுவது..இல்லையேல்
நம் வசம் உள்ளதை தனி நாடாக்குவது இதுதான் பாகிஸ்தான் லட்சியம்..இதற்காகவே 63 ஆண்டுகளாக போராடுகிறது..இந்தியாவும் பேச்சு வார்த்தை (!!) நடத்திக் கொண்டிருக்கிறது.

8) இந்த வாரம் நான் படித்த இடுகைகளில் வானம்பாடிகளின் இந்த இடுகை தமிழா தமிழா வின் மகுட இடுகையாகிறது.வாழ்த்துகள் பாலா

9) கொசுறு ஒரு ஜோக்

காங்கிரஸ் தொண்டர்- தமிழகத்தில் காமராஜர் ஆட்சி அமைப்போம் என்று இனி சொல்லாதீர்கள்..காங்கிரஸ் ஆட்சி அமைப்போம் என்று சொல்லுங்கள்..என்கிறாரே ராகுல்...காங்கிரஸில் எந்த கோஷ்டியை சேர்ந்தவர் ஆட்சின்னு சொல்லலையே....
தொண்டர்2- ஆட்சியை பிடிக்கும் முன் இன்னும் எவ்வளவு கோஷ்டிகள் உருவாகுமோ..அதனாலத்தான் அதை இப்பச் சொல்லலை

Wednesday, August 11, 2010

சாமியின் தந்தை..(ஒரு பக்கக் கதை)




தன் மகன் தன்னை கவனிப்பது இல்லை..தனியாக விட்டு விட்டான்..என அறுபத்திரெண்டு வயதுள்ள முதியவர்..அந்த ஊர் காவல்நிலையத்தில் புகார் அளிக்க..காவல்துறை அதிகாரி அருணாசலம் ..உடன் அவர் மகன் சாமியை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தார்..

சாமியைப் பார்த்து இன்ஸ்பெக்டர்..'இதோ பாருய்யா..இப்ப எல்லாம் அப்பா,அம்மாவைக் கவனிக்கலைன்னா கைது பண்ணிடுவோம்..நீதிமன்றத்தில உன் பேர்ல வழக்கு போடுவோம்..சிறையில் அடைப்போம்' என்றார்.

அதற்கு சாமி..'ஐயா..இதுநாள் வரை என் தந்தையை நான் காப்பாற்றி வந்தேன்..ஆனால்..அவர் செய்ய வேண்டிய கடமை ஒன்றை அவர் செய்யவில்லை..அதனால்..தந்தை விட்டுச் சென்ற பணியை மேற்கொள்ள வேண்டியதும் ஒரு மகனின் கடமை என்பதால்..அக்கடமையைச் செய்துக் கொண்டிருக்கிறேன்.என் தந்தை அவர் கடமையை ஏற்றுக் கொள்ளட்டும்..பின் நானும் என் தந்தையை காக்கும் பணியை குறைவில்லாமல் செய்கிறேன்' என்றான்..

'இது என்னய்யா..புதுக்கதை' என்ற அருணாசலம்..'உன் தந்தை செய்ய மறந்த கடமை என்ன?' என்றார்,

இவ்வளவு நேரம் வாசலில் நின்றுக்கொண்டிருந்த் 85 வயது முதியவரை 'தாத்தா..உள்ள வாங்க' என்று அழைத்தான் சாமி.

முதியவர் உள்ளே வர..சாமி அதிகாரியைப் பார்த்து..' இவர் என் தாத்தா..அதாவது..நான் அவரைக் கவனிக்கவில்லை என உங்களிடம் புகார் அளித்தாரே..அவரின் தந்தை..இவரை இவர் மகன்..என் தந்தை..பல்லாண்டுகாலமாக கவனிக்கவில்லை..இவர் இருக்கிறாரா..இல்லையா..என்பது கூட அவருக்குத் தெரியாது..சமீபத்தில் ஒரு ஆதரவற்றோர் இல்லம் சென்ற நான் இவரைப் பார்த்து பேச..அப்போதுதான் இவர் என் தந்தையின் தந்தை என்பதை அறிந்தேன்..முதலில் என் தந்தை தன் கடமையைச் செய்யட்டும்..எனக்கு வழிகாட்டியாய் இருக்கட்டும்' என்றான்.

சாமியின் தந்தையை இன்ஸ்பெக்டர் பார்க்க அவர் தலை குனிந்தார்.

Tuesday, August 10, 2010

பொறுப்பற்ற ஊடகங்கள்....


ஃபோர்த் எஸ்டேட் என அழைக்கப் படும் ஊடகங்களுக்கு ..சமூக பொறுப்புணர்ச்சி அதிகம் இருக்க வேண்டும்..எந்த ஒரு செய்தியும் அச்சில் ஏறுவதற்கு முன் அதன் நம்பகத்தன்மை பற்றி உறுதி செய்து கொள்ள வேண்டும் ஊடகங்கள். அவை அளிக்கும் செய்திகள் மக்களுக்கு எளிதில் புரிய வேண்டும்.

