Friday, December 31, 2010

தேர்தல் வருது (கவிதை)





தேர்தல் வருது

தேர்தல் வருது

தண்ணீர் குழாயிலே

தினம் வருது

தெரு விளக்குகள்

அணையாம எரியுது

மின் வெட்டு

மறைஞ்சுப் போச்சு

தார்ச் சாலைகள்

வழவழப் பாயிடுச்சு

ரேஷன்ல அரிசி

புழு இல்லாம கிடைக்குது

விண்ணைத் தொட்ட

விலைவாசியும்

மண்ணைத் தொடப்போகுது

தேர்தல் வருது

தேர்தல் வருது

தெரிஞ்சுப் போச்சு

மாக்களுக்கு

தாய் மண்ணே வணக்கம்..தேங்காய்..மாங்காய்..பட்டாணி..சுண்டல் (31-12-10

2010 ஆம் ஆண்டே சென்று வா..
நீ எங்கள் நாட்டிற்கு பல நினைவுகளை விட்டுச் சென்றிருக்கிறாய்..
தமிழகத்தைப் பொறுத்தவரை..
தமிழக சட்டப் பேரவை,தமிழக செயலக வளாகம்,உலகத் தமிழ் செம்மொழி மகாநாடு,அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகம்,தஞ்சைக் கோயில் 1000 ஆவது ஆண்டு விழா, செம்மொழிப் பூங்கா..இப்படி பல ஞாபகத்தில் இருக்க வேண்டிய நிகழ்வுகள்.
ஆனால் அதே நேரம் எங்கள் அரசியல்வாதிகளால்..நாடே தலை குனிய நேரிட்ட ஊழல்கள்..
வரலாற்றில்...இவ்வாண்டை புரட்டிப்பார்க்கும் எதிர்கால இளைஞர்களுக்கு நீ ஊழல் ஆண்டாகவேத் தெரியப் போகிறாய்.
குடம் பாலில் நஞ்சு செலுத்தப்பட்டு விட்டது.
அனைத்து மக்கள் சார்பிலும் உன்னிடம் நான் அதற்கு மன்னிப்புக் கேட்கிறேன்..
இனி இந்திய அளவில்..நீ சாதித்தது என்ன...
அமெரிக்காவில் சென்று பணி புரிய வழங்கப்படும் H1B விசா பெற போட்டி குறைந்து விட்டது.சாதாரணமாக வருடத்திற்கு 65000 விசாக்கள் வழங்கப் படும்.ஆனால் அவை டிசம்பர் மாதத்திற்குள் காலியாகிவிடும்.ஆனால் இந் நிதி ஆண்டில் இன்னமும்11000 விசாக்கள் வாங்க ஆளில்லாமல் இருக்கிறது.இது நம் நாட்டில் வேலை வாய்ப்புகள் பெருகி வரும் நல்ல அறிகுறி.
2008ஆம் ஆண்டு முதல் பின்னணியில் உள்ள உலகப் பொருளாதாரத்தை தூக்கி நிறுத்துவதில் இந்தியாவின் பங்கு மிகப் பெரிய அளவில் உதவியுள்ளது.உன் ஆண்டில் இந்தியா இறக்குமதியில் உலக வர்த்தகம் 13.5 விழுக்காடு உயர்ந்துள்ளது.
200 பில்லியன் டாலர்கள் ஏற்றுமதியும், 350 பில்லியன் டாலர்கள் இறக்குமதியும் சேர்த்து 550 பில்லியன் டாலர்கள் பன்னாட்டு வர்த்தகம் உன் காலத்தில் தான் நடந்துள்ளது.இது மிகப் பெரிய அளவில் பன்னாட்டு வர்த்தகத்தை உயர்த்த உதவியுள்ளதாக மதிப்பீடுகள் சொல்கின்றன.
அதுமட்டுமா...அமெரிக்காவில் வேலை வாய்ப்பு உருவாவதில் இந்தியாதான் உதவுகிறதே தவிர..அமெரிக்காவால் இந்தியர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாவதில்லை என மென்பொருள் தொழில் நுட்ப நிறுவனங்களின் கூட்டமைப்பின் நாஸ்காமின் தலைவர் சோம் மிட்டல் கூறியுள்ளார்.மேலும் முதன்மை
முதலீட்டு நாடாகவும் அமெரிக்கா உள்ளது.உண்மையைக் கூறுவதானால்..அமெரிக்காவில் முதலீடு செய்வதில் இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது.இதுவும் உன் காலத்தில் அமைந்ததே.
அவ்வளவு ஏன்..ஆயிரம் ஊழல் குற்றச்சாட்டு சொன்னாலும்...உலகே வியக்கும் வகையில் காமென்வெல்த் விளையாட்டுகள் உன் காலத்தில் தான்.
ஆகவே..குறைகளை மறந்து நிறைகளை மட்டுமே எடுத்துக் கொண்டு நீ செல்..உன்னை வாழ்த்தி விடை அளிக்கிறோம்.
2011...ஏ..நீ வந்து...இந்த ஆண்டு ஏற்பட்ட குறைகளை..களங்கங்களை முடிந்த அளவில் துடைத்து..எங்களுக்கு..அதாவது சாமான்யனுக்கு நல்லதை அள்ளித் தரும் நல்ல ஆண்டாய் அமைந்துவிடு.
உலக அளவில் ஐ.நா., சபை உன்னை சர்வதேச காடுகள் ஆண்டாக பிரகடனம் செய்துள்ளது.

டிஸ்கி -அனைவருக்கும் தமிழா தமிழா வின் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்

Thursday, December 30, 2010

வெங்காயம்..(கவிதை)




வெங்காய

விலையேற்றத்திற்கு

பெரியாரைக் கேள்

என்றிட்டார் முதல்வர்

கேட்டேன்

உரிக்க உரிக்க

ஒன்றுமில்லாதது

ஆட்சியையே மாற்றியிருக்கு

மறந்திடாதே

வெங்காயம் என்றிட்டார்

Wednesday, December 29, 2010

கவரிமானும்..நாங்களும் (கவிதை)





உரோமம் போனால்

உயிர் வாழாதாம்

கவரிமான் கூட்டம்

மானம் போனாலும்

உரோமமேப் போச்சு

எண்ணுவது

எங்கக் கூட்டம்

Tuesday, December 28, 2010

திரைப்பட இயக்குனர்கள்-11 மகேந்திரன்

தமிழ்த் திரையுலகில் பல இயக்குனர்கள் இருந்தனர்,இருக்கின்றனர், இருப்பர்..

அவர்களில் அதி திறமைவாய்ந்தவர்கள் என்று பட்டியலிட்டால் கண்டிப்பாக முதல்வரிசையில் இருப்பவர்களில் ஒருவராக இருப்பார் மகேந்திரன்.

அலெக்ஸாண்டர் என்ற தன் பெயரை..தன்னுடன் கல்லூரியில் படித்த மகேந்திரன் என்னும் தடகள வீரர் ஞாபகமாக தன் பெயரையும் மகேந்திரன் என மாற்றிக்கொண்டார்.ஆரம்பகாலத்தில் ஒரு பத்திரிகையில் வேலை செய்தார்.பின் இவரின் நாடகம் தங்கப்பதக்கம் ..சிவாஜி நாடகக் குழுவினரால் நடிக்கப்பட்டு..பி.மாதவன் இயக்கத்தில் மாபெரும் வெற்றி படமாய் வந்தது.

'முள்ளும் மலரும்' என்ற உமாசந்திரன் அவர்கள் எழுதிய நாவல் மகேந்திரனை திரைப்பட இயக்குனராக அறிமுகப் படுத்தியது.ரஜினிக்கும் மாறுபட்ட நடிப்பு.படம் மாபெரும் வெற்றி அடைந்தது.1978ல் இப்படம் வந்தது.

பின்னர் 1979ல் புதுமைப்பித்தன் எழுதிய சித்தி என்னும் கதையே இவர் இயக்கத்தில்..'உதிரிப்பூக்களாய்' பூத்தது.இதுவரை இதற்கு ஈடாக ஒரு படம் தமிழில் வரவில்லை எனலாம்.இயக்குனர் மணிரத்தினம் ஒரு பேட்டியில்..இப்படத்திற்கு இணையாய் ஒரு படம் இயக்கினால்தான் எனக்கு சந்தோஷம் உண்டாகும் என இப்படத்தை சிறப்பித்துள்ளார்.

பின்னர் ரஜினி நடித்த ஜானி இவரின் மற்றொரு வெற்றி படம்.

இவர் இயக்கிய மற்ற படங்கள்



பூட்டாத பூட்டுகள் (பொன்னீலன் கதை)

நண்டு (சிவசங்கரி கதை)



தமிழ் நாவலையோ,சிறுகதையையோ திரைப்படமாய் எடுத்த இயக்குநர் இவர் .



நெஞ்சத்தைக் கிள்ளாதே

மெட்டி

அழகிய கண்ணே

கை கொடுக்கும் கை

கண்ணுக்கு மை எழுது

ஊர் பஞ்சாயத்து

சாசனம்

ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.

இவர் திறமையை திரையுலகு சரிவர பயன்படுத்திக் கொள்ளவில்லை எனலாம்.

சமீபத்தில்..கூட இயக்குனர் சங்க விழா ஒன்றில் இயக்குனர் பாலசந்தர் அவர்கள் ரஜினியிடம் 'உங்களுக்கு பிடித்த இயக்குநர்' என்ற கேள்விக்கு..ரஜினி உடனடியாக 'மஹேந்திரன்' என்றதை இங்குக் குறிப்பிட விரும்புகிறேன்.

இவர் இயக்கிய படத்திலிருந்து..


Monday, December 27, 2010

வாய் விட்டு சிரிங்க..

தலைவர்- ஸ்பெக்ட்ரம் ஊழல் நாட்டுக்கு இழப்பு..நாட்டுக்கு இழப்பு இல்லை ன்னு இரண்டுவிதமா பேச்சு தயாரிக்கச் சொல்லியிருக்கார்
ஏன்?
ஆளும் கூட்டணியில் சேர்ந்தாலும் சரி, எதிர்க்கட்சி கூட்டணியில் சேர்ந்தாலும் சரி..அதற்கேற்ப பேசலாமேன்னு தான்

2)என் பெண்ணை கல்யாணம் செய்துக் கொடுத்தப்போ கண் கலங்காம பாத்துப்பேன்னு சொன்னதை நம்பினேன் மாப்பிள்ள..கடைசியிலே வெங்காயம் வாங்காம இருக்க நீங்க போட்ட ப்ளான் அது ன்னு தெரியலை

3)நீதிபதி- (குற்றவாளியிடம்) உனக்குத் தேவையானால் அரசாங்கமே வக்கீல் ஏற்பாடு செய்யும்
குற்றவாளி- வேணாங்க..பாராளுமன்ற கூட்டுக் குழு விசாரணக்கு ஏற்பாடு செய்யுங்க அது போதும்

4)நீதிபதி தன் தீர்ப்பைப் படிச்சுட்டு தானே ஏன் கண்ணீர் வடிக்கிறார்
நியாயமான் தீர்ப்பு வழங்க முடியாமல் தன் கைகள் கட்டுப் போடப்பட்டதை எண்ணி நீதிதேவதை முன் கண்ணீர் விடுகிறார்

5)தொண்டர்களே! உஷாராய் இருங்கள்..எதிர்க்கட்சியினர் 'புதியதோர் உலகம் செய்வோம்' என்கிறார்கள்..இந்த உலகத்தை அபகரித்துச் செல்ல அவர்கள் போடும் திட்டம் இது.

6)எங்க தலைவர் மாநில பிரச்னைகள் குறித்து மத்திய அரசுக்கு 1600 கடிதங்கள் எழுதியுள்ளார்..
எங்க தலைவர் மாநில அரசைக் கண்டித்து 1601 ஆர்ப்பாட்டங்கள் நடத்தியுள்ளார்

7)டாக்டர்..மாநில பிரச்னைகள் குறித்து..நான் நாளை உண்ணாவிரதம் இருக்க ஆரம்பிக்கப் போகிறேன்..என் உடல் சக்திக்கு ஏதேனும் மாத்திரைகள் கொடுங்கள்..
இந்த மாத்திரையை தினமும் காலை, மாலை சாப்பிடுங்கள்
சாப்பாட்டுக்கு முன்னரா..சாப்பாட்டுக்கு பின்னரா

Sunday, December 26, 2010

பெரியாரின் பெருந்தன்மை



கல்கி அவர்களின் மகள் ஆனந்திக்கு திருமணம் நிச்சயமாகி...கல்கி திருமண அழைப்பிதழை எடுத்துக் கொண்டு பெரியாரை அழைக்கப் போனார்.பெரியாரும் தனக்கு அன்று எதுவும் வேலை இல்லை என்றும்,கண்டிப்பாக வருவதாகவும் கூறினார்.திருமணம் கல்கி தோட்டத்தில் நடந்தது.காலையில் பெரியார் வரவில்லை.

ஒரு வேளை..பெரியாருக்கு..அவசர வேலை ஏதாவது வந்திருக்கும் என கல்கி எண்ணினார்.

மதியம் 12மணி வாக்கில்..கல்கியின் வீட்டிற்கு ஒரு வேனில் பெரியார் வந்தார்.

திருமணம் நடந்த இடத்திற்கு அருகில்..கல்கியின் இல்லம் இருந்தது.அவரது இல்லத்தில் அப்போது கலைவாணர்,சின்ன அண்ணாமலை..மற்றும் சில எழுத்தாளர்கள் பேசிக்கொண்டிருந்தனர்.

பெரியாரைப் பார்த்த அவர்கள் உடனே..ஓடோடி..கல்கியை அழைத்து வந்தனர்.

கல்கி..ஆனந்தியையும்..புது மாப்பிள்ளையையும் பெரியார் காலில் விழுந்து ஆசி பெறச் சொன்னார்.பெரியார் உடனே...கொஞ்சம் விபூதி..குங்குமம் கொண்டுவரச்சொல்லி அவர்கள் நெற்றியில் இட்டார்.

பின்..கல்கி..அவரிடம்..'ஐயா..காலையில் உங்களை எதிர்ப்பார்த்தேன்...ஏதாவது வேலை வந்துவிட்டதா' என்றார்.

அதற்கு பெரியார் 'எந்த வேலையும் இல்லை..திருமணத்திற்கு பல உறவினர்கள்,நண்பர்கள் வந்திருப்பார்கள்.அவர்கள் எதிரே,திருமணத்திற்கு கறுப்பு சட்டையுடன் நான் வருவதை அவர்கள் விரும்ப மாட்டார்கள்.அதனால் தான் வரவில்லை'என்றார்.

அடுத்த கல்கி இதழில்..பெரியார் மணமக்களுக்கு விபூதி,குங்குமம் இடுவதை புகைப்படத்துடன் வெளியிட ஆசிரியர் குழுவினர் முயல..கல்கி அவர்களைக் கூப்பிட்டு..கண்டித்ததுடன் 'பெரியார் விபூதி இட்டது..அவர் நம்பிக்கையால் அல்ல...அவர் தன் கொள்கைகளை விட்டுக்கொடுத்ததாக அர்த்தம் இல்லை.நமது நம்பிக்கைகளை அவர் மதித்தார் அவ்வளவுதான்.இது அவர் பெருந்தன்மையைக் காட்டுகிறது'என்று சொல்லி அந்த புகைப்படங்களைக் கிழித்தார்.

இது கல்கியின் பெருந்தன்மை.

Saturday, December 25, 2010

காங்கிரஸ் கூட்டணியுடன் போட்டியிட்டால்...

 திமுகவுடன் மீண்டும் கூட்டணி வைத்து தேர்தலில் போட்டியிட்டால் காங்கிரஸ் தோற்றுவிடும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறியுள்ளார்.
அண்மையில் தமிழகம் வந்த காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தியிடம் திமுக கூட்டணி பற்றி இளைஞர் காங்கிரஸார் புகார் கூறினர். அதேபோல், திமுக ஆட்சி சரியில்லை என்று ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறிவருகிறார். இவை பற்றி இன்று மதுரை வந்த ஈவிகேஎஸ் இளங்கோவனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்குப் பதிலளித்த அவர், "திமுக கூட்டணியில் மீண்டும் போட்டியிட்டால் காங்கிரஸ் தோற்கும். தை பிறந்தால் வலி பிறக்கும். பொறுத்திருந்து பாருங்கள்" என்று கூறினார். அதற்கு வலி நிவாரணி ஏதேனும் உண்டா என்று செய்தியாளர் கேட்டதற்கு, " நிவாரணி எல்லாம் இல்லை நேரடியாக அறுவைச் சிகிச்சைதான்" என்று சூசகமாகப் பதிலளித்தார் இளங்கோவன்.


இதைப் படிக்க சிரிப்புதான் வருகிறது.


உண்மையில் காங்கிரஸ்..தி.மு.க.,கூட்டணியில் இருந்தால்..தி.மு.க.,வின்வெற்றி வாய்ப்பே பாதிக்கும்.

குறள் இன்பம் -5

வள்ளுவனின் சொல் விளையாட்டு, சொல்லழகு பற்றிய இத் தொடர் இடுகையில் இன்று நான்கு குறள்கள்..