இப்போதெல்லாம்..பர பரப்பான செய்திகளைத் தர வேண்டும்..என வியாபார நோக்கில்..இல்லாத செய்திகளையும்...இருக்கும் செய்தியை மிகைப்படுத்தியும் கூறி வருகின்றன பத்திரிகைகள். இவர்கள் வெளியிடும் செய்தி தவறானால்..அடுத்த நாள் பத்திரிகையில் ஒரு மூலையில் தன் வருத்தத்தை தெரிவிக்கின்றன.

தாங்கள் வெளியிட்ட தவறான செய்திகளை கொட்டை எழுத்துகளில் வெளியிடுபவர்கள்..அது தவறு என்பதையும் அதே போல வெளியிட்டால் தானே எல்லோர் பார்வைக்கும் போகும்.ஆனால் தவறை சொல்கையில்..அது யார் கண்ணிலும் படாமல் சொல்கின்றன.

இன்னும் சில பத்திரிகைகள் செய்திகளுக்கும்..அதற்கான தலைப்புகளுக்கும் சம்பந்தம் இல்லாமல் வெளியிடுகின்றன..இதை படிப்பவர்கள் என்ன சொல்ல வருகிறார்கள் ..என்பதை புரிந்து கொள்வதில்லை..அல்லது..தவறாக புரிந்து கொள்கிறார்கள்.இன்றைய செய்தி ஒன்றை தினகரன் பத்திரிகை வெளியிட்டதைப் பாருங்கள்..

பள்ளிகளுக்கு அரசு நிர்ணயித்த
கல்வி கட்டணத்தில்
மாற்றம் இல்லை
கோவிந்தராஜன் குழு அறிவிப்பு

இதை படித்தால் என்ன எண்ணுவீர்கள்...அரசு நிர்ணயித்த கட்டணம் சரி என்ற எண்ணம் தானே ஏற்படும்..

ஆனால் கட்டணத்தை மறு நிர்ணயம் செய்ய பள்ளிகள் கேட்டுக் கொண்டுள்ளன.அவற்றை நேரில் ஆய்வு செய்து..குழு..தர நிர்ணயம் செய்வதைப் பற்றி முடிவெடுக்கும்..அதற்கு கால அவகாசம் தேவைப் படுவதால் இந்த ஆண்டு பள்ளிகளின் கல்வி கட்டணத்தை அரசு நிர்ணயிக்காது. இதுவே செய்தி..

இதைப் புரிந்துக் கொள்ளும் வகையில் செய்தி இல்லை..

இந்த விஷயத்தில் ஓரளவு ஹிந்து பத்திரிகை சரியான தலைப்பைக் கொடுத்து செய்தியை வெளியிட்டுள்ளது.

New fee structure only from next year
several schools welcome the decision
committee to inspect schools again

தவிர்த்து..சில புலனாய்வு என சொல்லிக் கொள்ளும் பத்திரிகைகள் உள்ளன..இவற்றிற்கு..'தாம்' என்னும் சொல் மிகவும் உபயோகம் ஆகிறது..

எந்த ஆதாரமற்ற செய்தியை போட்டாலும்..'இருக்கிறதாம்..நடக்கிறதாம்..சொல்லப்படுகிறதாம்' என்று போட்டுவிட்டால் போதும்.செய்தியும் போட்டால் போல் ஆயிற்று..பின்னாளில் சட்டச் சிக்கிலில் இருந்தும் தப்பி விடலாம்.


(டிஸ்கி- இந்த ஆண்டு அரசு நிர்ணயித்த கட்டணமே வசூலிக்க வேண்டும் என நேற்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கை தெரிவிக்கிறது..(போதுமடா சாமி..குழப்பமோ..குழப்பம்) )

Monday, August 9, 2010

போலிகளின் ஆக்கிரமிப்பில் உள்ளது சமுதாயம்..


( photo thanks to - picsdigger.com )

போகிற போக்கைப் பார்த்தால்..தாய்..ஒருத்தி மட்டுமே அசல் என்னும் நிலை வந்து விடும் போலத் தெரிகிறது.

மாம்பழங்களை கார்பைடு கற்கள் போட்டு..பழுக்க வைப்பதையும்..ஆப்பிள் போன்ற பழங்கள் பளீச் என தோற்றமளிக்க மெழுகு பூசப்படுவதையும் அறிவோம்.

மாடு நன்கு அதிகமாக பால் கறப்பதற்கு ...பால் கறக்கும் முன் அதன் மடிகளில் ஆக்சிடோசின் என்னும் ஹார்மோன் ஊசி போடுகிறார்கள்..அப்போது மாடு வழக்கத்தை விட அதிகமாக பால் கறக்குமாம்.ஊசி மூலம் இதை செடிகளுக்கு செலுத்தினால்..பருவத்திற்கு முன்னரே பூக்குமாம்..காய்கள் வழக்கத்தை விட பருமனாகுமாம்.பளபளப்பாய் இருக்குமாம்.

(சில ஆண்டுகள் முன்னர்..சிறுமியாய் நடிக்க வந்த ஒரு நடிகை..விரைவில் கவர்ச்சிகரமாய் தோற்றமளிக்க வேண்டும்..என ஹார்மோன் ஊசி போடப்பட..அவர் வயதுக்கு மீறிய குண்டாகி..இருந்த சினிமா வாய்ப்பையும் இழந்தது ஞாபகம் வருகிறது)

சாதாரணமாகவே..பூச்சி மருந்துகள் தெளிக்கப் பட்டு பாதி விஷமாகத்தான்..திராட்சை போன்றவை சந்தைக்கு வருகின்றன.இன்னும் சொல்லப் போனால் அவை பூச்சிக் கொல்லி மருந்தில் முக்கப்பட்டே அனுப்பப்படுகின்றன.நாம் இவற்றை கழுவும் போது ஓரளவே விஷத்தை நீக்க முடியும்.காய்கறி, பால் ஆகியவற்றிற்காக போடப்படும் ஹார்மோன் ஊசிகளால் உருவாவதை உண்ணும் போது உடல் குண்டாகும்.பெண் குழந்தைகள் விரைவில் பூப்பெய்துவர்..பெண்களுக்கு மாத விலக்கு பிரச்னைகள் ஏற்படும்..எலும்புகள் வலுவிழக்கும்..என்றெல்லாம் சொல்லப்படுகிறது.

ஆனால்..இவ்வூசி போடப்பட்ட மாட்டின் பாலைக் குடித்தால்..எந்த பாதிப்பும் ஏற்படாது என்றும்..ஆக்சிடோசின் என்பது ஒரு வகை புரதம்..காய்ச்சும் போது அப்புரதம் போய்விடும் என்றும் கூறப்படுகிறது.

ஆய்வாளர்கள் எந்த விஷயத்தில் ஒரே மாதிரி முடிவை எடுத்துள்ளார்கள்..

எங்கும் ..எதிலும் கலப்படம்..உடல் கோளாறு ஏற்படாத காற்றை சுவாசித்து வாழும் வழி வந்தாலும் மாசில்லா காற்றிற்கும் பஞ்சம்.

(ஒரு வார பத்திரிகையில் இது பற்றி படித்ததால் ஏற்பட்ட பாதிப்பு இப்பதிவு)

Sunday, August 8, 2010

கூட்டணி வலுவிழக்கிறதா...?




ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கும்..தி.மு.க.விற்கும் இடையிலான மோதல் வலுத்து வருகிறது.இளங்கோவனின் பேச்சு கூட்டணிக்கு வலிமை சேர்க்காது..வலியையே சேர்க்கும் என்று கலைஞரும் கூறியுள்ளார்.

இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் தங்கபாலு கூட்டணிக்கு இடையூறு ஏற்படும் வகையில் யாரும் பேசக்கூடாது என கண்டித்தும் மீண்டும் இளங்கோவன் தி.மு.க., ஆட்சியில் தலித் ஐ.ஏ.எஸ்., அதிகாரியை பழிவாங்குகிறார்கள் என்று பேசியுள்ளார்.

அவர் மேலும் பேசுகையில் கடந்த 31ஆம் நாள் திருச்செந்தூரில் மத்திய அமைச்சர் அழகிரியை வைத்துக் கொண்டு ஒரு முக்கியத் தலைவர் ராஜீவைப் பற்றியும் ராகுலைப் பற்றியும் மரியாதைக் குறைவாக பேசியுள்ளார்.நான்கு ஆண்டுகள் பொறுமையாய் இருந்தோம்....மக்களுக்கு நீங்கள் யார் என்பதை நினைவுப் படுத்த வேண்டிய நேரம் வந்து விட்டது.

காங்கிரஸ்காரர்கள் நாம் சொல்வதை ஏற்று கொள்வார்கள்.அவர்களை ஏமாற்றிவிடலாம் என நினைப்பது தவறு.பதவி இல்லாமல் இருந்தால் அவர்கள் நிலை என்ன என்பது எமர்ஜென்சி காலத்திலேயே தெரிந்தது..கரை வேட்டிகள் காணாமல் போயின.மேலே இருப்பவர்களுக்கு சலாம் போட்டுவிட்டு காங்கிரஸ்காரர்களை ஏமாற்றமுடியாது..

என்று கூறியுள்ளார்.

இளங்கோவனின் இப்பேச்சு பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.தங்கபாலு எச்சரித்தும் இளங்கோவன் இப்படி பேசிருப்பதைப் பார்த்தால்..இளங்கோவனுக்கு ஆதரவு வேறு எங்கோ இருப்பது போலத் தோன்றுகிறது.

இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் வாகை முத்தழகன் என்னும் கழக பேச்சாளர் தி.மு.க.,உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார்.

காங்கிரஸ், தி.மு.க., உறவை பாதிக்கும் வகையில் கழகத்தினர் யாரும் விமரிசிக்கக்கூடாது என அன்பழகன் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்..