கொடுங்கோன்மை என்னும் அதிகாரத்தில் மூன்றாம் குறள்..நாடு என்பதை எவ்வளவு அழகாக மீண்டும் மீண்டும் சொல்லியுள்ளார்



நாடொறும் நாடி முறைசெய்யா மன்னவன்

நாடொறும் நாடு கெடும்

ஆட்சியினால் விளையும் நன்மை தீமைகளை நாள் தோறும் ஆராய்ந்து அவற்றிற்குத் தக்கவாறு நடந்து கொள்ளாத அரசு அமைந்த நாடு சீர்குலைந்து போய்விடும்

இதே அதிகாரத்தில் ஆறாம் குறள்..

மன்னர்க்கு மன்னுதல் செங்கோன்மை அஃதின்றேல்

மன்னாவாம் மன்னர்க் கொளி

நீதிநெறி தவறாத செங்கோன்மைதான் ஓர் அரசுக்கு புகழைத் தரும்.இல்லையேல் அந்த அரசின் புகழ் நிலையற்றுச் சரிந்து போகும்

ஆள்வினை உடைமை என்னும் அதிகாரத்தில் நான்காம் குறள்..தாளாண்மை,வேளாண்மை,வாளாண்மை..அடடா....என்ன சொல்நயம்


தாளாண்மை இல்லாதான் வேளாண்மை பேடிகை


 வாளாண்மை போலக் கெடும்


ஊக்கமில்லாதவர் உதவியாளராக இருப்பதற்கும், ஒரு பேடி, கையுல் வாள்தூக்கி வீசுவதற்கும் வேறுபாடு இல்லை..

அதாவது..ஊக்கமில்லாதவர் யாராயிருப்பினும் அவர்கள் கோழைகள் என்கிறார்.

இடுக்கண் அழியாமையில் மூன்றாம் குறள்..இடும்பை என்பதே நான்கு முறை வந்து வள்ளுவனின் ஆற்றலைத் தெரிவிக்கிறது

இடும்பைக் கிடும்பை படுப்பர் இடும்பைக்

கிடும்பை படாஅ தவர்

துன்பம் சூழும் போது, துவண்டு போகாதவர்கள் அந்தத் துன்பத்தையே துன்பத்தில் ஆழ்த்தி அதனைத் தோல்வியுறச் செய்வார்கள்.




இதைத்தான் பாரதி,,'காலா..உன்னை காலால் மிதிக்கிறேன் வாடா" என்றாரோ?
பாரதிதாசனோ..'துன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ இன்பம் சேர்க்க மாட்டாயா? என்றார்.

Friday, December 24, 2010

ஆ(ற)ரத்தழுவினேன் (கவிதை),



கடலலைகள்

கரையைக் கண்டு மிரண்டு

கரைந்து உள்ளிடுதலும்

கார்முகில் கண்டு

கலாபம் விரிக்கும் தோகையும்

விடியலில் விண்ணின்

வண்ணக் கலவையும்

ஆலம் விழுதுகளின்

ஆகம் தழுவலும்

விதிமீறல் அன்று

இயற்கை

இல்லா   ஒன்றை நாடும்போது

இருக்கும் ஒன்றையும்

இழக்கலாமா

வெற்றி இலக்கிற்காக

வீறு கொண்டு முயன்றால்

தோற்பது யார்..

விட்டுக்கொடுத்தேன் வெற்றியை

அனைவரும் வெறுக்கும் தோல்வி

அணங்கை

ஆ(ற)ரத் தழுவினேன்

இன்று எம்.ஜி.ஆர்., நினைவு நாள்

இன்று எம்.ஜி.ஆர்., நினைவு நாள்..


அவர் அரசியல்வாதிகள் பற்றி சொல்லும் பாடல் நம்ம நினைவுக்கு

Thursday, December 23, 2010

தேங்காய்..மாங்காய்..பட்டாணி..சுண்டல் (24-12-10)

1)லண்டனில் உள்ள புகழ் பெற்ற madame tussauds மெழுகுச் சிலை அருங்காட்சியகத்தில் விரைவில் ரஜினியின் மெழுகுச் சிலை நிறுவ முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளவாம்.இந்தியாவிலிருந்து ஏற்கனவே அமிதாப்,ஐஸ்வர்யா ராய் ஆகியோருக்கு லண்டன் மியூசியத்தில் மெழுகுச் சிலை வைக்கப்பட்டுள்ளது.

2)சென்னை மாநகரில் மட்டும் செல்ஃபோன் பயன்படுத்துவோர் எண்ணிக்கை ஒரு கோடிக்கும் அதிகமாக உயர்ந்துள்ளதாம்.செல்ஃபோங்களில் நாங்கு லட்சம் பேர் இண்டெர்னெட் பார்க்கிறார்களாம்

3)ஊழல் குறித்த விஷயங்களை கையாளும் போது இந்திய அரசு சில தவறுகளைச் செய்திருக்கலாம்.சில குறைகளும் இருந்திருக்கலாம்.அவற்றையெல்லாம் நிவர்த்தி செய்ய அனைத்து முயற்சிகளும் எடுக்கப் படும் என்றுள்ளார் பிரதமர்.(எப்படியோ,,..வாயைத் திறந்தாரே!)

4)உலகளவில் அவுட்சோர்சிங் பணியை அளிக்கும் முன்னணியில் உள்ள முதல் 30 நாடுகளில் உள்ள ஐ.டி.,நிறுவனங்களிடம் அவுட்சோர்சிங் பணிகளை அளிப்பதில் சிறந்த நாடு எது என்பதை பத்து அம்சங்களின் அடிப்படையில் தேர்வு செய்தனர்.இதில் பெரும்பாலான நிறுவனங்கள் இந்திய ஐ.டி.,நிறுவனங்களையே அவுட்சோர்சிங் பணிக்கு தேர்ந்தெடுத்துள்ளனராம்.

5)ஜார்கண்ட் மாநிலம் ஜம்ஷெட்பூரில் டயர் வியாபாரி சத்னம் சிங் கம்பீர் என்பவர் தன் கடையில் டயர் வாங்கினால் வெங்காயம் இலவசமாகத் தருவதாக அறிவித்துள்ளாராம்.ஒரு டிரக் டயர் வாங்கினால் ஐந்து கிலோ , கார் டயர் எனில் ஒரு கிலோ வெங்காயம் இலவசமாம்.

6)நாட்டில் காய்கறிகள், பழங்கள் போன்றவற்றைப் பாதுகாக்க போதிய வசதிகள் இல்லாததால் ஆண்டுக்கு 6 கோடி டன் காய்கறிகள், பழங்கள் வீணாகின்றனவாம்.இப்படிச் சொன்னவர் மத்திய உணவு மற்றும் விவசாயத் துறை இணை அமைச்சர் கே.வி.தாமஸ்.(வீணானாலும் பரவாயில்லை..இலவசமாகக் கொடுக்க முடியாது என்ற கொள்கையைக் கொண்ட மத்திய அரசு ஆயிற்றே..என்ன செய்ய..)

7)பிரபல சமையல் கலைஞர் தாமோதரன் ..இந்த மாதம் 20 ஆம் தேதி காலை எட்டு மணிக்கு சமைக்கத் தொடங்கி, 21ஆம் தேதி காலை 8.30 வரை சமைத்துள்ளார்.இதில் 617 வகையான 180.64 கிலோ உணவை தணி நபராக செய்து கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளாராம்.வாழ்த்துகள் தாமோதரன்.


8)மேலே உள்ள படம் என்ன வென்று தெரிகிறதா...வைகுண்ட ஏகாதசி,சிவராத்திரி ஆகிய நாட்களில் ..'பரமபதம்' விளையாடுவார்கள் முன்பெல்லாம்.கொஞ்சம் ..கொஞ்சமாக இவ் விளையாட்டுப் பழக்கம் அழிந்து வந்தாலும்..மேலை நாடுகளில் , அதையே இப்போது குழந்தைகள் விளையாட ஆரம்பித்துள்ளனராம்.அந்தப் படம் தான் இது.

காதல் மீன்கள் (கவிதை)



கரையோரம் நீ
உன்னைப் பார்த்த
மீன் காதலன்
உன்னைப் போல
கண் கொண்டவளைக் காண்
கரையில் என்றிட்டான்
மீன் காதலியிடம்

Wednesday, December 22, 2010

2010ல் வந்த எனக்குப் பிடித்த படங்கள்..





2010ஆம் ஆண்டு வந்த படங்களில் எனக்குப் பிடித்த சில படங்கள்..



தமிழ்ப்படம்...தமிழ் சினிமாக்கள் பற்றி கிண்டல் அடிக்கும் படம்..சிவா நடிக்க..சி.எஸ்.அமுதன் இயக்கம்..ஒரே தொழில் இருந்து..அதை நக்கலடிப்பது சற்று மிகையாகப் பட்டாலும்..சற்று வாய் விட்டு சிரிக்க வைத்த படம்



அங்காடி தெரு..பெரிய..பெரிய கடைகளில் வேலை செய்வோர்..இவ்வளவு துன்பத்துக்கு ஆளாகிறார்களா என வியக்கவைத்து..மனதையும் கனக்க வைத்த படம்..அருமையான திரைக்கதை அமைப்பு..சிறப்பான வசனங்கள்..வெல்டன் வசந்த பாலன்.மகேஷ்,அஞ்சலி நடித்த படம்.



விண்ணைத் தாண்டிவருவாயா...சிம்பு,திரிஷா நடிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் வந்த சற்றே வித்தியாசமான படம்..படமாக்கிய விதம்,ஒலிப்பதிவு,ஒளிப்பதிவு என எந்த ஒரு துறையிலும் குறை சொல்ல முடியா படம்..கிளைமாக்ஸ் அருமை..



களவாணி..விமல், ஓவியா நடிப்பில் ஏ.சற்குணம் இயக்கத்தில் வந்த படம்..கிராமத்தில் நடக்கும் விஷயங்களை அருமையான கதையுடன் காட்டியிருப்பது படத்தின் வெற்றிக்கு காரணம்



மதராசபட்டிணம்..சுதந்திரத்திற்கு முன் நடைபெற்ற நிகழ்ச்சி..காதல்..என வந்த படம்..அந்த நாளைய சென்னையை அழகாக அமைத்த ஆர்ட் டைரக்டருக்கு பாராட்டுகள்.ஜி.வி.பிரகாஷ் இசையில் பாடல்கள்..ஆர்யா, ஏமி ஜாக்சன் (!!) நடிப்பு.விஜய் இயக்கம்..அருமையான இயக்கம்



வம்சம்..அறிவுமதி,சுனைனா நடித்த மற்றொரு கிராமப் படம்..இரு கிராமங்களிடையே சண்டை..காதல் என படம் பழய பல்லவியாய் இருந்தாலும்..எடுத்த விதம் படத்தை ரசிக்க வைத்தது.நன்றி இயக்குர்'பசங்க' பாண்டிராஜன்



பாஸ் என்ற பாஸ்கரன்..ஆர்யா,நயன்தாரா, சந்தானம் நடித்தது.நகைச்சுவையுடன் ஆன கதை அமைப்பு படத்தை எனக்குப் பிடித்த படங்களில் ஒன்றாக்கியது.



தவிர்த்து..விளம்பரம்,வசூல் என வெற்றி பெற்ற படம் சூர்யாவின் நடிப்பில் வந்த சிங்கம், கார்த்தி நடித்து வந்த இருபடங்களும் (பையா,நான் மகான் அல்ல)



எந்திரன் இந்த ஆண்டு தமிழ் சினிமாக்களின் சூபர் ஸ்டார் நடித்த சூபர் படம்



ஏமாற்றத்தை அளித்த படங்கள்..



தனுஷ் நடிப்பில் வந்த குட்டி, மற்றும் உத்தமபுத்திரன்...தனுஷ் சற்று கவனமாய் இருக்க வெண்டும்..இல்லையேல்..விஜய் படங்களுக்கான கதி இவர் படங்களுக்கும் ஏற்படக் கூடும்.



ராவணா..மிகவும் எதிர்பார்த்து ஏமாற்றத்தைத் தந்த படம்.



ஆயிரத்தில் ஒருவன்..மிகப் பெரிய எதிர்பார்ப்புடன் வந்து சற்றே வியக்க வைத்த படம்..செல்வராகவன்..திரைக்கதையில் சற்று கவனம் செலுத்தியிருந்தால்..தமிழ்ப்படங்களில் ஒரு உதாரணமாக திகழ்ந்திருக்க வேண்டிய படம்

கமலின் மன்மத அம்பு வருட இறுதிவாரம் வருவதால்..அதைப் பார்த்து..முடிவுகள் சொல்ல அடுத்த வருடம் ஆகுமாதலால் இந்த லிஸ்டில் அது சேரவில்லை.

நந்தலாலா..மிஸ்கினின் இயக்கத்தில் வந்த வெற்றி படமாக இருந்திருக்க வேண்டிய தோல்விப் படம்.



நன்கு ஒடியிருக்க வேண்டும் என நான் நினைத்து தோல்வியைத் தழுவிய படங்கள்..நாணயம், தா, துரோகி

அவன்..(கவிதை)


அவளை நினைத்து

அவளைக் கெடுத்து

அவளுக்கு மகனைக் கொடுத்து

காலையில் விழித்தெழும்

மேன்ஷன் வாழ்

பெண்ணை அறிந்து

பெண்ணுடன் வாழ வழியில்லா

மாத சம்பள ஊழியன்

Tuesday, December 21, 2010

முதல்வருடன் ஒரு கற்பனை பேட்டி

கேள்வி- உங்கள் முன் யானையைப் போல் ஊழல் இருப்பதாகச் சொல்லப்படும்போது..அதற்கான பதிலை நீங்கள் இதுவரை சொல்லவில்லையே

பதில்- யானை அளவு ஊழல் என்றால் மக்கள் நம்ப மாட்டார்கள் என நினைத்தேன்..இப்போது என் அந்த நாள் நண்பர் ;கோ' அவர்கள் பத்திரிகையில் இப்படி எழுதிவிட்டதால் பதில் சொல்ல வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகிவிட்டேன்..மலையளவு ஊழல் என்றால் மக்களால் நம்ப முடியும்..யானை அளவு என்றால் அதை நிரூபிக்கத் தயாரா..அப்படி நிரூபித்தால்..அவர்கள் மீது..

கேள்வி- அவர்கள் மீது என்றால்..

பதில்- உங்கள் ஆசை எனக்குப் புரிகிறது..ஆனால் நான் சொல்வது ஊழல் என குற்றச்சாட்டை சுமத்துபவர் மீது சட்டப் படி நடவடிக்கை எடுப்பேன்..

கேள்வி- அப்போது யானை..

பதில்_யானை..யானை..என்கிறீர்கள் எனக்கு பூனைதான் தெரிகிறது.

கேள்வி- ஸ்பெக்ட்ரம் ஒரு லட்சத்து ..

பதில்- எழுபத்தாறாயிரம் என சரியாகக் கூறுங்கள்.பா.ஜ.க.,வினரே அந்த அளவு ஊழல் நடந்திருக்காது என்றும் 30000 கோடி தான் நடந்திருக்கும் என்று சொல்லியுள்ளார்களே

கேள்வி- அப்போது 30000 கோடி என்பதை ஒப்புக் கொள்கிறீர்களா..

பதில்_ அதை நீங்கள் தான் சொல்கிறீர்கள்

கேள்வி- தலித் நிலங்களையே ஏமாற்றி வாங்கியிருப்பதாக ஒரு குற்றச்சாட்டு..

பதில்- குற்றம் சாட்டப்பட்டவர் ஒரு தலித் என்பதால்..வேறு சாதியைச் சேர்ந்தவர்களை தலித் ஆக்கியுள்ளனர் என் மீது காழ்ப்புணர்ச்சி கொண்ட பத்திரிகையாளர்கள்

கேள்வி_ அப்போ..மற்றவரிடம் நிலம் ஏமாற்றப்பட்டுள்ளது..என்பதை..

பதில்-அதை நான் சொல்லவில்லை நீங்கள் தான் சொல்கிறீர்கள்

கேள்வி  - அமைச்சர் ராஜாவீட்டில் சி.பி.ஐ., ரெய்ட் பற்றி

பதில்- இது சர்வசாதாரணமாக நடப்பது..இதற்கெல்லாம் நாங்கள் பயப்பட மாட்டோம்..

கேள்வி-அமைச்சர் ஆக தயாநிதி மாறன் 600 கோடி..

பதில்- அது பாட்டியையும் பேரனையும் கேட்க வேண்டிய கேள்வி

கேள்வி-காங்கிரஸ் உடன் ஆன கூட்டணி..

பதில்- நாங்கள் கழற்றிவிட மாட்டோம்..அதற்கான நேரமும் அல்ல இது..

கேள்வி- அப்படி ஒருவேளை அவர்கள் கழற்றிவிட்டால்..

பதில்- அதை நீங்கள் தான் சொல்கிறீர்கள்..அவர்கள் சொல்லட்டும்

கேள்வி- ராகுல் தமிழகம் வருவதாக உள்ளதே..உங்களை சந்திப்பாரா..

பதில்- தவறான கேள்வி..அவர் இப்போது தென் ஆப்ரிக்காவில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருக்கிறார்.இப்போது அவர் சென்னை வரமாட்டார் என எண்ணுகிறேன்.வந்தால் எனக்கு தெரிவிக்கவும்

கேள்வி- இளங்கோவன் பற்றி..

பதில்- கண்டவர்களுக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை..தியாகச் செம்மல்..சொக்கத்தங்கம் சோனியா அம்மையாரை மட்டுமே காங்கிரஸாக நினைக்கிறேன்


கேள்வி- கடைசியாக ஒரு கேள்வி..உங்கள் குடும்பமே திரையுலகை ஆட்டிப்படைப்பதாக...

பதில்- என் குடும்பத்தைச் சேர்ந்தோர் கொடிகட்டி திரையுலகில் பிராகாசிப்பதால் இந்தக் கேள்வி கேட்கிறீர்கள்..இதையே..ரஜினி,கமல் ஆகியோரிடம் கேட்க முடியுமா

Monday, December 20, 2010

நாஞ்சில் நாடனும்..சாகித்ய அகாதமி விருதும்..

சில சமயங்களில் சில விருதுகள் சிலருக்கு வழங்கப்படுவதால் அந்த விருதிற்கான பெருமை கூடும்.

அப்படிபட்ட நிலை இப்போது..

நாஞ்சில் நாடனுக்கு சாகித்ய அகாதமி விருது கிடைத்துள்ளது.

தகுதியான நபருக்கு.விருது சற்று தாமதித்து கிடைத்துள்ளது.

மண் மணம் கமிழ எழுதுபவர் இவர்.

தங்கர் பச்சான் தயாரித்த 'சொல்ல மறந்த கதை' இவரது தலை கீழ் விகிதங்கள் நாவலே ஆகும்.

விகடனில் சமீபத்திய இவர் கதை 'நீலவேணீ டீச்சர்" படித்து..அதை பாராட்டி இடுகையிட்டேன்.

பின் சக நண்பர் சுரேகாவின் உதவியால் நாடனிடம் மின்னஞ்சலில் பேசும் வாய்ப்பு கிடைத்தது.

என்ன ஒரு நட்பு நாடும் இனிமையான குரல் அவருடையது.மிகவும் மகிழ்ந்தார்.

இந்திய ஒருமைப்பாடு பற்றி நாஞ்சில் நாடன்

இந்திய ஒருமைப்பாடு என்பது ரவா லாடு போல.குஞ்சாலாடு போல..அல்லது மராத்திக்காரன் சொல்லும் பேசின் லாடு போல..பார்க்க உருண்டையாக,அழகாக..இளம் மஞ்சள் நிறமாக,முந்திரிப்பருப்பு,கிஸ்மிஸ் பதித்ததாக கவர்ச்சியாக இருக்கிறது.இது இனிப்பானது என்பதும் நமக்குத் தெரியும்..ஆனால், அழுந்த விரல்களால் தொட்டால் உதிர்ந்துப் போகும் பொல பொலவென்று மாவாக - விகடனில்  -தீதும்..நன்றும் (நாஞ்சில் நாடன்)




வாழ்த்துகள் நாடன்
http://tvrk.blogspot.com/2010/03/blog-post_05.html

சீமானின் கேள்விகள்

 ராஜபக்சேவின் போர்க் குற்றத்தை விசாரிக்கக் கோரி உலக நாடுகளே ஒருசேரக் குரல் கொடுக்கையில், சொந்த இனத்துக்காக சட்டமன்றத்தில் ஒரு தீர்மானத்தை இயற்றக்கூட நம் முதல்வருக்கு தெம்பில்லாமல் போய்விட்டதா?


சுட்டு விளையாட ஈழ உயிர்கள் இல்லாது போனதால், மீனவர்களை விரட்டும் சிங்களகடற்படையைக் கண்டிக்க இந்த வக்கற்ற மண்ணில் யாருக்குமே வாய் இல்லையா?
ஈழப் போர் துயரமான முடிவாக அமைந்த வேளையிலும், தொப்புள் கொடி உறவாகத் துடிக்க வேண்டிய தமிழகத் தலைவர், 'சகோதர யுத்தம்... சகோதர யுத்தம்� என்றே திரும்பத் திரும்பச் சொல்லி, வெந்த புண்ணில் வேல் பாய்ச்சினாரே... இந்தக் குரூரத்தை எப்படி ஐயா பொறுப்பது?
பிரபாகரன் நிகழ்த்தியது சகோதர யுத்தம் என்றால், தா.கிருட்டிணன் கொல்லப்பட்டது என்ன சகோதர முத்தமா? இதைக் கேட்டால், உங்களுக்குப் பொத்துக்கொண்டு வருகிறதா கோபம்?
நெஞ்சைத் தொட்டுச் சொல்லுங்கள்...
அவர் வீட்டில் சோதனை... இவர் வீட்டில் விசாரணை... எனத் தமிழகமே அல்லோலகல்லோலப்பட்டுக் கிடக்கையில், தமிழக டி.ஜி.பி. மூலமாக அதிமுக்கிய அறிக்கை ஒன்றை அவசரமாக வெளியிடவைத்து இருக்கிறீர்கள். பிரதமர் மன்மோகன் சிங், முதல்வர் கருணாநிதி, மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் ஆகியோரைக் கொலை செய்ய விடுதலைப் புலிகள் திட்டமிட்டு இருப்பதாகச் சொல்லி, இழவு வீட்டிலும் இடி பாய்ச்சி இருக்கிறீர்களே... உங்களின் நெஞ்சைத் தொட்டுச் சொல்லுங்கள். நிஜமாகவே புலிகளால் உங்களுக்கு ஆபத்து இருக்கிறதா?
பிச்சைக்காரர்கள் இல்லை... பிறப்பால் உயர்வு தாழ்வு இல்லை... இச்சைக் கேடுகள் இல்லை... இரவானால் பயம் இல்லை... என உங்களாலோ, உலக மகா தலைவர்களாலோ நடத்திக் காட்ட முடியாத நாட்டின் தலைவனாக இருந்த எங்கள் பிரபாகரன்... உங்களைக் கொல்ல ஆள் அனுப்பி இருக்கிறாரா?
என்ன பின்னணி..? காலம் காலமாக உங்களின் தந்திர - எந்திர விளையாட்டை சகித்துவரும் எங்களை மேற்கொண்டும் நீங்கள் குழப்ப வேண்டாம் மொத்தத்தையும் வாரிக் கொடுத்துவிட்டு நாதியற்று அலையும் புலிப் படையின் மீது பழி போட்டு, உங்களின் பழி பாவங்களைப் பதுக்கப் பார்க்கிறீர்களே... 'புலிகளால் ஆபத்து! என மத்திய உளவுத் துறை அபாயம் பாடியதாகச் சொல்லி ப.சிதம்பரம் வீட்டுக்குப் பாதுகாப்பைப் பலப்படுத்தி இருக்கிறீர்கள்... பிரதமரின் விழாவுக்குப் பெருவாரியான கண்காணிப்புகளை மேற்கொள்ளச் சொல்லி இருக்கிறீர்கள்... தமிழகத்தில் புலிகளின் நடமாட்டம் இருக்கிறதா எனத் தீவிரமாக தேடச்சொல்லி இருக்கிறீர்கள்.
உங்களின் பதற்றத்தைத் தணிக்க... படபடப்பை அடக்க... பாதுகாப்பை உறுதி செய்ய...ஒரே ஒரு விஷயம் சொல்லவா... 'கோழைகளைக் கொல்லும் பழக்கம் புலிகளுக்குக் கிடையாது!'

Sunday, December 19, 2010

திரைப்பட இயக்குனர்கள் -10 -ஏ.பி.நாகராஜன்

இத்தொடர் இடுகையில் இன்று 1960 களில் தன்னிகரற்று விளங்கிய இயகுநர் ஏ.பி.நாகராஜன் பற்றி பார்ப்போம்.

1953ல் நால்வர் என்னும் படத்தின் மூலம் ஒரு நடிகராகவும்..கதைவசனகர்த்தாவாகவும் அறிமுகமானவர் ஏ.பி.நாகராஜன்.பின் அவர் நீண்டகாலம் மக்களால் நால்வர் நாகராஜன் என்றே அழைக்கப்பட்டார்.

பின்னர் அவர் நடிகர் வி.கே.ராமசாமியுடன் சேர்ந்து படத்தயாரிப்பில் ஈடுபட்டார்.லக்ஷ்மி பிக்ஷர்ஸ் என்னும் அவர்கள் நிறுவனத்திலிருந்து நாகராஜன் கதை வசனத்தில் நல்ல இடத்து சம்பந்தம்,வடிவுக்கு வளைகாப்பு ஆகிய படங்கள் வந்தன.

மக்களைப் பெற்ற மகராசி என்னும் படம் மாபெரும் வெற்றி படமாய் நாகராஜனுக்கு அமைந்தது.

பின் ஏ.பி.என்., தனியே விஜயலட்சுமி பிக்சர்ஸ் ஆரம்பித்து 1964ல் சிவாஜியின் நூறாவது படத்தை கதை,வசனம் ,இயக்குநர் பொறுப்பேற்று வெளியிட்டார்.மாபெரும் வெற்றி பெற்ற அப்படம் 'நவராத்திரி'.இதில் சிவாஜி ஒன்பது வேடங்களில் நடித்தார்.

கம்பெனி நடிகர்கள் என்று சொல்வார்கள்.அதுபோல ஏ.பி.என்., படங்களில் சில குறிப்பிட்ட நடிகர்கள் கண்டிப்பாக பங்கேற்பார்கள்.உதாரணத்திற்கு..பி.டி.சம்பந்தம்,டி.என்.சிவதாணு போன்றோர்.

அடுத்து சில ஆண்டுகள் ஏ.பி.என்., காட்டில் மழைதான்.

தொடர்ந்து வெள்ளிவிழா கண்ட திருவிளையாடல்,திருவருட்செல்வர்,திருமால் பெருமை,சரஸ்வதி சபதம்,தில்லானா மோகனாம்பாள்,கந்தன் கருணை (ஏ.எல்.எஸ் தயாரிப்பு)ராஜ ராஜ சோழன் என வெற்றி படங்கள்.அனைத்திலும் சிவாஜி பிதான பாத்திரம் ஏற்றிருப்பார்.

தவிர்த்து..மற்ற நடிகர்கள் நடித்த, வா ராஜா வா,கண்காட்சி,அகத்தியர்,திருமலை தென்குமரி, குமாஸ்தாவின் மகள், மேல் நாட்டு மருமகள் ஆகிய படங்கள் வந்தன.

கடைசியாக 1977ல் எம்.ஜி.ஆர். அவர்களை வைத்து நவரத்தினம் படத்தையெடுத்தார்.

நன்கு படங்களில் சம்பாதித்து..சம்பாதித்த பணத்தை திரையுலகிலேயே இழந்தவர் ஏ.பி.என்.,

தமிழ்திரையுலகு உள்ளவரை கண்டிப்பாக அதன் வரலாற்றில் இவருக்கென ஒரு இடம் உண்டு.

மிகவும் பிரபலமான ..இவர் இயக்கிய திரைப்படத்திலிருந்து ஒரு காட்சி

விஜய்...வருவார்..ஆனால்..வரமாட்டார்..

சமீப காலமாக..ரஜினி அரசியலுக்கு வருவாரான்னு..முத்து படம் வந்ததிலே இருந்து வாயத் திறந்து வைத்துக் கொண்டிருக்கும் சினிமா ரசிர்களுக்கு..சேர்ந்தாற் போல விஜய் நடித்த படங்கள் தோல்வியுற்ற போது..விஜய்யின் நடவடிக்கைகளும்..பேச்சும் விஜய் அரசியலுக்கு வருவாரா என ஒரு கிளைக்கதைக்கான சுவாரசியத்துடன் எதிர்பார்ப்பை ஏற்படுத்தின.

அதற்கேற்றார் போல விஜய்..ராகுல் காந்தியைப் போய்ப் பார்த்தார்..

அங்கு என்ன ஆச்சுன்னு தெரியலே..இடையில்..கலைஞர் குடும்ப கம்பெனியின் நெருக்கம் ஏற்பட்டது.

இதற்கிடையே ஜெ வை ஒரு திருமண விழாவில் சந்தித்ததும்..அ.தி.மு.க., வில் சேருவார் என்றனர் சில ஊடகங்களும்,ரசிகர்களும்.

விஜய்..தனது ,காவலன்' படம் வெளிவந்த பின் தனிக்கட்சி ஆரம்பிப்பார் என்றும்..தேர்தலில் அக்கட்சி போட்டியிடுமா என்றும், தேர்தலுக்குப் பின் அ.தி.மு.க., வுடன் கட்சி இணையும் என்றெல்லாம் சொல்லப்பட்டது.

அனைத்து யூகங்களும்..விஜய் நடித்த படம் வெளியிடுவதற்கான திரையரங்குகள் கிடைக்கவில்லை என்றும் ,அனைத்தும் வம்சம் அண்ட் கோ., பொறுப்பில் வளைத்துப் போடப்பட்டுவிட்டன என்றதும்..மாறின.

விஜய் யின் தந்தை ஜெ வைப் போய்ப் பார்த்தார்..

பின்னர்..எனக்குக் கலைஞரைத் தெரியும்,ஆனால் தி.மு.க., வைத் தெரியாது..
ஜெ வைத் தெரியும் அ.தி.மு.க.வைத் தெரியாது..என்று சந்திரசேகரிசம் பேசினார்..

ஆனால் நடுவில் நடந்ததென்ன என்று தெரியவில்லை..திடீரென..விஜய் 50 படங்கள் நடித்துள்ளார்..இன்னும் 30 படங்கள் அவர் நடிக்க வேண்டும் என எண்ணம்.அதற்கு பின்னரே அரசியல் பற்றி எண்ணுவார் என்பது போல தந்தை அறிக்கை வெளியிட்டுள்ளார்..

உஷ்..வாயை மூடுங்கப்பா..சொல்லிட்டார் இல்ல..என்கிறாரா விஜய்..

எது எப்படியோ..இப்போது கட்சி பற்றி எந்த முடிவெடுத்தாலும் அது தன் திரைவாழ்க்கையை பாதிக்கும் என தெரிந்துக் கொண்டுவிட்டர் போல இருக்கிறது.

இனி தன் கவனத்தை நல்ல திரைப்படங்களில் நடிப்பதில் செலுத்தட்டும்..
ஒரு ரிவைண்ட்




டிஸ்கி- விஜய்யின் இந்த முடிவால்..காவலனுக்கு தியேட்டர் கிடைத்து பொங்கலுக்காவது படம் வரும் என எதிர்பார்க்கலாம்.
விஜய் -அரசியல்

ஐந்தறிவும் ..ஆறறிவும்..(கவிதை)

உயர்ந்தோர் தாழ்ந்தோர்


பேதமில்லை

மச்சு வீடு குச்சு வீடு

பாகுபாடில்லை.



செய்த பாவம் தீர

இறை வழிபாடில்லை

மெய்யை பொய்யாக்க

நீதிமன்றங்கள் இல்லை.



உண்டு உண்டு உறங்கும்

சோம்பேறிகள் இல்லை

ஒருவருக்கொருவர்

கூழைக் கும்பிடு இல்லை



பதவிக்காக தலைவர்

புகழ் பாடுவாரில்லை

ஐந்தறிவு படைத்தவர் நாங்கள்

ஆறறிவு எங்களுக்கு இல்லை

Saturday, December 18, 2010

மரம் (கவிதை)

மரத்தினடி கொத்தும்

மரங்கொத்திகள்

கிளைக்கு கிளை தாவும்

குரங்கினங்கள்

கூடுகட்டி முட்டையிட்டு

வம்சம் காக்கும் புள்ளினங்கள்

பூத்திருக்கும் பூக்களின்

மகரந்தம் சுவைக்கும் வண்டினங்கள்

அசைந்து கொடுப்பதில்லை

மரம்

Friday, December 17, 2010

விக்கிலீக்ஸும்..ராகுல் காந்தியும்..மற்றும் காவி தீவிரவாதமும்..

பாகிஸ்தான் தீவிரவாத இயக்கங்களை விட இந்தியாவில் அதிகரித்துவரும் இந்து தீவிரவாத அமைப்புகளால் தான் இந்தியாவிற்கு பேராபத்து உள்ளது என ராகுல் காந்தி இந்தியாவிற்கான அமெரிக்க தூதர் டிமோதி ரோமரிடம் கூறியுள்ளதாக விக்கிலீக்ஸ் இணையதளம் தகவல் வெளியிட்டுள்ளது.

இருப்பினும் தான் இந்திய தீவிரவாதத்தை மட்டுமல்ல..அனைத்து வகையான தீவிரவாதமும் இந்தியாவிற்கு ஆபத்தானது என்று கூறியதாக ராகுல் விளக்கம் அளித்துள்ளார்.

மேலும் அமெரிக்க தூதர் கூறுகையில் 'ராகுல் காந்தி என்னை சந்தித்த போது..பாகிஸ்தானைச் சேர்ந்த லஸ்கர் இ தொய்பா போன்ற பயங்கரவாத அமைப்புகளுக்கு இந்திய முஸ்லிம்கள் சிலர் ஆதரவு அளிப்பதாகக் கூறி,அதற்கு ஆதாரங்கள் உள்ளன என்றும்..ஆனாலும் அதிகரித்து வரும் இந்து தீவிரவாத அமைப்புகள் அபாயகரமானது ' என்றும் சொன்னதாகக் கூறியுள்ளார்.

மேலும் ராகுல் அவரிடம்'இந்து தீவிரவாதம் பயங்கரமானதாக இருக்கும் என கருதுவதாகக் கூறியுள்ளார்.

முஸ்லிம் சமுதாயத்தினருடன், மோதலில் ஈடுபடுவது,பதட்டத்தை ஏற்படுத்துவது என்று இந்து தீவிரவாத அமைப்புகள் மோதல் போக்கில் ஈடுபட்டுள்ளன என்றுள்ளார்.