கத்திரிக்காய் காய்த்தால் சந்தைக்கு வந்துதானே ஆக வேண்டும்..

Saturday, August 7, 2010

எல்லோரும் தனித்துப் போட்டியிடட்டும், பார்க்கலாம்-சவால் விட்டுள்ளார் அன்புமணி ராமதாஸ்.

பாமகவை யாராலும் அழிக்க முடியாது. பாமக பலமில்லை என்று சொல்கிறார்கள். அனைத்துக் கட்சிகளையும் வரும் தேர்தலில் தனித்து நிற்கச் சொல்லுங்கள். நாங்களும் தனியாக நிற்கிறோம். அப்போது தெரியும் யார் பலமாக இருக்கிறார்கள் என்று என்று சவால் விட்டுள்ளார் முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ்.

சேலத்தில் அவர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறுகையில்,

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த 400 கோடி செலவாகும் என்று சொல்கிறார்கள். இந்த கணக்கெடுப்பை கிராம நிர்வாக அலுவலரை பயன்படுத்தியே எடுக்கலாம். 30 அல்லது 40 கோடி ரூபாய்தான் செலவாகும்.

பாமகவை யாராலும் அழிக்க முடியாது. கடந்த 10 வருடத்தில் நாங்கள் இல்லாமல் தமிழகத்தில் ஆட்சி அமைக்க முடியவில்லை. பாமக பலமில்லை என்று சொல்கிறார்கள். அனைத்துக் கட்சிகளையும் வரும் தேர்தலில் தனித்து நிற்கச் சொல்லுங்கள். நாங்களும் தனியாக நிற்கிறோம். அப்போது தெரியும் யார் பலமாக இருக்கிறார்கள் என்று.

20 விழுக்காடு தனி இடஒதுக்கீடு கேட்டு பாமக சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது. இது சமூக நீதி போராட்டம். தமிழக அரசின் ஆய்வு 7 மாவட்டங்களை பின்தங்கிய மாவட்டங்களாக குறிப்பிடுகிறது. அதில் வேலூர் முதலிடம், சேலம் ஆறாவது இடம். மொத்தம் 7 மாவட்டங்களும் வடமாவட்டங்கள்.

விழுப்புரம் மாவட்டத்தில் மட்டும் 73 சதவீதம் குடிசைகள் இருக்கிறது அதில் 42 சதவீதம் வன்னியர்கள் குடிசை. 36 சதவீதம் தாழ்த்தப்பட்டவர்கள் குடிசைகள். இதிலிருந்து வன்னியர்கள் பின்தங்கி இருப்பது தெரியவந்துள்ளது.

வன்னியர்கள் முன்னேற்றம் இல்லாமல், தமிழகம் முன்னேறாது. வன்னியர்கள் முன்னேறினால் தமிழகம் முன்னேறும்.

ஈழத் தமிழர்கள் இலங்கையில் இதுவரை முகாம்களில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த விஷயத்தில் மத்திய மாநில அரசுகளின் நடவடிக்கைகள் திருப்தி தரவில்லை. சிறப்புக்குழு இலங்கைக்கு செல்வதால் ஈழத்தமிழர்களுக்கு எந்தவித பலனும் இல்லை. ஈழத்தமிழர்களுக்கு நலன் கிடைக்க வேண்டும் என்றால், அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து மத்திய மாநில அரசுகளை வலியுறுத்த வேண்டும்.

காவிரியை வைகையில் இணைப்பதாக தமிழக அரசு கூறுகிறது. ஏன் தெற்கு பகுதிகளுக்கே அனைத்து நலன்களையும் கொண்டு செல்கிறார்கள். பாலாற்றில் இணைக்க வேண்டியதுதானே?

வாய்தா ராணி என்று திமுக போராட்டம் நடத்தியது. இதற்கு பதிலாக விலைவாசி உயர்வுக்கு எதிராக போராட்டம் நடத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

சேலத்தில் புதிய மருத்துவமனை வருவதற்கு நான்தான் காரணம். ஆனால் மருத்துவமனை திறப்பு விழாவுக்கு இதுவரை எனக்கு முறைப்படி அழைப்பிதழ் வரவில்லை என்றார் அன்புமணி.

(நன்றி தட்ஸ்தமிழ்)

Friday, August 6, 2010

திரைப்பட இயக்குநர்கள் - 2 A.V.மெய்யப்பன்




அவிச்சி மெய்யப்ப செட்டியார் 28-6-1907ல் பிறந்தவர்.A.V.மெய்யப்பன் என்றும்,AVM என்றும் பின்னாளில் அறியப்பட்டவர்.தமிழ்த் திரைப்பட மும்மூர்த்திகள் என வாசன், எல்.வி.பிரசாத், மெய்யப்பன் ஆகியோர் போற்றப்பட்டனர்.