"தீவிரவாதம், மதவாதம் ஆகியவை எந்த ரூபத்தில் வந்தாலும்,யார் மூலம் வந்தாலும் இந்தியாவிற்கு ஆபத்து என்றும்..தீவிரவாதத்தில் யார் ஈடுபட்டாலும் அதை அனுமதிக்க முடியாது என்ற முறையில் ராகுல் அப்படிக் கூறியதாக காங்கிரஸ் விளக்கம் அளித்துள்ளது.

சும்மா கிடந்த சங்கு ஊதப்பட்டுவிட்டதே..என்பதே நம் கவலை.

Thursday, December 16, 2010

தேங்காய்..மாங்காய்..பட்டாணி..சுண்டல் (17-12-10)


1) 15 மாடிகள் கொண்ட ஹோட்டல் கட்டிடத்தை ஆறே நாட்களில் கட்டி முடித்துள்ளனர் சீன கட்டிடத் தொழிலாளர்கள்.வெளி சத்தம் உள்ளே கேட்காத சவுண்ட் ஃப்ரூஃப் கட்டிடம் இது.தீ பிடித்தாலும் பாதிக்கப்படாத கட்டிடம்.ஒரு நாளைக்கு 16 மணிநேரம் என நூற்றுக்கணக்கான ஊழியர்கள் உழைத்து கட்டட்பட்ட கட்டிடம் இது.அதன் புகைப்படம் தான் மேலே..

2)ஜீனிதா நாதன்..இவர் கனடாவில் வசிக்கும் தமிழ்ப்பெண்.கனடா நாட்டின் உள்ளாட்சித் தேர்தலில் முதன் முறையாக வெற்றி பெற்றுள்ள தமிழ்ப்பெண் இவர்.அதைவிட ஒரு சிறப்பு இவ்ர்..திருக்குறளின் பெயரில் உறுதிமொழி எடுத்துள்ளார்.மற்றவர்கள் கடவுள் பெயரில் உறுதிமொழி ஏற்றனர்.'பல நூற்றாண்டுகளுக்கு முன்னால் திருவள்ளுவரால் இயற்றப்பட்ட திருக்குறள் வாழ்வின் நெறிகளை சிறப்பாக சொல்கிறது.கல்வியின் பெருமைகளையும், நீதியையும் இத்தனை சிறப்பாக எந்த நூலும் சொன்னதில்லை' என்கிறார் இவர்

3)இந்த ஆண்டு டைம்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ள 2010 ஆம் ஆண்டின் மிகச் சிறந்த விளையாட்டு தருணங்கள் பட்டியலில் சச்சின் டெண்டுல்கர் தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான ஒருநாள் போட்டியில் விளாசிய இரட்டை சதம் இடம் பெற்றுள்ளதாம்

4)ஆணின் உடலில் உள்ள இதயத்தின் எடை 300 கிராம்.பெண்ணின் இதயம் 250 கிராம். இதயத்தின் அளவு நீளவாக்கில் 15 செண்டிமீட்டரும், குறுக்கு வாக்கில் 10 செண்டிமீட்டரும் ஆகும்.ஆகவே இனி காதலர்கள் காதலியில் இதயம் இல்லாதவள் என்று சொல்லாதீர்கள்..இதயம் சிறுத்தவளே என்று சொல்லுங்கள்.

5)சேலம் கிச்சிப்பாளையம் பகுதியைச் சேர்ந்த வழக்குரைஞர் விஜயகுமார் வாக்கிங் செல்கையில் சேவல் ஒன்று கொத்திவிட்டது.உடன் அவர் போலீஸில் புகார் செய்ய அவர்கள் சேவலைக் கைது செய்து..இருநூறு அபராதம் விதித்தனர்.சாலையில் செல்கையில் எந்த ஒரு விலங்கு நம்மை தொந்தரவு செய்தாலும் போலீசில் புகார் தெரிவிக்கலாமாம்.அதுசரி..விஜயகுமார் என்னும் பெயர் உள்ளவங்களுக்கு இது போதாத காலமா!!

6)நம் எழுத்து படிக்கப் படுகையில் மகிழ்கிறோம்.அதை எடுத்து நாம் எழுதியதாக வானொலியில் படிக்கையில் இரட்டிப்பு மகிழ்ச்சி.அதுவும் லண்டன் வானொலியில் என்றால் மகிழ்ச்சியின் மடங்கு அதிகரிக்கிறது.ஆனால் அதை நாம் கேட்காமல்..வேறு  ஒருவர் கேட்டு..மகிழ்ந்து..நம்மிடம் தெரிவிக்கையில் பெரும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.
இதெல்லாம் என்ன என்கிறீர்களா..நான் எழுதிய பயணம் என்னும் கவிதை லண்டன் வானொலியில் படிக்க அதைக்கேட்டு மகிழ்ந்து..உடன் எனக்கு அறிவித்த பதிவர் சகோதரி ஹேமா விற்கு என் வாழ்த்துகள்.
இதோ அவரின் பின்னூட்டம்

ஹேமா said...


ஐயா...உங்கள் "பயணம்"என்கிற கவிதை இப்போ இலண்டன் GTBC வானொலியில் படித்திருந்தார்கள்.

கேட்டேன்.உடன் அறியத்தருகிறேன்.

சந்தோஷமாயிருக்கு !

வயிற்றுப்பாடு (கவிதை)


ஹவாலா மோசடி ஐநூறு
கால் நடை தீவனம் தொள்ளாயிரம்
ஐபிஎல் ஆயிரத்துஇருநூறு
சேத்தன் பரேக் இரண்டாயிரம்
ஹர்ஷத் மேத்தா நான்காயிரம்
சத்யம் பதினான்காயிரம்
முத்திரத் தாள் இருபதாயிரம்
காமென்வெல்த் எழுபதாயிரம்
ஸ்பெக்ட்ரம் ஒரு லட்சத்து எழுபத்தாறாயிரம்
கோடி கோடியாய்
வளருது..
ஊழல் வளருது..
இந்தியா சுரண்டப்படுது
சுரண்டப்படுது
நமக்கென்ன..நமக்கென்ன
இன்று
நம் வயிற்றுப்பாட்டை
பார்ப்போம்

Wednesday, December 15, 2010

உலகின் சிறந்த படங்கள்: ஐஎம்டிபி பட்டியலில் ரஜினியின் எந்திரன்!

உலகின் மிகப் புகழ்பெற்ற திரைப்பட இணையதளமான ஐஎம்டிபியின் சிறந்த பட பட்டியலில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் எந்திரன் – தி ரோபோ இடம்பெற்றுள்ளது.
அதுவும் 10-க்கு 7.4 புள்ளிகளுடன் முதல் 50 இடங்களுக்குள் எந்திரன் வந்துள்ளது.

இது தமிழில் வேறு எந்தப் படத்துக்கும் கிடைக்காத பெருமையாகும்.
ஐஎம்டிபி என்பது ஹாலிவுட்டின் பைபிள் என்று போற்றப்படுகிறது. ஆண்டுதோறும் உலகம் முழுவதும் வெளியான படங்களில் சிறந்தவற்றை பட்டியலிடுகிறது இந்தத் தளம். பார்வையாளர்கள் வாக்குகளின் அடிப்படையில் இந்தப் படங்கள் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த ஆண்டு ஐஎம்டிபியின் முதல் 50 பட வரிசையில் இந்தியாவிலிருந்து 7 படங்கள் இந்தப் பட்டியலுக்கு தேர்வாகியுள்ளன. அவற்றில் எந்திரனுக்கு 39வது இடம் கிடைத்துள்ளது.

தமிழில் எந்திரன் என்ற தலைப்பில் நேரடிப் படமாகவும், தெலுங்கு இந்தியில் ரோபோ என மொழிமாற்றுப் படமாகவும் உலகம் முழுவதும் வெளியான எந்திரன் வசூலில் புதிய சரித்திரம் படைத்துள்ளது. 75 நாட்களைக் கடந்து ஓடிக் கொண்டிருக்கும் எந்திரனுக்கு இந்தியாவிலேயே அதிக வசூலைக் குவித்த படம் என்ற பெருமையும் உள்ளது. அதே போல வெளிநாடுகளில் அதிக வசூல் செய்ய திரைப்படமும் எந்திரன்தான். சன் பிக்சர்ஸின் அதிகாரப்பூர்வம அறிவிப்பின்படி இதுவரை ரூ 380 கோடிகள் வசூலித்துள்ளது மூன்று மொழிகளிலும்.

படத்தின் உருவாக்கம், தரம் மற்றும் ரஜினியின் மிகச் சிறந்த நடிப்பை சர்வதேச திரைக் கலைஞர்கள் பாராட்டினர். ஆஸ்கர் விருது பெற்ற ஹாலிவுட் இயக்குநர் ஆலிவர் ஸ்டோன், எந்திரன் ஒரு புதுமையான படம் என்றும்,தான் மிகவும் ரசித்துப் பார்த்த படம் இது என்றும் பாராட்டினார்.

இத்தனை சிறப்புகளுக்கும் சிகரம் வைப்பது போல் இப்போது ஐஎம்டிபியின் உலகப்பட பட்டியலிலும் எந்திரன் இடம் பிடித்துள்ளது.

இந்தப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது கிறிஸ்டோபர் நோலனின் இன்செப்ஷன்.10-க்கு 9 புள்ளிகள் அந்தப் படத்துக்குக் கிடைத்துள்ளன.

(நன்றி தட்ஸ்தமிழ் )

Tuesday, December 14, 2010

ப.சி., யும் இறையாண்மையும்..

தில்லியில் குற்றச் சம்பவங்கள் நடைபெறுவதற்கு வேறு மாநிலங்களிலிருந்து குடியேறியவர்கள் காரணம் என்று மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம்..கருத்து தெரிவித்துள்ளார்.

இதன் மூலம்..அவர் என்ன சொல்ல வருகிறார்..

தில்லியைத் தவிர வேறு மாநிலங்களில் உள்ளவர்கள் குற்றம் செய்பவர்கள் என்கிறாரா?

இந்தியர்களைப் பற்றி..இந்தியரான..இந்தியர்களால் தேர்ந்தெடுக்கப் பட் இந்தியாவின் உள்துறை அமைச்சராக செயல் படுபவர் இப்படி சொல்லியுள்ளது வன்மையாக கண்டிக்கத் தக்கது.

சந்தர்ப்பத்திற்கு காத்திருந்தது போல சந்துல சிந்து பாடியுள்ளார் பால்தாக்கரே

சிதம்பரம் உண்மையைத்தான் பேசியுள்ளார்..எனவே மும்பை,தில்லி இவற்றில் குடியேறும் வெளிமாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கு அரசு அனுமதி வழங்கும் முறையைக் கொண்டுவர வேண்டும் என்றுள்ளார்..(வெளிநாடுகளுக்கு செல்பவர்களுக்கு விசா வழங்குவது போல)

சிதம்பரம்..தன் பேச்சுக்கு எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பைக் கண்டும்..காங்கிரஸ் கட்சிக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தக் கூடாது என்றும்..சொன்னதை வாபஸ் வாங்கியுள்ளார்.

ஆனாலும்..அவர் கூற்று 'மண்ணின் மைந்தர்கள்" என்று சொல்பவர்களுக்கு ஆதரவு அளிப்பது போல உள்ளது.

ஒருவிதத்தில் இது பிரிவினையை ஏற்படுத்தும் பேச்சாகவே உள்ளது.

முன்னர் 'காவி தீவிரவாதம்' என்றார்.இப்போது அடுத்த சர்ச்சைக்குரிய பேச்சு.

ஒரு இந்தியன் மற்றொரு இந்தியனுக்கு இழைக்கப்படும் அநீதியை எதிர்த்து பேசினால்..இறையாண்மைக்கு எதிரான பேச்சு என்று சொல்லும் அரசு..ஒரு இந்தியன் மற்றொரு இந்தியனைப் பற்றி கேவலமாகப் பேசினால்..அதற்கு என்ன பெயரைச் சொல்லும்?

கலைஞரின் அடுக்கடுக்கான சாதனைகள்..

ஸ்ரீலங்காவில் இனி தேசிய கீதம் சிங்களத்தில் மட்டுமே பாடப்படும் என ராஜபக்ஷே அறிவித்திருந்தார்.இதற்கு கண்டனம் தெரிவித்து கலைஞர் ஒரு அறிக்கை வெளியிட்டார்.

இந்நிலையில்..திடீரென ராஜபக்ஷே பல்டி அடித்து..அப்படியேதும் இல்லை என அறிவித்துள்ளார்.

இது கலைஞர் விடுத்த கண்டனத்தின் பலனே என மனசாட்சி உள்ள ஒவ்வொரு தமிழனும் அறிவான்.

அடுத்ததாக தமிழகத்தில் சமீபத்தில் ஏற்பட்ட மழையின் தாக்குதலால் லட்சக்கணக்கான பயிர் நிலங்கள் பாழாகி உள்ளன.சாவு எண்ணிக்கையும் 203 ஆகியுள்ளது.இதையடுத்து மழை, வெள்ளத்தில் பாதிக்கப் பட்ட பகுதிகளில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள 1600 கோடி நிதி வழங்கிட வேண்டும் எனக் கோரி தி.மு.க., அரசு மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்பியுள்ளது.இது சம்பந்தமாக கலைஞர் அளித்த அறிக்கையை டி.ஆர்.பாலு பிரதமரிடம் வழங்கினார்.

இன்னும் ஓரிரு நாளில் மத்தியக் குழு ஒன்று நிலைமையை பார்வையிட வரும் என்றும் நிவாரணம் கிடைத்துவிடும் என்றும் தெரிகிறது.

இந்த இரண்டு சாதனைகளும் ..தி.மு.க., அரசிற்கு கிடைத்த அடுத்தடுத்த சாதனைகள் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி

Monday, December 13, 2010

குறள் இன்பம் - 4

வள்ளுவரின் சொல் விளையாட்டு..சொல்லழகுக் கொண்ட தொடர் வரிசையில் இன்று நான்கு குறள்களைப் பார்க்கலாம்.



முதலாவதாக தெரிந்து தெளிதல் அதிகாரத்தில் ஒன்பதாம் குறள்



தேறற்க யாரையுந் தேராது தேர்ந்தபின்

தேறுக தேறும் பொருள்



படிக்கும் போதே எவ்வளவு இனிக்கிறது..



நன்கு ஆராய்ந்து தெளிந்த பிறகு ஒருவரிடம் நம்பிக்கை வைக்க வேண்டும்..ஆராய்ந்து பாராமல் யாரையும் நம்பிவிடக் கூடாது என்பதே பொருள்.



அடுத்ததாக..அறிவுடமை அதிகாரத்தில் எட்டாவது குறள்..அஞ்சுவது வைத்தே அயரவைக்கும் குறள்



அஞ்சுவ தஞ்சாமை பேதமை அஞ்சுவ

தஞ்சல் அறிவார் தொழில்



அறிவில்லாதவர்கள்தான் அஞ்ச வேண்டியதற்கு அஞ்ச மாட்டார்கள்.அஞ்ச வேண்டுவதற்கு அறிஞர்கள் அஞ்சுவார்கள்



அடுத்த குறள் அவா அறுத்தல் அதிகாரத்தில் இரண்டாம் குறள்..



வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றது

வேண்டாமை வேண்ட வரும்...



யாரை வேண்டினாலும் இப்படி ஒரு அருமையான குறளை படிக்க வேண்டியது அவசியம்.



விரும்புவதானால் பிறக்காமலே இருந்திருக்க வேண்டும் என எண்ணும் அளவிற்கு ஏற்படும் துன்ப நிலை..ஆசைகளை ஒழிக்காவிடில் வரும்...என்பது பொருள்.



அடுத்து நாம் அனைவரும் பற்று வைத்திருக்கும் குறள்..இதைப் பற்றாமல் இருக்க முடியாது.எட்டு வார்த்தைகள் குறளில் ஏழு வார்த்தைகள் பற்று..வரும்..

அடடா..என்னே அருமை



பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்

பற்றுக பற்று விடற்கு



பற்றில்லாதவன் எவனோ அவனிடம் பற்றுக் கொள்ள வேண்டும்.நம் பற்றுகளை விட்டொழிக்க அப்பற்றே நமக்கு துணையாகும்.

Sunday, December 12, 2010

சங்கமம் நிகழ்ச்சியும்..ஈரோடு பதிவர்களும்..


இரண்டு நபர் இருந்தால் தகராறு இல்லை.மூன்று நபராக ஆகும் போது..தகராறு வருவதற்கான சாத்தியுக்கூறுகள் தோன்றுகின்றன..பலர் கூடும்போது..தகராறு,கோஷ்டி மோதல்,தனித் தனிக் குழுக்கள் என தானாகவே உண்டாகி விடுகின்றன.

இதற்கு பல உதாரணங்களை

சுட்டிக் காட்ட முடியும் என்றாலும்..நான் சுட்டிக் காட்ட விரும்புவது..

வலைப்பதிவர் குழுமம் ஆரம்பிக்க நினைத்து..உண்மைத் தமிழன்,கேபிள் சங்கர்,மணிஜீ ஆகியோர் முயன்றபோது..அதற்கான ஆரம்பக் கூட்டத்தில் பேசப்பட்ட பேச்சுகள்..தனி குழுமம் அமைக்க இப்போது என்ன தேவை என்று கேட்கப்பட்ட கேள்விகள்..அப்பப்பா..

ஆனால்..

ஈரோடு பதிவர்கள் சென்ற ஆண்டு நடத்திய சங்கமம் ஆரம்ப நிகழ்ச்சியை எவ்வளவு அருமையாக நடத்தினார்கள்.நேரில் செல்லும் வாய்ப்பை நான் இழந்தாலும் அது நடைபெற்ற விதம் பற்றி கேள்விப்பட்ட போது மகிழ்ந்தேன்.கண்டிப்பாக அடுத்த ஆண்டு நிகழ்ச்சிக்கு செல்ல வேண்டும் என எண்ணினேன்.

இந்த ஆண்டு..டிசம்பர் 26 ஆம் நாள் நடைபெறவுள்ள சங்கமம் நிகழ்ச்சியிலும் என்னால் பங்கேற்க முடியாது..என எண்ணி வருத்தப் பட்டாலும்..நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து..நடத்தும் அனைத்து ஈரோடு பதிவர்களையும் பாராட்டுகிறேன்.

நிகழ்ச்சி அருமையாய் நடக்க என் வாழ்த்துகள்..

சம்பந்தப் பட்ட அனைவரையும்..தனித் தனியாய் பெயரிட்டு வாழ்த்த ஆசை..ஆனாலும்..அப்படி சொல்கையில் யார் பெயரேனும் விட்டுப் போய் விட்டால்..அப்பதிவர் மனம் வருந்தக் கூடாது என்ற எண்ணத்தில்..தனித் தனி பெயரிட்டு வாழ்த்தவில்லை.

நமக்கு ஏன் ..(கவிதை)



இவனுக்கு இவள்

இவளுக்கு இவன்

பேசி நடத்தியவர்கள்

கோர்ட்டுக்கு

வருவதில்லை

விவாகரத்தின் போது

Saturday, December 11, 2010

மனிதனுக்கு ஒரு விஷயம்




மானிடரே..நம்முடைய இஷ்டப்படி உலகம் நடக்கவில்லை.தெய்வத்தின் இஷ்டப்படி

உலகம் நடக்கிறது.'தெய்வமே சரண்'என்று நம்பி எவன் தொழில் செய்கின்றானோ..

அவன் என்ன தொழில் செய்த போதிலும் அது நிச்சயமாக பயன் பெறும்.மனிதன்

தன் உள்ளத்தைத் தெய்வத்துக்கு பலியாக கொடுத்துவிட வேண்டும்.அதுவே யாகம்.அந்த

யாகத்தை நடத்துவோருக்குத் தெய்வம்..வலிமை,விடுதலை,செல்வம்,ஆயுள்,புகழ் முதலிய

எல்லா விதமான மேன்மைகளும் கொடுக்கும்.இந்தக் கொள்கை நமது பகவத் கீதையில்

சொல்லப்படுகிறது.இதனை அறிந்தால் பயமில்லை.ஹிந்துக்களுக்குத்தான் இவ்விதமான

தெய்வ பக்தி சுபாவம்.ஆதலால் ஹிந்துக்கள் தெய்வத்தை நம்பி எப்போதும் நியாயத்தைப்

பயமில்லாமல் செய்து மேன்மை பெற்று மற்ற தேசத்தாரையும் கை தூக்கிவிட்டாலொழிய

இந்த பூ மண்டலத்துக்கு நன்மை ஏற்படாது.உலகத்தார் அகங்காரம் என்ற அசுரனுக்கு

வசப்பட்டுச் சகல தேசங்களிலும் நரக துன்பத்தை அனுபவிக்கிறார்கள்.அகங்காரத்தை

வெட்டி எறிந்து விட்டால் மனித ஜாதி அமர நிலை அடையும்.தன்னை மற.தெய்வத்தை நம்பு

..உண்மை பேசு..நியாயத்தை எப்போதும் செய்.எல்லா இன்பங்களையும் பெறுவாய்.இப்போது

பழைய யுகம் மாறிப் புதிய யுகம் தோன்றப் போகிறன.அந்த புதிய யுகம் தெய்வபக்தியையே

மூலாதாரமாகக் கொண்டு நடைபெறப் போகிறது.ஆதலால் அதில் ஹிந்துக்கள் தலைமை

பெறுவார்கள்.இது சத்தியம்.இதை எட்டு திசைகளிலும் முரசு கொண்டடியும்.இதுவே நான்

சொல்லக்கூடிய விஷயம்.

Friday, December 10, 2010

தேங்காய்..மாங்காய்..பட்டாணி..சுண்டல் (10-12-10)

1)டென்ஷன் பாதிப்பில் இருக்கையில் நமக்கு நிம்மதி போகும்..தூக்கம் வராது..அத்தகைய சமயங்களில் அரை ஸ்பூன் சர்க்கரை மூளை செயல்பாட்டை தூண்டி புத்துணர்ச்சி அளிக்கும்.உடனடியாக அது ரத்தத்துடன் கலந்து குளூகோசாக மூளைக்குச் செல்கிறது.அது கிடைத்ததும் மூளை வலுவாக செயல்படுகிறது.இதை அமெரிக்காவில் ஒகையோ மாநில ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.



2)உலக அளவில் வெளிநாடுகளில் குடியேறுபவர்களை அதிகம் கொண்ட நாடுகளில் இந்தியா 10 ஆவது இடத்திலும்..ஆசிய அளவில் 2ஆம் இடத்திலும் உள்ளது.2010 ஆண்டு இதுவரை இந்தியாவிற்கு வெளிநாடுகளில் வேலை செய்பவர்கள் அனுப்பிய தொகை 55 பில்லையன் டாலர்கள் என உலக வங்கி தெரிவிக்கிறது.நன்றி வெளிநாடு வாழ் இந்தியர்களே



3) என்னதான் கிரிக்கெட் அளவு மற்ற விளையாட்டுகளுக்கு மக்கள் முக்கியத்துவம் கொடுப்பதில்லை என நாம் பேசினாலும்..கிரிக்கெட்டில் இந்தியா விளையாடி ஜெயிக்கையில் ஏற்படும் மகிழ்ச்சி தனிதான்..நடந்து முடிந்த நியூசிலாந்திற்கு எதிரான ஐந்து ஒருநாள் போட்டி அனைத்திலும் வென்ற இந்தியக் குழுவிற்கு வாழ்த்துகள்.குறிப்பாக இளைஞர்கள் மீது நம்பிக்கை வைத்து அவர்களை தேர்ந்தெடுத்த தேர்வுக்குழுவிற்கு நம் தனி பாராட்டு



4)நம் உடலின் போர்வையான தோலில் மட்டும் சுமார் 2 லட்சம் கோடி பாக்டீரியாக்கள் வாழ்கின்றனவாம்.பாக்டீரியாவிலும் நல்ல பாக்டீரியா..கெட்ட பாக்டீரியா என உண்டாம்.



5)மை நேம் ஈஸ் கான் படம் சமீபத்தில் பார்த்தேன்..சாருக்கான் அருமையாய் நடித்துள்ளார்.இப்படத்தில் அவர் தாயார் நாட்டில் இரண்டே ஜாதி..நல்லவர்கள், கெட்டவர்கள் என்று சொன்னதாக அடிக்கடி குறிப்பிடுவார்.

ஔவையும்..சாதிகள் இரண்டு என்றார் ..இட்டார்(தருமம் செய்பவர்கள்) இடாதார் (இடாதவர்கள்) என்றார்

ஜாதிகள் இல்லையடி பாப்பா என்ற பாரதியும்..ஜாதிகள் இரண்டு தான் என்றார் அவர் சொன்னது..படித்தவர், படிக்காதவர் என்பதை.

ஆனால்..இன்று ஜாதிகள் பற்றி கேட்டால் ஒரு இந்தியன் சொல்வான்..சாதிகள் இரண்டுதான்..ஊழல் புரிபவன், ஊழல் செய்யத் தெரியாதவன் என.,



6)நாம் தும்மும் போது வெளிவரும் காற்று மணிக்கு அறுபது மைல் வேகத்தில் பரவுகிறதாம்.

நம் உடலில் வெகு வேகமாக செயல்படும் தசை கண் இமையாம்..ஒருதரம் கண் இமைக்க 1/100 விநாடிதான் ஆகிறதாம்

ஒரு மனிதனின் உடலில் உள்ள எலும்புகளில் பாதிக்கு மேல் கைகளிலும், பாததிலுமே உள்ளனவாம்.



7)கொசுறு ஒரு ஜோக்



ஊழலில் பெற்ற பணம் சரியாக இருக்கிறதா என்பதை எப்படி எண்ணுவார்கள்

திருப்பதி கோவிலில் இருந்து உண்டியல் எண்ணுபவர்கள் வருவார்களோ

Thursday, December 9, 2010

சினிமா நடிகரிடம்"அப்பாயிண்ட்மெண்ட்" கேட்ட முதல்வர்





சாதாரணமாக ஒரு நாட்டின் முதல்வர் தனிப்பட்ட ஒரு நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ள அவரிடம் அப்பாயிண்ட்மெண்ட் வாங்கி, அவரை சந்தித்து நிகழ்ச்சி பற்றி விளக்கி...அட போங்கப்பா..ன்னு நாக்கு வெளியே தள்ளிடும்.

சினிமா சம்பந்தப்பட்ட நிகழ்ச்சின்னா நம்ம முதல்வர் உடனே வர சம்மதிச்சுடுவார்.

சம்பந்தப் பட்ட நடிகரோ..நடிகையோ ஒரு சிறு காட்சியில் திரையில் நடித்திருந்தால் கூட போதும் நம் முதல்வரை சந்தித்து விடலாம்..அந்த அளவுக்கு சாமான்யர் அவர்.

நாடே ஸ்பெக்ட்ரம்,ராஜா.விடாது மழை வெள்ளம்ன்னு கொதிச்சுக் கிட்டிருக்கும் போது//தம்பி பா.விஜய் எடுக்கும் .முதல்வர்
 கதை வசனத்திலான 'இளைஞன்' படத்திற்கு ஆடியோ வெளியீட்டு விழாவிற்கு ரஜினி வரணும்னு ஆசைப்பட்டாராம்.அதை முதல்வர்கிட்டே சொன்னாராம்..

முதல்வரும் உடனே ரஜினியைத் தொடர்பு கொண்டு..'நீங்க ஃப்ரீயா..ஆடியோ விழாவிலே கலந்துக்க முடியுமா?'ன்னு கேட்டாரம்..அவரும் 'சரி'ன்னாராம்.

'அவருக்கு நன்றி கூறினார் முதல்வர் விழாவில்

அடடா. ..பொதுமக்கள் நலனுக்கான நிகழ்ச்சி..நாட்டிற்காக ஒரு நடிகரிடம் (ரஜினி ரசிகர்கள் மன்னிக்க..நானும் ரஜினி ரசிகன் தான்..ஆனால் முதல்வர் செய்தது சரியா..அப்படியே சரின்னாலும்..அதைச் சொல்லி ரஜினியை சங்கடப்படுத்தலாமா) அவரது வருகையை வேண்டியிருக்கிறார் முதல்வர்.

தவிர்த்து..சமயோசிதமாக ஒன்றை முன்னதாகவே வெளியிட்டு விட்டார்..'இந்த படம் 'தாய்" காவியத்திலிருந்து எடுக்கப்பட்டாலும்
பெரும்பாலும் மாற்றிவிட்டேன் என்று.மிஷ்கின் நிலை அவருக்கு இதைச் சொல்லத் தூண்டியுள்ளது.

இந்த இடுகையால் மக்களுக்கு சொல்ல விரும்புவது..இன்னும் ஐந்து/ஆறு மாதங்களில் தமிழக சட்டசபைக்கு தேர்தல் வருது..என்பதுதான்.

Wednesday, December 8, 2010

வை.கோ., சிந்திப்பாரா...

திராவிடக் கழகத்திலிருந்து..திராவிட முன்னேற்றக் கழகம் உருவானபின்..அது பலமுறை உடைந்துள்ளது.

இருந்தாலும் குறிப்பிட்டு சொல்லும்படியானது...அண்ணாவின் நெருங்கிய நண்பர் ஈ.வி.கே.சம்பத் பிரிந்து தமிழ் தேசியக் கட்சியை உருவாக்கினார்.ஆனாலும்...அக் கட்சி ஆரம்பித்த போது தென்பட்ட சிறு செல்வாக்கை நாள் பட நாள் பட இழந்து அழிந்தது.

அடுத்ததாக..கழகத்தின் பொருளாளராய் இருந்த எம்.ஜி.ஆர்., கணக்குக் கேட்கப் போக (எப்போதும் கலைஞருக்கு கணக்குத் தான் பிரச்னையாய் உள்ளது), அவர் கட்சியிலிருந்து வெளியேற்றப் பட்டார். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (பின்னர் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமானது)பிறந்தது..இந்தமுறை தி.மு.க., பெரும்பான்மையாக உடைந்தது எனலாம்..பின் அடுத்துவந்த தேர்தல்களில் எம்.ஜி.ஆர்., வெற்றி பெற்றார்.திராவிட முன்னேற்ற கழகம், கலைஞர் தலைமையில் எவ்வளவோ முயன்றும் மீண்டும் ஆட்சிக்கு வர இயலவில்லை.உடல்நிலை சரியில்லாமல், உண்மையில் படுத்துக் கொண்டே..ஜெயித்த..ஏன்...ஆட்சியைப் பிடித்த ஒரே தலைவர் அவர்தான் எனலாம்.

பின்னர் எம்.ஜி.ஆர்., மறைவிற்கு பின் அவரது கட்சி ஜானகி அணி,ஜெயலலிதா அணி எனப் பிரிந்ததால் சட்டசபைத் தேர்தலில் வெல்ல இயலவில்லை

பதவியில் இல்லாத போதும்..இடர் பல வந்த போதும்..தி.மு.க., வைக் கட்டி காத்த கலைஞர் பாராட்டுக்குரியவர்.

எம்.ஜி.ஆர்., மறைவிற்குப் பின் சரியான ராஜதந்திரிகள் இல்லாத நிலையில்..கலைஞரின் கரம் ஓங்கியது.மீண்டும் காங்கிரஸ் ஆட்சி உருவாகும் நிலை ஏற்பட்டபோது..மூப்பனார் அதை தவறவிட்டார்.

அ.இ.தி.மு.க., எம்.ஜி.ஆர்., மறைவிற்குப் பின் இரு அணிகளாகப் பிரிந்தாலும்..தேர்தலுக்குப் பின் 'ஜெ' தலைமையில் ஒரே கழகமானது.இதற்கிடையே பல முறை அதிலிருந்து பிரிந்து சில தலைவர்கள் கட்சிகள் ஆரம்பித்த போதும்..அவை ஆரம்பித்த வேகத்திலேயே..தொண்டர்கள் ஆதரவு இல்லாமல் காணாமல் போனது.அவற்றில் சில..நெடுஞ்செழியன்,எஸ்.டி.சோமசுந்தரம்,கண்ணப்பன்,திருநாவுக்கரசு ஆகியோர் ஆரம்பித்த கட்சிகள்.

தி.மு.க.விலிருந்து..சில காரணங்களைச் சுட்டிக் காட்டி வை.கோ., வெளியேற்றப் பட..வை.கோ., வின் ஆதரவாளர்களும்,வை.கோ., வின் திறமை அறிந்தவர்களும் ..கண்டிப்பாக இது தி.மு.க., வின் பெரிய பிளவாய் இருக்கும் என எண்ணினார்கள்..

ஆனால்..நினைத்தது நடைபெறவில்லை என்பது வருத்தமே..

மீண்டும் வை.கோ., ஏதேனும் ஒரு திராவிடக் கட்சியுடன் கூட்டு வைத்தால் தான் சில இடங்களிலாவது வெல்ல முடியும் என்ற நிலையே இன்றும்..

18 ஆண்டுகள் தொடர்ந்து ராஜ்யசபா அங்கத்தினர் ஆக இருந்த இவர் பேச்சு பல மத்திய தலைவர்களை வியக்கவைத்தது..ஆனாலும் அவை விழலுக்கு இரைத்த நீரானது..

வை.கோ., வை நம்பிச் சென்ற பலர் விலகி மீண்டும் தி.மு.க., அ.தி.மு.க., வில் ஐக்கியமாயினர்.

செஞ்சி ராமசந்திரன்,கணேசன்,கண்ணப்பன் ஆகியோர் குறிப்பிடத் தக்கவர்கள்..

ஆனாலும்..கட்சி நடத்த தனது சொந்த கட்டிடத்தையேக் கொடுத்த கலைப்புலி தாணு இப்போது ம.தி.மு.க.,விலிருந்து விலகியுள்ளார்.

அதற்குக் காரணம்..தனது இளைய மகன் திருமணத்திற்கு கலைஞருக்கு அழைப்பிதழ் கொடுத்தது வைகோ விற்கு பிடிக்கவில்லை என்பது..

இது உண்மையான காரணமாய் இருக்க முடியாது என்றே தோன்றுகிறது.ஏனெனில்..மங்கல நிகழ்ச்சிகள்,ஒருவரின் மறைவு ஆகியவற்றில் இவர்தான் வர வேண்டும்..அவர்தான் வரவேண்டும் என்று எதர்பார்க்க முடியாது.

அப்படிப்பார்த்தால்..மாறன் மறைந்த போது.. வை.கோ.,கலைஞரை கட்டிப் பிடித்து அழுததும் தவறு...

தலைவன் தவறு செய்யலாம்..ஆனால்..மற்றவர்கள் ஏதேனும் செய்தாலும்..அதில் தவறைக் கண்டுபிடிக்கலாமா?