சினிமா தயாரிப்பாளர்,இயக்குநர், சமுக சேவகர் என போற்றப்பட்ட ஏ.வி.எம்., உருவாக்கிய ஸ்டூடியோ மட்டுமே..மூன்று பரம்பரை கடந்தும் வெற்றிகரமாக நடந்துக் கொண்டிருக்கிறது.இதுவரை தமிழ்,தெலுங்கு,கன்னடம்,ஹிந்தி என நான்கு மொழிகளிலும் படம் எடுத்துக் கொண்டிருக்கும் ஒரே நிறுவனமாய் திகழ்கிறது.

காரைக்குடியில் பிறந்த மெய்யப்பன் சென்னை வந்து சரஸ்வதி ஸ்டோர்ஸ் என்னும் கிராமபோன் கம்பெனியை ஆரம்பித்தார்.பின் அதையே சரஸ்வதி சவுண்ட் புரடக்க்ஷன்ஸ் கம்பெனி ஆக்கி அல்லி அர்ஜுனா,பூகைலாஷ்,ரத்னாவளி ஆகிய படங்களை எடுத்தார்.அவை எல்லாம் தோல்வியடைந்தன.

பின் இன்று மந்தைவெளியில் சன் டி.வி.உள்ள இடத்தில்..பிரகதி ஸ்டூடியோ ஆரம்பித்தார்.என் மனைவி,ஹரிசந்திரா,ஸ்ரீவள்ளி ஆகிய படங்கள் எடுத்தார்.1941ல் சபாபதி என்ற படம் மாபெரும் வெற்றியை பெற்று தந்தது.டி.ஆர்.ராமச்சந்திரன்,காளி என்.ரத்தினம் நடித்த இந்த படம்..இன்றும் டி.வி.,யில் ஒளி பரப்பப்படும் போது பெரும் ஆதரவை பெறுகிறது.நல்ல நகைச்சுவை படம்.

பின் 1945ல் ஏ.வி.எம்., ஸடூடியோ பிறந்தது.காரைக்குடிக்கு ஸ்டூடியோ இரண்டாம் உலகப் போர் போது மாற்றப்பட்டு..பின் மீண்டும் வடபழனியில் இன்றுள்ள இடத்திற்கு மாற்றபட்டது.

1947ல் நாம் இருவர்,1948ல் வேதாள உலகம்,1949ல் வைஜயந்திமாலா அறிமுகத்துடன் வாழ்க்கை ஆகிய படங்கள் வெளியாயின. வாழ்க்கை தெலுங்கில் ஜீவிதம் என்றும், ஹிந்தியில் பாஹர் என்றும் வந்து வெற்றி பெற்றது.

அதற்கு பின் பிரபல தயாரிப்பு நிறுவனமாகி..பல வெற்றி படங்களை தயாரித்துள்ளது ஏ.வி.எம்.,

குறிப்பாக பராசக்தி (சிவாஜி, எஸ்.எஸ்.ஆர்., அறிமுகம்)அந்த நாள்,களத்தூர் கண்ணம்மா (கமல் அறிமுகம்),அன்னை, அன்பே வா, சர்வர் சுந்தரம் என வெற்றி தொடர்ந்தது.

ஏ.வி.எம்., 1979 ல் அமரரானார்.

பின்னர்..அவரது குமாரர்கள் இன்றுவரை வெற்றிகரமாக தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.இதுவரை 174 படங்களை ஏ.வி.எம்.தயாரித்துள்ளது.

ஏ.வி.மெய்யப்பன் இயக்குநர் என்பதை விட திறமைசாலிகளைக் கொண்டு வெற்றி படங்களை அளித்த சிறந்த வியாபாரி எனலாம்.

Thursday, August 5, 2010

தேங்காய்..மாங்காய்..பட்டாணி..சுண்டல் (6-8-10)




1)தினமும் இரண்டு லிட்டராவது தண்ணீர் அருந்த வேண்டும்.அது நம் உடல் நலத்தைக் காப்பதுடன்..உடலின் வெப்ப நிலையை சீராக வைத்துக் கொள்ள உதவுகிறது.உடலில் கொழுப்பு சேருவதைத் தடுக்கிறது.ஊட்டச்சத்தை உடலின் பல பாகங்களுக்கு எடுத்துச் செல்கிறது.நோய்க்கிருமிகளை அழிக்கிறது.இவை அனைத்திற்கும் மேலாக மூளையின் வளர்ச்சிக்கு குடிநீர் அவசியம்.

2)உலகில் அதிகம் விற்கப்படும் பத்திரிகை 'ரீடர்ஸ் டைஜஸ்ட்'. ஒரு கோடியே இருபது லட்சம் பிரதிகளுக்கு மேலாக விற்பனையாகிறதாம்.

3)மாநிலங்களில் ஆட்டுக்கு தாடி போல கவர்னர்கள் இருப்பதை நாம் அறிவோம்.ஆனால் இந்த கவர்னர் அப்படியில்லை..நாட்டின் பொருளாதாரத்தைக் கண்காணிக்கும் ரிசர்வ் வங்கியின் தலைவரும் கவர்னர் என்றே அழைக்கப் படுகிறார்.இவரது பதவிக் காலம் நான்காண்டுகள்.ரூபாய் நோட்டுகளில் இவர் கையெழுத்தே இடம் பெற்றுள்ளது.