அதிலும் பண்பட்ட வை.கோ.அப்படிச் செய்வார் எனத் தோன்றவில்லை.

வேறு என்ன காரணம்


வை.கோ.,வின் கூடாரம் ஏன் காலியாகிக் கொண்டு இருக்கிறது..

இந்நிலை நீடித்தால்..ம.தி.மு.க., அழிவை நோக்கிப் போவதைத் தவிர்க்க முடியாது..

வை.கோ., சிந்திப்பாரா..

Tuesday, December 7, 2010

இரு நிலவுகள் (கவிதை)




பௌர்ணமி இரவு

தெளிந்த நீரோடை

கரையில் அவள்

நீரில் நிலவுகள்

களங்கத்துடன் ஒன்று

களங்கமின்றி ஒன்று

தண்ணீர் தண்ணீர் (கவிதை)

மழை

வெள்ளம்

குடிநீர்

விலைக்கு வாங்கும்

மக்கள்

Monday, December 6, 2010

பிரதமர் பதவி விலகுவாரா?





காமன்வெல்த் போட்டிகள் 70000 கோடி ஊழல்

ஸ்பெக்ட்ரம் ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ஊழல்

உச்சநீதிமன்றம் கேள்வி

பாராளுமன்றம் முடக்கம்



இவை எல்லாம் வருத்தம் அளித்தாலும்...பாராளுமன்றம் முடக்கம் பற்றி சில விஷயங்களை நாம் கவனித்தே ஆக வேண்டும்.



ஸ்பெக்ட்ரம் ஊழல் நம் நாட்டிற்கு ஏற்பட்ட பேரிழப்பு.இவ்வளவு பெரிய ஊழலில் மொத்த பணமும் ஊழல் செய்தாற்போன்று தோன்றும் நிலையில்..இது நாட்டிற்கு ஏற்பட்ட இழப்புத் தானே தவிர..இந்த பணத்திற்கான கமிஷன் பெறப்பட்ட தொகையே அன்பளிப்பு அல்லது லஞ்சமாக பெறப்பட்டது.எனலாம்.அது எவ்வளவு என காண வேண்டும்.நீரா வே தனக்கு 60 கோடி கிடத்தது என்று சொல்லியிருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது.



இந்நிலையில்..நாட்டிற்கு ஏற்பட்ட இழப்பு பற்றி பார்ப்போம்.. 1லட்சத்து 76 ஆயிரம் கோடி இழப்பில் நம் நாட்டு வெளிநாட்டுக் கடன் முழுதும் அடைத்து விடலாம் என்கிறார்கள்.இது எவ்வளவு பெரிய விஷயம்.அதுவும் ஒரு பொருளாதார நிபுணர் பிரதமராக இருக்கையில்..நாட்டுக் கடன்களை அடைக்க சரியான சந்தர்ப்பம் வாய்த்திருக்கையில்..அதை தவறவிட்டது நியாயமா?

நான் சொன்னேன்..சம்பந்தப்பட்ட அமைச்சர்/அமைச்சகம் கேட்கவில்லை என பிரதமர் தரப்பில் சொல்வது கேலிக்குரியது அல்லவா?

அப்படியெனில்..உங்கள் மந்திரிசபை/மந்திரிகள் நீங்கள் சொல்வதைக் கேட்கவில்லையெனில் நீங்கள் செயலிழந்த பிரதமர் என்பது உறுதியாகவில்லையா?நிர்வாகத் திறமையற்றவர் என நினைக்கத் தோன்றுகிறதே..

இனியும் அரசியல் சாக்கடையில் ஊறிய அரசியல்வாதிகள் போல பதவியை கெட்டியாகப் பிடித்துக் கொண்டு பதவியில் நீடிக்க வேண்டுமா?



உச்ச நீதி மன்ற நீதிபதிகள் கண்டனம்,வரலாறு காணா இரு பெரும் ஊழல்கள், உங்கள் ஆட்சியில்..

இனியும் நீங்கள் நீடிப்பது சரியா?

உங்கள் மனசாட்சி பதிலளிக்கட்டும்.

Sunday, December 5, 2010

The Chaser (korean movie)

(இப்படம் 2008ல் வந்தது)
காவல்துறையில் பணியாற்றிவிட்டு பின் விலக்கப்பட்டு பெண்களை விருப்பப்பட்டவர்களுக்கு அனுப்பும் தொழில் ஈடுபட்டவர் ஜூங்ஹோ (yoon seok kim).சமீபகாலமாக அவரால் பிறரிடம் அனுப்பப்பட்ட பெண்கள்..காணாமல் போகின்றனர்.அவர்கள் தனக்குக் கொடுக்க வேண்டிய பணத்தைத் தராமல் தன்னிடமிருந்து விலகிவிடுவதாக அவன் நினைக்கிறான்.அப்போது ஒரு பெண்ணை அனுப்பச் சொல்லி ஒரு வாடிக்கையாளறிடமிருந்து அழைப்பு வர..உடல் நிலை சரியில்லை என்று சொன்ன போதும் ஒரு பெண்ணை அனுப்புகிறான் அவன்.
சிறிது நேரம் கழிந்ததும் தான்..தான் முன்னர் அனுப்பி மறைந்த பெண்கள் எல்லாம்..சற்றுமுன் வந்த அலைபேசியில் அழைத்தவனிடம் தான் கடைசியாக அனுப்பப் பட்டவர்கள் என உணர்ந்து..அவன் அலைபேசி எண்ணைத் தவிர வேறு யேதும் தெரியாதவன் அவனைத் தேடி விரைகிறான்.

இதனிடையில்..அப்படி அழைப்பவன் ஒரு தொடர் கொலைகாரன்(jung-woo Ha) என்று தெரிகிறது. சுத்தியால் அடித்து கொலை செய்பவன் அவன்.படத்தில் 10 நிமிடம் அவன் அப்படி பெண்ணை அடிக்கும் காட்சி வருவதைப் பார்த்து திகைப்பு ஏற்படுவதுன்,,அதை ஜீரணிப்பதும் சற்று கடினமாக உள்ளதுஅவனை சட்டையில் ரத்தக்கறையுடன் பார்த்த ஜூங்ஹோ அவனைத் தொடர்கிறான்.இருவரையும் காவல்துறை அதிகாரிகள் கைது செய்கின்றனர்.ஆனால் ஜங்க் மீது குற்றப்பத்திரிகை 12 மணி நேரங்களில் சாட்சிகளுடன் பதிவு பண்ண இயலாத நிலையில் அவனை விடுவிக்கின்றனர்.
கடைசியாக தன்னால் அனுப்பப்பட்ட பெண் உயிருடன் இருப்பாள் என்றே நம்புகிறான் யூன்.
முடிவு என்ன என்பதைச் சொன்னால் உங்களின் படம் பார்க்கும் ஆர்வம் குறைந்துவிடும் என்பதால்..சொல்லவில்லை..
 இந்த அற்புதமான திரில்லர் படத்தை..சந்தர்ப்பம் கிடைக்கையில் (ஏற்படுத்திக் கொண்டு) பாருங்கள்.
இப்பட இயக்குநர் hongjin-Na .இது இவர் இயக்கிய முதல் படமாம்..நம்பமுடியவில்லை. காட்சியிலும் அவர் உழைப்பு பளிச்சிடுகிறது.ஒளிப்பதிவும் அருமை.கடைசிவரை இருக்கையின் நுனியில் உட்கார வைத்து விடுகிறார்.




இலவசம் (கவிதை)


இலவசமாம்

இலவசம்

இலவசங்களை

இலவசமாய் கொடுத்தவர்கள்

வாக்கை மட்டும்

இலவசமாய்

போடவிடுவதில்லையே

Saturday, December 4, 2010

உணர்ச்சி.. (கவிதை)




கண்ணே

மணியே

கண்ணின் மணியே

கற்கண்டே

கனியமுதே

கொவ்வை செவ்வாயே

உணர்ச்சியற்ற பொம்மை

கொஞ்சப் படுகிறது

உணர்ச்சியுடன்

முதிர்கன்னியால்

Friday, December 3, 2010

தேங்காய்..மாங்காய்..பட்டாணி..சுண்டல்(3-12-10)




பாரதிதாசன் மீது இருந்த பற்றுதலால் ராசகோபாலன் என்னும் தன் பெயரை..பாரதிதாசனின் பெயரான கனக சுப்பு ரத்தினத்திலுருந்து..சுப்புரத்தினத்தை எடுத்து..சுப்புரத்தினதாசன் என்பதை சுருக்கி சுரதா என்ற பெயரிட்டுக் கொண்டவர் உவமைக் கவிஞர் என்று போற்றபட்ட சுரதா,இவரின் உவமை ஆளுமை சிறந்தது.இடுகாடு பற்றி இவரின் வரிகள்..

இங்கு வருவதற்கு யாரும் விரும்புவதில்லை..ஆனால் இங்கு வந்தவர் யாரும் திரும்புவதில்லை

2)என் நண்பர் ஒருவர் அவரது மகள்..கேள்விகளுக்கு எல்லாம் தன்னால் பதில் சொல்லமுடிவதில்லை என்றார்.அவர் தன் ஐந்து வயது மகள் பற்றி மிகைப்படுத்தி உரைக்கிறாரோ என எண்ணி. .அப்படி அவள் கேட்டது என்ன? என்றேன்.

நண்பர் சொன்னார்..'கெட்டவர்களையெல்லாம் காட் (GOD) பனிஷ் செய்வார்,,நல்லவர்களுக்கு உதவுவார் என்றேன்..உடனே அவள்..'காந்தி நல்லவர்தானே..அவருக்கு ஏன் கோட்ஸே சுடும் போது உதவி செய்யாமல் பனிஷ் செய்தார் என்கிறாள்' என்றார்.

காரணமில்லாமல் கடவுள் எதையும் செய்ய மாட்டார்..சரி..சரி..நான் வருகிறேன் என நடையைக் கட்டினேன்.

3)இந்தியாவின் தேசிய விலங்கு,தேசிய பறவை ஆகியவை நமக்குத் தெரியும்.தேசிய மரம் எது தெரியுமா? பல நூற்றாண்டு காலம் வாழும் தன்மையும்,மழை,வறட்சியால் அதிகம் பாதிக்கப் படாத மரமுமான ஆலமரமே நம் தேசிய மரம் ஆகும்

4)நம் பொருளாதாரநிலையை பிரதிபலிக்கும் நாட்டின் உற்பத்திதான் மக்களின் முதல் எதிரி என்றும்..அதன் அடிப்படையிலேயே தனிநபர் வருமானம் கணக்கிடப் படுவதாகவும்..அதனால்..இந்தியர்கள் வறுமையில் இருந்தாலும்..இதன் அடிப்படையில் வளமாக இருப்பதாக தெரிவிக்கப் பட்டுள்ளது என்றும், வறுமைக் கோட்டை கணக்கிடும் முறை சரியில்லை என்றும் மணி சங்கர ஐயர் தெரிவித்துள்ளார்.எனக்குத் தெரிந்து..இவர் பேசியுள்ள அர்த்தமுள்ள முதல் அறிக்கை இதுவாய் தான் இருக்கும்

5)இந்தியாவில் செல்ஃபோன் டவர்கள் 3லட்சத்து முப்பதாயிரம் உள்ளனவாம்.தமிழகத்தில் மட்டும் 30000 சென்னையில் 8000 டவர்கள் உள்ளனவாம்.

6)விக்கிவீக்ஸ் இணையதளம் ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினராவதற்கான நாடுகளில் தாம் தான் முதலாவதாக இருப்பதாக இந்தியா தன்னைத் தானே சொல்லிக் கொள்கிறது என்று ஹிலாரி கிளிண்டன் கேலி செய்ததை அம்பலப் படுத்தியுள்ளது.

7)பிரதமர் சொல்வதை மத்திய அமைச்சர்கள் கேட்பதில்லை,சட்டை செய்வதில்லை என்ற புலம்பல் இப்போது அடிக்கடி கேட்கிறது.பிரதமர் செயலிழந்து விட்டாரா..அல்லது கூட்டணி அமைச்சர்கள் சக்தி கூடிவிட்டதா? வாழ்க இந்திய ஜனநாயகம்

8) ரஷ்யா வித் லவ் என்னும் ஜேம்ஸ் பாண்ட் படத்தில் சீன்கானரி பயன்படுத்திய பிஸ்டல் லண்டனில் ஏலத்தில் விடப்பட்டதாம்.அவர் பயன் படுத்திய இந்த பிஸ்டல் 1.79 கோடிக்கு ஏலம் போனதாம்..ஆமாம் இதை ராஜபக்ஷே யிடம் முன்னதாக யாரேனும் சொல்லிவிட்டார்களோ?

9)போபால் விஷவாயு கசிவு நடந்து ஆயிரக்கணக்கானோர் பலியான நாள் இன்று..இதில் மூவாயிரம் பேர் அன்றிரவே இறந்தனர்..பல்லாயிரக்கணக்கானோர்..படிப்படியாக அடுத்தடுத்த ஆண்டுகளில் இறந்தனர்.:((

லண்டன் வாழ் தமிழர்களே..பிடியுங்கள் பாராட்டை




லண்டனில் ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் இலங்கையின் எதிர்காலம் குறித்து ராஜபக்சே சிறப்புரை ஆற்ற இருந்தார்.

அதற்காக லண்டன் சென்றவரை எதிர்த்து லண்டன் விமான நிலையத்திலேயே லண்டன் வாழ் தமிழர்கள் ஆயிரக் கணக்கானோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர் இருந்த ஓட்டலைச் சுற்றி ஆர்ப்பாட்டக்காரர்கள்.

தவிர்த்து..ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக் கழகம் முன்னும் ஆயிரக்கணக்கானோர் குவிந்தனர்.

இந்நிலையில் பாதுகாப்பு காரணங்களைக் கருத்தில் கொண்டு..ராஜபக்சேயின் நிகழ்ச்சியை பல்கலைக் கழகம் ரத்து செய்தது.தவிர்த்து அவர் கைது செய்யப்பட வேண்டும் என இங்கிலாந்து பிரதமரிடம் அந்நாட்டு எம்.பி., க்கள் வலியுறுத்தி வந்ததும் குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் போர் நடந்த போது அந் நாட்டு ராணுவத்தினர் தமிழ் பெண்கள் மீது நடத்திய பாலியல் கொடுமையை..அதன் வீடியோ காட்சிகளை அந்நாட்டு சேனல்4 என்ற தொலைக்காட்சி ஒளிபரப்பியது.அவை முழுமையான அளவு ஒளிபரப்பமுடியா அளவு கொடூரமாய் உள்லது எனவும் சேனல் 4 தெரிவித்துள்ளது.

அந்த வீடியோவில் காணப்பட்ட பெண்கள் உடல்களில் ஒன்று விடுதலைப்புலிகளுக்காகப் பணியாற்றிய இசைப்பிரியா என்னும் பத்திரிகையாளப் பெண் என கண்டுபிடித்ததாகத் தெரிகிறது.

லண்டன் தமிழர்களே..உங்களது தாயகமான இந்தியத் தமிழர்களிடையே காணமுடியாத ஒற்றுமையை உங்களிடம் கண்டு மனம் பூரிப்படைகிறது.


எங்களை எல்லாம் வெட்கி

 தலைக்குனிய வைத்து விட்டீர்கள்.


உங்களது செயலுக்கு பிடியுங்கள் பூங்கொத்து.

நன்றி

Thursday, December 2, 2010

இலையுதிர் காலம் (கவிதை)





மரத்தைச் சுற்றி

மக்கள் கூட்டம்

இலைகளை உதிர்த்து

நிர்வாணமாய்

நிற்கிறதாம்

Wednesday, December 1, 2010

திரைப்படமான தமிழ் நாவல்கள்




சமீபத்திய படம் ஒன்று ஜப்பானிய மொழிப் படத்தின் தழுவல் என்று இணையத்தில் புலம்பாதார் இல்லை.வேற்று மொழி படங்களின் தழுவல்..புதிதாக இப்போது நடந்து விடவில்லை.எப்போதும் நடைபெறும் ஒன்றுதான் இது அவ்வப்போது அறிவுஜீவிகள் சிலர்..இந்தப் படத் தழுவல்..அந்தப் படத் தழுவல் என தன் மேதாவித் தனத்தைக் காட்டுவர்.நம்மவர்களும்..தனது படம் எந்தப் படத்தின் தழுவல் என போட்டுவிடலாம்.என்ன ஒன்று..அப்படி உரிமையைப் பெறாமல் போட்டுவிட்டால்..பின் அவன் நாம் முதுகில் ஏறி நஷ்டஈடாக பல ஆயிரம் டாலர்கள் கேட்டுவிடுவான். நாம் கண்டுக் கொள்ளாமல் இருந்துவிட்டால் அவனுக்கு நம் மொழிப் படம் பற்றி தெரியவாப் போகிறது.

இதைத் தவிர்க்கவே..முன்னர் தமிழ் நாவல்கள் அந்த உரிமையாளர்களிடம் இருந்து உரிமை பெற்று..அவர்கள் பெயரையும் தாங்கி படமாக வந்தது.தமிழில் இல்லாத நாவல்களா?

அவற்றில் சிலவற்றை பார்ப்போம்..

பல ஆண்டுகளுக்கு முன்னரே வந்து..சக்கை போடு போட்ட படம் வடுவூர் துரைசாமி ஐயங்காரின் திகம்பர சாமியார்.இதில் எம்.என்.நம்பியார் பல வேடங்கள் தாங்கி வருவார்.