4)தன் துறை சம்பந்தபட்ட முதல் கேள்விக்கு அழகிரி தமிழில் பதில் சொல்லலாம் என்றும்..மற்ற கேள்விகளுக்கு துணைஅமைச்சர் பதிலளிக்கலாம் என சபாநாயகர் அனுமதி அளித்ததற்காகவே..நாடாளுமன்றத்தில்..தமிழில் பேச அனுமதி கிடைத்துவிட்டது என மகிழ்ச்சி அடைந்தவர்களுக்காக இச் செய்தி..

1919ஆம் ஆண்டிலேயே (13-3-1919) ஆங்கிலேயர் காலத்தில் தமிழக சட்ட மேலவையில் பி.வி.நரசிம்ம ஐயர் என்னும் உறுப்பினர்..தமிழில் பேசினாராம்.அதற்கு எதிர்ப்பு கிளம்ப ..'எந்த மொழியில் பேசவும் எனக்கு உரிமை உண்டு..அதை நிலை நாட்ட நான் தமிழ் மொழியில்தான் பேசுவேன்' என்று வாதிட்டு வெற்றி பெற்றாராம்.

5) ஒருவர் வாழ்வில் வெற்றி பெறுவதை எது தீர்மானிக்கிறது தெரியுமா? படிப்பு..செல்வம்..பரம்பரை பெருமை.நல்ல வாய்ப்பு.. இவை எதுவுமில்லை. நம் மனம் தான் நம் வெற்றியை தீர்மானிக்கிறது.

6) ஒரே ஆண்டில் மூன்று பிரதமரைப் பார்த்த நாடு நம் இந்தியா..1996ல் நரசிம்ம ராவ்,வாஜ்பாய்,தேவகௌடா ஆகியோர் அவர்கள்.

7) ஊழலை ஒழிக்க ஆதரவை நாம் தரத்தயார்..அதே போன்று போலி சான்றிதழுக்கும் கண்டனத்தை தெரிவிப்போம்.

8) இந்த வாரம்..நான் படித்த வரையில் எனக்குப் பிடித்த இடுகை கே.ஆர்.பி.செந்திலின் இந்த இடுகை..தமிழா தமிழா வின் இவ்வார மகுட இடுகை இதுவே

9) உயர்ந்த சாதி

தாழ்ந்த சாதி

பேசியவர்களின் உடல்கள்

ஒன்றாய்

பிணவறையில்

10) கொசுறு ஜோக்..

நிருபர்- இந்த படத்தில் நீங்க ரொம்ப கவர்ச்சியா நடிச்சிருக்கீங்களே..ஏன்?
நடிகை- அடுத்த படத்திலிருந்து சம்பளத்தை உயர்த்தத்தான்

இரண்டாம் தர குடிமக்களாக தமிழர்களை நடத்தும் இலங்கை-உலகப் பெருந்தலைவர்கள் குழு கண்டனம்


இலங்கையின் பூர்வீக குடிகளான தமிழர்களை இரண்டாம் தர குடிமக்களாக நடத்துகிறது இலங்கை அரசு என்று உலகப் பெருந்தலைவர்கள் குழு கண்டனம் தெரிவித்துள்ளது.

2007ம் ஆண்டு உலகின் புகழ்பெற்ற பெருந்தலைவர்கள் குழு ஒன்று ஏற்படுத்தப்பட்டது.

இதில் உலகப் புகழ் பெற்ற உலக நாடுகளின் தலைவர்களான தென்னாப்பிரிக்காவின் முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா, ஐ.நா.சபையின் முன்னாள் பொதுச் செயலாளர் கோபி அனான், அமெரிக்கா வின் முன்னாள் அதிபர் ஜிம்மி கார்ட்டர், முன்னாள் அயர்லாந்து அதிபர் மேரி ராபின்சன், முன்னாள் அல்ஜீரிய வெளியுறவு அமைச்சர் லக்தர் பிராஹிமி, தென்னாப்பிரிக்க ஆர்ச்பிஷப் டெஸ்மாண்ட் டுடு உள்ளிட்ட தலைவர்கள் இடம் பெற்றுள்ளனர்.

குழுவின் தலைவராக டெஸ்மான்ட் டுடு பொறுப்பு வகித்து வருகிறார். இந்த உலகப் பெருந்தலைவர்கள் குழு இலங்கை அரசின் இனவெறியைக் கடுமையாக கண்டித்துள்ளது.

இதுகுறித்து பிபிசிக்கு டுடு அளித்துள்ள பேட்டியில், இலங்கையில் தற்போது மனித உரிமை ஆர்வலர்கள் சரமாரியாக கொல்லப்பட்டு வருகின்றனர். பத்திரிக்கையாளர்கள் கொல்லப்படுகின்றனர். அரசுக்கு எதிர்ப்பானவர்கள் கொல்லப்படுகின்றனர். இது மிகவும் பயங்கரமாக உள்ளது என்றார்.