பின்னர் கல்கியின் படைப்புகள் தியாக பூமி,கள்வனின் காதலி,பார்த்திபன் கனவு ஆகியவை திரைப்படங்களாக வந்தன.

தேவனின் 'கோமதியின் காதலன்' டி.ஆர்.ராமசந்திரன்,சாவித்திரி நடிக்க படமாக வந்தது.

போலீஸ்காரன் மகள்,பிரஸிடெண்ட் பஞ்சாட்சரம்,நாலு வேலி


 நிலம் ஆகியவை பி.எஸ்.ராமையாவின் எழுத்துகள்.

விந்தன் எழுதிய 'பாலும் பாவையும்' கல்யாணியின் கணவன் என்ற பெயரில் படமாய் வந்தது.

அகிலனின் 'பாவை விளக்கு'குலமகள் ராதை' ஆகியவை வெள்ளித்திரையில் நம்மை மகிழ்வித்தவை.

உமாசந்திரன் எழுதிய பிரபல தொடர்'முள்ளும் மலரும்" மா பெரும் வெற்றியடைந்த திரைப்படமாகும்.

ஜெயகாந்தனின்'சில நேரங்களில் சில மனிதர்கள்'யாருக்காக அழுதான், உன்னைப் போல் ஒருவன் திரைப்படமாகியவை.உன்னைப் போல் ஒருவன் தேசிய விருது பெற்ற படம்.

கொத்தமங்கலம் சுப்பு எழுதிய நீண்ட நாவல் 'தில்லானா மோகனம்பாள்' அதை அருமையான திரைக்கதையாக்கி திரையில் வடித்தவர் ஏ.பி.நாகராஜன்.

தி.ஜானகிராமனின் 'மோகமுள்' இந்திரா பார்த்தசாரதியின்'குருதிப் புனல்' நாவல்களே

லக்ஷ்மியின் 'பெண்மனம்' நாவல் கலைஞர் வசனத்தில் இருவர் உள்ளமாய் வந்தது.

வை.மு.கோதைநாயகியின் கதை 'சித்தி' என்னும் பெயரில் திரைப்படமானது

சுஜாதாவின், பிரியா..கரையெல்லாம் செண்பகப் பூ' போன்ற நாவல்கள் திரைப்படமாயின.

இதுபோல தமிழில் அருமையான நாவல்கள் பல உள்ளன..அவற்றை தேடி எடுத்து திரைப்படமாக்கினால்..வேற்று மொழி தழுவ படங்களைவிட சிறப்பான கதையம்சம் கிடைக்கும்..(உம்-நா.பார்த்தசாரதியின் குறிஞ்சிமலர்)
நான் மேலே சொன்ன அனைத்துப் படங்களிலும் டைடில் கார்டில்..அந்தந்த எழுத்தாளர்களின் பெயர் வரும்.ஆகவே பிரச்னைக்கு இடமில்லை.
சம்பந்தப்பட்டவர்கள் சிந்திப்பார்களா?

இது தொடர்பான தமிழ் உதயத்தின் இந்த இடுகையையும் பார்க்கவும்  

http://tamiluthayam.blogspot.com/2010/12/blog-post_09.html

Tuesday, November 30, 2010

சோம்னாத் கோயில் (கவிதை)


சோம்னாத் கோயிலை
கஜினி
சூறையாடினான்
படிக்கும்
மகள் கேட்டாள்
கோவிலை சூறையாடுவது
நடக்குமா
அலைவரிசையில் நடக்கையில்
இது நடக்காதா
என்றிட்டான் மகன்

Monday, November 29, 2010

குறள் இன்பம்- 3

வள்ளுவனின் சொல் விளையாட்டுகளை கீழ்கண்ட குறள்களில் இந்த இடுகையில் காணலாம்..
ஆற்றுதல் என்னும் சொல்லை வைத்து ஈகை அதிகாரத்தில் ஐந்தாவது குறளாக அவர் சொல்வது என்ன பார்க்கலாம்.

ஆற்றுவா ராற்றல் பசியாற்றல் அப்பசியை
மாற்றுவா ராற்றலிற் பின்

பசியைப் பொறுத்துக் கொண்டு விரதம் இருப்பது சிறந்தது என அதைக் கடைப்பிடிப்பதைவிடப் பசியோடிருக்கும் ஒருவருக்கு உணவு அளிப்பதே சிறந்ததாகும்.

அடுத்து..ஒருவர் மீது ஏற்படும் பழியை விடக் கொடுமையானது..அவர் வாழ்வில் வேறேதும் இருக்க முடியாது.புகழ் அதிகாரத்தில் இதையே வசை,இசை,வாழ்வார் போன்ற சொற்களால் விளையாடியுள்ளார்.

வசையொழிய வாழ்வாரே வாழ்வார் இசையொழிய
வாழ்வாரே வாழா தவர்

பழி உண்டாகாமல் வாழும் வாழ்க்கையே வாழ்க்கை எனப்படும்.புகழ் இல்லாதவர் வாழ்வதும்,வாழாததும் ஒன்று போலத்தான்

தவம் அதிகாரத்தில் பத்தாவது குறள் இது.இலர்,பலர்.சிலர் என வள்ளுவனின் விளையாட்டு இக்குறளில்

இலர்பல ராகிய காரணம் நோற்பார்
சிலர்பலர் நோலா தவர்

ஆற்றலற்றவர்கள் பலராக இருப்பதற்குக் காரணம், மன உறுதி கொண்டவர் சிலராக இருப்பதும்..உறுதியற்றவர் பலராக இருப்பதும் தான்..

அடுத்து அவனது சொல்விளையாட்டு..இறந்தார்,துறந்தார் என்பதை வைத்து.வெகுளாமை யில் கடைசி குறள்

இறந்தார் இறந்தா ரனையர் சினத்தைத்
துறந்தார் துறந்தார் துணை

எல்லையற்ற சினம் கொள்பவர்கள் இறந்தவர்களுக்கு ஒப்பாவார்கள்.சினத்தை அறவே துறந்தவர் முற்றும் துறந்த துறவிக்கு ஒப்பாவர்.

(அடுத்த இடுகையில் சந்திப்போம்)

வந்தாரை வாழவைக்கும்..வந்தாரிடம் இடிபடும் தமிழன்..

தமிழனுக்கு என்று ஒரு குணம் உண்டு..

அது..தன்னை நாடி வருபவர்களுக்கு ஆதரவு கரம் நீட்டுதல்.அதே நேரம் தன்னை மிதிப்பவர்களை சகித்துக் கொள்வது.

இந்தியாவில் எந்த மாநிலத்திலும்..அந்த மாநிலத்தைச் சேர்ந்த, அந்த மொழி தெரிந்தவரே முதல்வராக முடியும்.

ஆனால்..தமிழகத்தில்..யார் வேணுமானாலும் முதல்வர் ஆகலாம்.

அதுபோல..தமிழ்த் திரைப்பட உலகில் அனைத்து திராவிட மொழிகாரர்களும் உள்ளனர்.

அவர்கள் திறமையை ஊக்குவிப்பவன் தமிழன்.அவனைப் பொறுத்தவரை கலைக்கு மொழி பேதம் பார்க்கக் கூடாது என்று எண்ணுபவன்.தமிழ் தெரிந்த நடிகையைவிட..பிற மொழி நடிகைகளை ஆதரிப்பவன் அவன்.

ஆனால்..மற்ற மொழிக்காரர்கள் அப்படியா இருக்கிறார்கள்...இல்லையே..

மலையாளப் படங்களில்..அசட்டுப் பாத்திரங்கள் ஏதேனும் வருமானால்..அவன் தமிழ் பேசுபவனாக வருவான்..ஆனால் நாமோ..மதிப்பு மிக்க ஒரு போலீஸ் அதிகாரி பாத்திரமானாலும்..பொருத்தமானால்..ஒரு மலையாளி நடிகரை நடிக்க வைப்போம்.

ஆனால்..அவர்கள் அப்படி இல்லையே..

50 ஆண்டுகள் கமல் திரைவாழ்க்கையைப் பாராட்ட கேரள அரசு முன் வந்தது.ஆனால் அதை மலையாளத் திரைப்படத்தினர் புறக்கணித்தனர்.

தற்போது கிளம்பியிருக்கும் அடுத்த சர்ச்சை..ஆர்யாவின் தமிழ்ப்படங்கள் பேச்சைப் பற்றிய சர்ச்சை..

அதை கண்டித்த குகநாதனைப் பாராட்டும் அதே நேரத்தில்..நடிகர் சங்கம் அப்படி நடந்துக் கொள்ளவில்லையே என மன வருத்தம் ஏற்படுகிறது..அதே நேரம் அவர்கள் செயலும் சரியே..ஏனெனில்..அது தென்னிந்திய நடிகர் சங்கம்.

ஆனால்..தனி மனிதனான நாம்..என்ன செய்ய வேண்டும்..

கலைஞர்களுக்கு நாவடக்கம் வேண்டும்..அவர்கள் எதை வேணுமானாலும் பேசுவார்கள்..அப்படிப்பட்டவர்களை நாம் ஆதரிக்க வேண்டுமா?

கண்டிப்பாக உப்பைத்தின்ற ஆர்யா..தண்ணீர் குடித்தாக வேண்டும்...அவர் படங்களை புறக்கணிப்பதே தமிழனான நாம் செய்யும் எதிர்ப்பாகும்.அதை விடுத்து..அவர் உருவப் படத்திற்கு செருப்பு மாலை போடுவதுடன் திருப்தியடைந்துவிடக் கூடாது.

Sunday, November 28, 2010

சென்னை நகரில் காணாமல்போன திரையரங்குகள்-3

சென்ற இரு இடுகைகளில் பல திரையரங்குகள் மூடப்பட்டதைப் பார்த்தோம்..இந்த இடுகையில் மேலும் சில..

ஆற்காட் சாலையில் ராம் திரையரங்கு பிரபலமாயிருந்த ஒன்று..அது இன்று மூடப்பட்டு பத்மாராம் கல்யாண மாளிகையாய் திகழ்கிறது.
பரணி ஸ்டூடியோவை ஒட்டி பரணி என்ற பெயரிலேயே ஒரு திரையரங்கு சில ஆண்டுகள் இருந்தது.இப்போது மொத்த இடமுமே பரணி ஹாஸ்பிடல் ஆகிவிட்டது.
நெல்சன் மாணிக்கம் சாலையில் பழனியப்பா திரையரங்கு இன்று வர்த்தக கட்டிடமாகி விட்டது.அதூ போலவே ஜி.என்.செட்டி சாலையில் சன் தியேட்டர் சன் பிளாசா வாகிவிட்டது.
பாண்டி பஜாரில் நடிகை டி.ஆர்.ராஜகுமாரிக்கு சொந்தமான தியேட்டர் ஒன்று இருந்தது..அது குத்தகைக்கு விடப்பட்டு சாஹ்னிஸ் என்ற பெயரில் பல ஆண்டுகள் நடந்து பின் ராஜகுமாரி என்ற பெயரில் சில ஆண்டுகள் நடந்தது.பெரும்பாலும் ஆங்கிலப் படங்களே திரையிடப் படும்.இன்றோ ..பெரிய வியாபாரத் தளம் ஆகிவிட்டது.
பெரம்பூர் வாசிகளால் மறக்க முடியா திரையரங்கு வீனஸ்..அதுவும் இப்போது மூடப்பட்டு விட்டது.
வால்டாக்ஸ் தெருவில் ஒற்றவாடை என்னும் தியேட்டர் இருந்தது.பல பிரபல நாடகங்கள் அங்குதான் நடைபெறும்.அந்த அரங்கு பத்மனாபா என்று திரையரங்காய் மாற்றப்பட்டது.அதுவும் இப்போது மூடப்பட்டு விட்டது


ராயபுரத்தில் பிரைட்டன் திரையரங்கு..பழைய ஆங்கிலப்படங்கள் வெளியாகும்.
பாரிமுனை பகுதியில் வேலை புரிபவர்களால் மறக்க முடியா திரையரங்கு மினர்வா..ஆங்கிலப் படங்கள் இதில் வரும் நான்கு மணிக் காட்சியின் நிரந்தர பார்வையாளன் நான்
திருவொற்றியூர் காலடிப்பேட்டையில் தங்கம் தியேட்டர்..,வில்லிவாக்கம் நாதமுனி,ஓட்டேரியில் சரஸ்வதி,அமைந்தகரை லட்சுமி,மேகலா(நிறைய எம்.ஜி.ஆர்., படங்கள் இங்கு பார்த்திருக்கிறேன்) ஆகியவையும் இப்போது செயல்படவில்லை என தெரிகிறது.
தவிர்த்து கீழ்கண்ட திரையரங்குகள் இப்போது உள்ளனவா..விவரம் புரிந்தவர் தெரிவிக்கவும்..
வசந்தி,
சரவணா
அசோக்
நடராஜ்
செலக்ட்
முருகன்
கிரௌன்

Saturday, November 27, 2010

கொக்கும்....பூனையும் (கவிதை)

ஓடு மீன் ஓட

உறு மீன் வர

காத்திருந்தது கொக்கு

பார்வை இல்லை

என்பது மறந்து

பூனையோ

தன் கண் மூடி

உலகே இருள்

என்றது

சென்னை நகரில் காணாமல் போன திரையரங்குகள் - 2

சென்ற இடுகையில் அண்ணாசாலையில் காணாமல் போன திரையரங்குகள் பற்றி பார்த்தோம்..

இந்த இடுகை சென்னையில் மற்ற இடங்களில் காணாமல் போன அரங்குகள்..

மயிலாப்பூர் பகுதியில் இருந்த திரையரங்கு இரண்டு.ஒன்று காமதேனு..மற்றது கபாலி.இவ்விரு திரையரங்கிலும் புது படங்கள் வெளிவராவிடினும்..ஃபர்ஸ்ட் சேஞ்ச்

என்று சொல்லப்பட்ட..திரையரங்கில் வெளியாகி எடுக்கப்பட்ட திரைப்படங்கள் அடுத்து இவற்றில் வரும்..இன்று கபாலி இருந்த இடம் அடுக்ககமாகவும்..காமதேனு இருந்த இடம் கல்யாண மண்டபமாகவும் வந்துவிட்டன.

அடுத்து அடையார் பகுதியில் இருந்த ஈராஸ் திரையரங்கு..இது மறைந்து இன்று கார்களுக்கான ஷோரூம் ஆகிவிட்டது.

அயனாவரம் பகுதியில் இருந்த திரையரங்கு சயானி..இதில் சிவாஜி,எம்.ஜி.ஆர்., படங்கள் வருவதுண்டு.கெல்லீஸ் பகுதியில் இருந்த உமா தியேட்டரும் இன்று மறைந்து பல நிறுவனங்களுக்கான வர்த்தகக் கட்டிடங்கள் வந்துவிட்டன.இத்திரையரங்கில் தான் காதலிக்க நேரமில்லை வெள்ளி விழா கொண்டாடியது. பதினாறு வயதினிலே படம் இங்கு வெளியானது .

அடுத்து புரசைவாக்கம் பகுதியில் இருந்த ராக்ஸி..மிகப் பழமையான திரையரங்கு..இங்கு பாவமன்னிப்பு வெள்ளிவிழா கண்டது.

இதே பகுதியில் இருந்த புவனேஸ்வரி..சிவாஜி படங்கள் கண்டிப்பாக இத் திரையரங்கில் வரும் என்பது எழுதப்படாத விதியாய் இருந்தது.

அடுத்து, தங்கசாலை பகுதியில் இருந்த ஸ்ரீகிருஷ்ணா..இப்பகுதியில்..வசதி மிக்க திரையரங்காய் திகழ்ந்தது.

தியாகராயநகர் பகுதியில் இருந்த நடிகர் நாகெஷிற்கு சொந்தமான நாகேஷ் திரையரங்கின் ஆயுள் மிகவும் குறைவு..வந்த சில ஆண்டுகளிலேயே பல சர்ச்சைகளை சந்தித்த இத் திரையரங்கு..இன்று கல்யாண மண்டபமாக ஆகிவிட்டது.

மாநகர வரி கட்டாததால் அண்ணாசாலையில் ஜெயப்ரதா(முன்னாள் மிட்லண்ட்) பூட்டிக் கிடக்கிறது.

இப்படி பல திரையரங்குகள் ..மறைந்தாலும்..அவற்றை ஈடு கட்ட பல மல்டிப்லக்ஸ் வந்தாலும்..சாமான்யன்..குறைந்த செலவில் இத்திரையரங்கில் பார்க்க முடிந்த படங்களை..அதிகக் கட்டணத்தில் தானே பார்க்க முடிகிறது.

உதாரணமாக தனித் திரையரங்கான மெலடியில் கட்டணம் 50 ரூபாய்..ஆனால் சத்யம் போன்ற திரையரங்கில் 120 ரூபாய் ஆகிறதே.