இலங்கையைக் கண்டித்து உலகப் பெருந்தலைவர்கள் குழு ஒரு அறிக்கையையும் வெளியிட்டுள்ளது. அதில், தமிழர்களுக்கு எதிராக மனித உரிமைகள் மீறப்படுவது தடுத்து நிறுத்தப்பட இலங்கை அரசை சீனா, இந்தியா, ஜப்பான், அமெரிக்கா போன்ற அதன் நட்பு நாடுகள் வலியுறுத்த வேண்டும்.

மனித உரிமைகள் பாதுகாக்கப்படுதல் மற்றும் சட்டத்தின் ஆட்சியை நிலை நாட்டுதல் போன்ற பிரச்சனைகளில் சர்வதேச சமுதாயம் ஒருதலைப்பட்சமாக நடந்து கொள்ளக்கூடாது. தண்டனையில் இருந்து விலக்கு அளிப்பதுதான் சர்வதேச அமைதிக்கும், பாதுகாப்புக்கும் பெரும் அச்சுறுத்தலாக உள்ளது.

போரின் போது அமல் படுத்தப்பட்ட நெருக்கடி நிலை இன்னும் இலங்கையில் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருவது கவலை தருகிறது. போர் முடிந்து ஓராண்டு காலம் முடிந்த பிறகும் இலங்கை தமிழர்களின் பிரச்சனைக்கு அரசியல் ரீதியாக தீர்வுகாண இலங்கை அரசு இதுவரை உருப்படியான நடவடிக்கை எதையும் எடுக்காதது வேதனை அளிக்கிறது என்று கூறியுள்ளனர்.

இலங்கையில் நடந்து வரும் மனித உரிமை மீறல்கள் குறித்து உலக நாடுகள் செவிடுகள் போல இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. நல்லாட்சி அங்கு இல்லை, நம்பிக்கை இல்லை, நம்பகத்தன்மை என எதுவுமே இல்லை இலங்கையில். இதைப் பார்த்து பிற நாடுகளும் கெட்டுப் போகும் அவலமே மேலோங்கியுள்ளது .

பின்லாந்து நாட்டின முன்னாள் அதிபரான மர்ட்டி அதிசாரி கூறுகையில், அனைவரும் எதிர்பார்த்ததற்கு ஏற்ப இலங்கை அரசு நடந்து கொள்ளவில்லை. எந்தவித முன்னேற்றத்தையும் அது காட்டவில்லை. மீடியாக்களை கட்டிப் போட்டு வைத்துள்ளது. அவற்றின் கண்களை மூடி வைத்துள்ளது. மீடியாக்களை சுதந்திரமாக செயல்பட விட்டால்தான் உண்மை தெரிய வரும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

உலக நாடுகள் பலவும் இலங்கை அரசின் இனப்படுகொலை மற்றும் இனவெறிப் போக்கைக் கண்டித்து வரும் நிலையில் உலகப் பெரும் தலைவர்கள் அடங்கிய குழு ஒரேகுரலில் இலங்கை அரசின் இனவெறியைக் கண்டித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் இதுபோன்று வரும் கருத்துக்களை இலங்கை அரசு காதிலேயே போட்டுக் கொள்வதில்லை. ஒரு காதை இந்தியாவை வைத்தும், இன்னொரு காதை சீனாவை வைத்தும் அது மூடிக் கொண்டுள்ளது. எனவே உலகப் பெருந்தலைவர்கள் குழுவின் விமர்சனமும் அதன் காதுகளையும், மனதையும் தொடாது என்பது உறுதி.


(நன்றி -தட்ஸ்தமிழ்)

Tuesday, August 3, 2010

க.கா., வும் ச.சீ.,யும்

தூக்கு தூக்கி என்று சிவாஜி நடித்த படம்...இப்படத்தில் ஒரு பிரசங்கத்தில் கதாநாயகன் கீழ்கண்டவற்றை கேட்கிறான்.

கொண்டு வந்தால் தந்தை

கொண்டு வந்தாலும் வராவிட்டாலும் தாய்

சீர் கொண்டு வந்தால் சகோதரி

கொலையும் செய்வாள் பத்தினி

உயிர் காப்பான் தோழன்...

இதில் எது நடக்குமோ..நடக்காதோ...நான்காவது இப்போதெல்லாம் அதிகமாக நடந்துக் கொண்டிருக்கிறது..கணவனைக் கொல்வது..காதலனைக் கொல்வது..கள்ளக் காதலனைக் கொல்வது...

சமுதாயத்தில் மன வருத்ததை ஏற்படுத்தும் நிகழ்வுகள்..

இரண்டாண்டுகளுக்குமுன்..கணவனுடன் தேனிலவிற்கு சென்றுவிட்டு அங்கு தன் காதலனை வரவழைத்து கணவனைக் கொன்ற நிகழ்வு படித்தோம்.

இப்போது..சமீப காலங்களில் கள்ளக் காதலால் நடந்த நிகழ்ச்சிகள்.

சென்னை தண்டையார்பேட்டையில் பலருடன் தொடர்பு வைத்திருந்த மஞ்சுளாவை அவளது க.கா., சிவசங்கர் கொலை செய்தார்

தன் க.கா., வெறுக்கத் தொடங்கியதால் அவரது 4 வயது மகனை கொலை செய்தார் பூவரசி என்பவர்..

இரண்டாவது கள்ளக் காதலனுடன் பழகியதைக் கண்டிக்கப்போய் முதல் காதலனை கொலை செய்து எரிக்க உதவினார் பெண் போலீஸ் சாஸ்திரக்கனி

ஒரகடத்தில் காதலனுடன் வாழ கணவனை விட்டு ஓடி விட்டு ..மீண்டும் கணவனுடன் வாழ வந்து ..கணவனுடன் சேர்ந்து காதலனைக் கொன்றார் குப்பு என்பவர்..

இப்போதெல்லாம் இது போன்ற செய்திகள் அதிகம் கேள்விப் படுகிறோம்...ஊடகங்களும் இந் நிகழ்ச்சிகளை..அதிகம் வெளிச்சம் போட்டு காட்டுகின்றன.

இப்படிப்பட்ட சமுதாய சீரழிவுக்கு காரணம் என்ன...

வறுமையா..ஆடம்பர வாழ்வு கனவா..பண நடமாட்டம் அதிகமா..காம இச்சையா..

சமூக ஆர்வலர்கள் என்ன நினைக்கிறார்கள்..இதை சீரமைக்க அவர்கள் பங்கு என்ன..

எங்கே போகிறோம் நாம்..

Sunday, August 1, 2010

சினிமாவிற்கு கதை எழுதுவது எப்படி..

சினிமாவிற்கு எழுதப்படும் கதைக்கு மூன்று வடிவம் நிலைகள் இருக்கின்றன..

முதலாவது அந்தக் கதையின் சுயவடிவம்.இரண்டாவது அக்கதையைச் சினிமாவிற்காக பண்படுத்துதல் அல்லது மாற்றி அமைத்தல்.இதைத்தான் 'டிரீட்மென்ட்' என்கிறார்கள்.மூன்றாவது படங்களாகவே கதையை எழுதுவது.இதை 'சினாரியோ' என்றும் 'ஸ்கிரிப்ட்' என்றும் சொல்கிறோம்.

ஒவ்வொரு கதையிலும்..ஒரு முக்கிய சம்பவம் இருக்கிறது.அதேபோல ஒவ்வொரு கதையிலுமொரு தனித் தத்துவம் அல்லது அடிப்படையான கருத்து அடங்கி இருக்கிறது.ராமாயணத்தில் 'ஆதர்ஷ புருஷனின் லட்சணங்கள்' ஒரு அடிப்படைத் தத்துவம்.மார்க்கண்டேயன் கதை 'விதியை மதியால்' வெல்லலாம்..என்னும் அடிப்படைக் கருத்தின் மேல் கட்டப்பட்டது.கண்ணகி கதை 'ஒரு கற்புக்கரசியின் கோபம் உலகையே எரித்துவிடும்' என்ற கருத்தின் மேல் எழுந்தது.

எனவே, சினிமாவிற்குக் கதை எழுதுகிறவர் முதலில் அந்தக் கதையின் அடிப்படைக் கருத்து என்ன என்பதை முதலில் நிச்சயம் செய்துக் கொள்ள வேண்டும்.அந்தக் கருத்தை விளக்கிச் சொல்வதற்காகத்தான் கதை எழுதப் படுகிறது.ஆகையால் கதையின் ஆரம்பம், வளர்ச்சி,முடிவு எல்லாம் அதை விளக்குவதற்காகவே அமைக்கப் பட வேண்டும்.

அதே போல.. கதை தங்குத் தடையின்றி மட மட என நகர வேண்டும்.அனாவசியமாக நிற்கக் கூடாது.ஒரு சம்பவத்திற்குப் பிறகு அடுத்தது...அதற்கடுத்தது என்று, நிற்காமல் மேலே மேலே போய்க்கொண்டே இருக்க வேண்டும்.படத்தில், கதையை நேருக்கு நேர் நடப்பது போலவே பார்ப்பதால் அது வேகமாக நகராவிட்டால் சலிப்புத் தட்டிவிடும்.ருசி குறைந்துவிடும்

(சிறுகதை எழுத்தாளர்,நாடக ஆசிரியர், சினிமா கதை,வசனகர்த்தா ஆகிய பி.எஸ்.ராமையா எழுதிய சினிமா என்னும் நூலிலிருந்து...
இப்புத்தகம் இப்போது கிடைக்குமா எனத் தெரியவில்லை.யாரிடமாவது இருந்தால் வாங்கிக் கொள்கிறேன்.தெரிவிக்கவும்.
பி.எஸ்.ராமையா நாலு வேலி நிலம், போலீஸ்காரன் மகள்..ஆகிய திரைப்படங்களின் கதைக்கு சொந்தக்காரர் ஆவார்)