Friday, November 26, 2010

தேங்காய்..மாங்காய்..பட்டாணி..சுண்டல்(26-11-10)

பீகார் சட்டசபைக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப் பட்டுள்ள M.L.A., க்களில் 141 பேர் மீது கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளதாம்.இதில் அனைத்துக் கட்சியினரும் அடக்கம்.ஒரு எம்.எல்.ஏ., வாக கிரிமினலாயிருந்தால் வரமுடியும் என தகுதி நிர்ணயம் செய்தால் என்ன? வாழ்க இந்திய ஜனநாயகம்.
2)ஒரு அரசு ஊழியன் கிரிமினல் என்றால் அவன் வேலை பறி போகும்..பாவம் அவர்கள் மட்டும் என்ன பாவம் செய்தார்கள்?
3)புகை பிடிக்கும் பழக்கம் இல்லாதவரா நீங்கள்? அப்படியாயின் அதனால் விளையும் கெடுதல் உங்களுக்கில்லை என மகிழாதீர்கள்.புகைப்பிடிப்பவர் அருகில் நீங்கள் நின்றாலே..அந்தக் கேடு உங்களை வந்து அடையும்.ஆண்டு ஒன்றுக்கு 51 லட்சம் நபர்கள் புகை பழக்கத்தால் உயிரிழக்கின்றனராம்.அதில் பிறர் புகைப் பிடிப்பதால் ..அவர்கள் அருகில் உள்ளவர்கள் 6,03,000 நபர்கள் இறக்கின்றனராம்.
4)அரசியல்வாதிகள் மட்டுமல்ல ஊரை கெடுப்பவர்கள்.ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளிலும் கறுப்பு ஆடுகள் உண்டு.இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரக அதிகாரி மாதுரி இந்திய ரகசியங்களை பாகிஸ்தானின் உளவு ஏஜென்சியான ஐ.எஸ்.ஐ., க்கு விற்றதாக கைது செய்யப்பட்டது பழைய கதை.இப்போது உள்துறை ரகசியங்களை விற்றதாக ரவீந்தர் சிங் என்னும் மத்திய உள்துறை அமைச்சகத்தில் உள்நாட்டு பாதுகாப்பு அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.பாவம் பாரத அன்னை..இப்படி
எத்தனைப் பேரைத்தான் தாங்குவாள்?
5) இந்த ஆண்டும் தமிழகத்திற்குத் தேவையான மழை பெய்துள்ளது.அண்டை மாநிலம் தண்ணீர் தரவில்லை என்றால் என்ன? நான் இருக்கிறேன் உனக்குத் தேவையானதைத் தர என்கிறது இயற்கை.அந்த நீரை சரியானமுறையில் தேக்கி வைக்கும் சக்தி அரசுக்கு இல்லை..மழைநீரை சரியான முறையில் தேக்கி வைத்தால் நாம் தண்ணீருக்காக பிறரிடம் கை ஏந்தும் நிலையைத் தவிர்க்கலாம்
6)இந்தியாவில் 30 கோடியே 60 லட்சம் பேருக்கு மட்டுமே சுகாதாரமான கழிவறை உள்ளதாம்.65 கோடிக்கு மேல் இன்னும் திறந்தவெளியையே கழிப்பிடமாக பயன்படுத்துகின்றனராம்.
7) ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ராகத் என்னும் 37 வயது பெண்ணிற்கு அபிதாப் நடத்தும் சோனி ஹிந்தித் தொலைக்காட்சியில் கவுன் பனேகா குரோர்பதி நிகழ்ச்சியில் 1 கோடி பரிசு கிடத்துள்ளதாம்.வாழ்த்துகள் ராகத்..பெண்களே முன்னேறுங்கள்.

Thursday, November 25, 2010

பீகார் வாக்காளார்கள் நம்மை ஏமாற்றிவிட்டனர்

காங்கிரஸ் கட்சிக்கு இது போதாத காலம்..

சசி தரூர்..ஐ.பி.எல்., ஊழல்
கல்மாடி காமன்வெல்த் ஊழல்.
ஆதர்ஷ் ஹவுசிங் ஊழல்
உச்ச நீதி மன்றத்தின் கண்டனங்கள்
ஸ்பெக்ட்ரம் ஊழலில் தாமதம்

என தலைவலிக்கு மேல் தலைவலியாய் வந்துக் கொண்டிருக்கும் வேளையில்..மகுடமாக பீகார் சட்டசபைத் தேர்தலில் நான்கே இடத்தில் வெற்றி.
ராகுலின் அதீத நம்பிக்கை தவிடுபொடியானது.
காங்கிரஸின் இந்தத் தோல்வியால் தி.மு.க., வட்டாரம் சந்தோசத்தில் இருக்கும்.
இளங்கோவன் வாயடைத்துக் கிடப்பார்.தங்கபாலுவின் சோனியா துதி குறையும்.இளைஞர் காங்கிரஸ் அடங்கி இருப்பர்.
பீகாரில் குறிப்பிட்ட அளவு வெற்றி பெற்றிருந்தாலும்..தமிழகத்தில் இவர்களை கையில் பிடித்திருக்க முடியாது.
சட்டசபைத் தேர்தலில் அதிக இடம்,கூட்டணி ஆட்சி,அமைச்சர் பதவி எல்லாம் பகல் கனவாகிவிட்டது.
பீகாரில் சற்று வெற்றி பெற்று..தமிழகத்திலும் கூட்டணியில் சேரக் கட்சியின்றி..தனித்து நின்று...ம்ம்..ம்ம்..அதைப் பார்க்க ஆவலாய் இருந்த நமக்கு..அப்படிப்பட்ட ஒரு நிலையை உருவாக்கித் தராத பீகார் வாக்காளர்கள் மீது சற்று கோபமே வருகிறது.

லிவிங் டுகெதர்

லிவிங்க் டுகெதர் பற்றி இப்போது இணயத்தில் நிறைய பதிவர்கள் எழுதி வருகின்றனர் பல மாறுபட்டக் கருத்துகளுடன்.
குஷ்பூ வழக்கில் உச்சநீதி மன்ற நீதிபதிகள் சொன்னதை நான் அன்று ஒரு இடுகையாக இட்டேன்..
அந்த மீள் பதிவு இதோ

ஆண்டவன் கிருஷ்ணனும்..ராதாவும் லிவிங் டுகெதர்

உச்சநீதி மன்றம்..திருமணமாகாத ஆணும்..பெண்ணும் சேர்ந்து வாழ்வது என்பதை குற்றம் என்று சொல்ல முடியாது என தன் கருத்தை சொல்லியுள்ளது.

வயது வந்த இருவர் சேர்ந்து வாழ நினைப்பதில் என்ன தவறு இருக்கமுடியும்?இது குற்றமும் அல்ல..குற்றம் என்று சொல்லவும் முடியாது என்று உச்ச நீதி மன்ற தலைமை நீதிபதியும்..மற்றும் இரு நீதிபதிகளும் கருத்து தெரிவித்துள்ளனர்.

கடவுளான கிருஷ்ணரும்..ராதாவும் கூட இதிகாசத்தில் ஒன்று சேர்ந்து தான் வாழ்ந்துள்ளதாக சொல்லப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளனர்.

நடிகை குஷ்பூ கற்பு பற்றி 2005ல் சில பத்திரிகைகளில்..கல்யாணத்திற்கு முன் உறவு வைப்பதை குறித்து தன் ஆதரவான கருத்தைத் தெரிவித்திருந்தார்.அதனால் கொதித்து (!!!!) எழுந்த மக்களால் 22 வழக்குகள் அவர் மீது போடப்பட்டன. அவற்றை தள்ளுபடி செய்யச் சொல்லி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.அந்த மனு மீதான விசாரணையில்..தங்களது தீர்ப்பை தள்ளி வைத்துள்ள நீதிபதிகள்..மேற் கூறியவாறு தங்களது கருத்தையும் கூறியுள்ளனர்.

மேலும் நீதிபதிகள்..குஷ்பூவிற்கு எதிராக வாதாடும் வக்கீல்களிடம் 'இது எந்தப் பிரிவின் கீழ் குற்றம்' எனக் கேட்டதுடன்..ஆர்ட்டிகள் 21 ன் படி..வாழும் உரிமையையும்..சுதந்திரமும் ஒருவரின் அடிப்படை உரிமை என்பதையும் நினைவூட்டினர்.மேலும் அவர்கள் கூறுகையில் 'குஷ்பூ தன் தனிப்பட்டக் கருத்தைக் கூறியுள்ளார்....இது எந்த விதத்தில் உங்களை பாதித்துள்ளது..அவர் கூறியது அவரது தனிப்பட்டக் கருத்து.அது எந்த பிரிவின் கீழ் குற்றமாகிறது..குஷ்பூ..இப்படிக் கூறிய்தைக் கேட்டு எவ்வளவு பெண்கள் வீட்டை விட்டுச் சென்றனர்..எனக் கூற முடியுமா?' என்றும் கேட்டார்கள்.மேலும் வாதம் செய்பவருக்கு பெண் குழந்தைகள் இருக்கிறதா எனக் கேட்டவர்கள் 'இல்லை' என்றதும் நீங்கள் எந்த வகையில் இதனால் பாதிக்கப் பட்டுள்ளீர்கள்.. என்றும் கேட்டனர்.

உச்ச நீதி மன்றத்தில் இவ்வழக்கிற்காக ஆஜரான குஷ்பூ..வக்கீல்கள் அமரும் முதல் வரிசையில் அமர்ந்திருந்தார்.

இச்சமயத்தில் நான் சமீபத்தில் படித்த ஒரு செய்தியையும் உங்களுடன் பகிர்ந்துக் கொள்கிறேன்..

இப்போதெல்லாம்..திருமணமாகி..விவாகரத்து பெறும் தம்பதிகள்..தங்கள் நண்பர்களுக்கு ஒரு பார்ட்டி கொடுத்து..மன மகிழ்வோடு நட்போடு பிரிகின்றனர்..'இனி நாம் கணவன் மனைவி இல்லை..நண்பர்கள்' என்று.

கணவனும் ..மனைவியும் நண்பர்கள் இனி என பிரியும் போது..நண்பர்கள்..கணவன்..மனைவியாக திருமணமாகாமல் லிவிங்க் டுகெதரும் தவறு இல்லை போலும்!!

Wednesday, November 24, 2010

மரண அடி வாங்கிய காங்கிரஸ்

கழுதைத் தேய்ந்து கட்டெறும்பு ஆனது என ஒரு சொலவடை உண்டு..

காங்கிரஸ் கட்சி விஷயத்தில் அது நடந்திருக்கிறது.

ஏதோ உத்தர பிரதேசத்தில் தனித்து நின்று சில தொகுதிகள் வென்றதும்..இனி நாம் தான் என்ற இறுமாப்பும்..பேச்சில் ஆணவமும் கொண்டு திகழ்ந்தது காங்கிரஸ்.

அவர்களுக்கு சரியான பாடம் கற்பித்துவிட்டது பீகார்..

பீகார் மக்களே..காங்கிரஸிற்கு சரியான பாடம் புகட்டிய உங்கள் அனைவருக்கும் நன்றி.

கடந்த சில நாட்களாக தமிழகத்தில் அதன் ஆட்டம் அதிகமாய் இருந்தது.திராவிடக் கட்சிகளும் அதன் துணையிருந்தால் தான் ஆட்சி அமைக்க முடியும் என்னும் எண்ணத்தில் உள்ளன.அந்த எண்ணம் எவ்வளவு தவறானது என பீகார் முடிவுகள் தெரிவிக்கின்றன.

அங்கும் மூன்று அணிகள்..

நிதிஷ்குமார்..பி.ஜே.பி., அணி ஒரு புறம்

லாலு, பாஸ்வான் அணி ஒரு புறம்

காங்கிரஸ்

சாதாரணமாக இந்நிலையில் எந்த ஒரு அணிக்கும் பெரும்பான்மை கிடைக்காது என்றே அனைவருக்கும் தோன்றும்..ஆனால் நிதிஷ்குமாருக்கு மாபெரும் வெற்றியைக் கொடுத்துள்ளனர் மக்கள்.

பீகாரில்..முடிவிற்குப் பிறகு தமிழகத்தில் பேரத்தை ஆரம்பிக்கலாம் என்ற காங்கிரஸின் எண்ணம் தவிடு பொடியாய்விட்டது.

திராவிடக் கட்சிகளே..மீண்டும் சொல்கிறேன் காங்கிரசை கழட்டிவிடுங்கள்..தவிர்த்து உங்களை நம்பி வரும் மற்ற கட்சிகளுடன் கூட்டு வையுங்கள்.கண்டிப்பாக மக்கள் ஆதரவு உங்களுக்குக் கிட்டும்.

காங்கிரஸ்தான் உங்கள் கூட்டணியில் வேண்டும் என்றால்..உங்களை காப்பாற்ற முடியாது.

கடைசி நேர பேரம் பலனளிக்காது.

Tuesday, November 23, 2010

திரைப்பட இயக்குனர்கள்-9 C.V.ஸ்ரீதர்

இந்தத் தொடரில் இன்று இயக்குநர் ஸ்ரீதர் அவர்களைப் பற்றி பார்ப்போம்.

ஸ்ரீதர்...கிட்டத்தட்ட 40 ஆண்டுகள் திரையில் மக்களை..குறிப்பாக இளைஞர்களை தன் படங்களின் மூலம் கட்டிப் போட்டவர்.

ஆகஸ்ட் 16, 1933 ல் மதுராந்தகம் அருகே ஒரு கிராமத்தில் பிறந்த இவர்..திரையுலகில் பிரவேசிக்க எண்ணி 'ரத்தபாசம்' என்னும் கதையை நாடகமாக்கி டி.கே.சண்முகத்திடம் எடுத்துச் சென்றார்.அந்த ஸ்கிரிப்டைப் படித்து அசந்த ஷண்முகம்..அதை நாடகமாகவும், பின் திரைப்படமாகவும் எடுத்தார்.பின் ஸ்ரீதர் பல படங்களுக்கு கதை,வசனம் எழுதினார்.அவ்ற்றில் குறிப்பிடத்தக்கவை..எதிர்பாராதது,அமர தீபம் ,புனர்ஜென்மம் ஆகியவை

பின் 1959ல் கல்யாணபரிசு மூலம் இயக்குநர் ஆனார்.அந்த நாளில் காதலை மிகவும் நளினமாகவும்..உன்னதமாகவும் காட்டிய பெருமை இவரையேச் சேரும்.ஆதலால் அன்றைய இளைஞர்கள் விரும்பிய இயக்குநராய் திகழ்ந்தார்.

1961ல் பின் தன் சொந்த நிறுவனமான 'சித்ராலயா'வைத் துவக்கி..தமிழ்,தெலுங்கு,கன்னடம்,ஹிந்தி என பல படங்களை இயக்கினார்.

காதலிக்க நேரமில்லை..தமிழ்த்திரையுலகு இருக்கும் வரை பேசப்படப்போகும் நகைச்சுவைப் படம்..இது போன்ற படம் ஒன்று இதுவரை மீண்டும் வரவில்லை எனலாம்.பாலையா,நாகேஷ்,முத்துராமன்,ரவிசந்திரன் (அறிமுகம்),காஞ்சனா(அறிமுகம்) ஆகியோர் நடித்திருந்தனர்.இப்படம் இந்தியில் 'ப்யார் கியே ஜா' என்ற பெயரில் வந்து வெற்றி பெற்றது.ஹிந்தியில் கிஷோர்குமார் நடித்தார்.

பின் நெஞ்சில் ஓர் ஆலயம்,தேன்நிலவு,நெஞ்சம் மறப்பதில்லை என பல வெற்றிபடங்களை அளித்தார் ஸ்ரீதர்.அவரின் மற்றைய குறிப்பிடத்தக்க படங்கள்..

ஊட்டி வரை உறவு

சிவந்த மண்

அவளுக்கென்று ஒரு மனம்

போலீஸ்காரன் மகள்
கொடிமலர்

சுமைதாங்கி

வெண்ணிற ஆடை (ஜெ நடித்த முதல் தமிழ்ப் படம்)

விடிவெள்ளி

இளைமை ஊஞ்சலாடுகிறது

அழகே உன்னை ஆராதிக்கிறேன்

நினைவெல்லாம் நித்யா

துடிக்கும் கரங்கள்

ஓடை நதியாகிறது

ஆலய தீபம்

தென்றலே என்னைத் தொடு

கலைக்கோயில்

ஆகியவை
ஹிந்தியில் பியார் கியே ஜா,நஜ்ரானா,தில் ஏக் மந்திர்,தர்த்தி ஆகியவற்றை குறிப்பிடலாம்.
இவருக்கென்று ஒரு தனி டீமே இருந்தது...இசை விஸ்வனாதன்ராமமூர்த்தி,ஆர்ட் கங்காஒளிப்பதிவு வின்சென்ட்,எடிட்டிங் ஷங்கர்,பாட்ல்கள் கண்ணதாசன்,இவருக்கு வசன உதவியாளராக சித்ராலயா கோபு,துணை இயக்குனராக சி.வி.ராஜேந்திரன் (பின் ராஜேந்திரனும் பிரபல இயக்குனர் ஆனார்) ஆகியோரைச் சொல்லலாம்.எம்.ஜி.ஆரை வைத்து மீனவ நண்பன்,உரிமைக் குரல் ஆகிய படங்களை இயக்கினார்.
-

பின் கடைசி சில வருடங்கள் பக்கவாத நோயால் அவதிப் பட்டு வந்தவர்..ஒருமுறை ரஜினி உதவுவதாகக் கூறிய போதும்..உங்கள் உதவி வேண்டாம்..நான் மீண்டு வருவேன்..உங்கள் கால்ஷீட் கொடுங்கள் போதும்.. நானே தயாரித்து..இயக்குகிறேன் என்றார்.

ஆனால் குணம் அடையாமலேயே 2008ல் மறைந்தார்.
அவர் படத்திலிருந்து ஒரு பாடல்